articles

img

மாமல்லபுரம் நேரு ஓய்வு இல்லம் கை மாறுகிறதா? - சி. ஸ்ரீராமுலு

தென்னிந்தியாவில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க சுற்றுலா தளங்களில்  ஒன்று மாமல்லபுரம். கடற்கரை கோயில் பல்லவர் கால சிற்பக் கலைகளை உள்ளடக்கிய அழகிய சுற்றுலாத்தலம். 

இங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம்,  மண்டபங்கள், புலிக்குகை, கலங்கரை விளக்கம் உள்ளிட்டவற்றை காண்பதற்கு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடு முறை தினங்களில், ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உள்நாடு  மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி கள் ஒரு சிலர் குடும்பத்தோடு ஓட்டல், ரிசார்ட்களில் 2 லிருந்து 4 நாட்கள் தங்கி திருக்கழுக்குன்றம், முட்டுக்காடு படகு இல்லம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருவார்கள்.

கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்தில் குடி சையில் தான் ஓட்டல், ரிசார்ட்கள் இயங்கி வந்தன. அப்போது, சுற்றுலா பயணிகள் தங்க போதிய இட வசதியும் கிடையாது. இதை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் நகரின் நுழைவு பகுதிக்கு அருகே புறவழிச் சாலை சந்திப்பில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல  வாரியத்தின் சார்பில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெயரில் ஓய்வு இல்லம் 15 அறைகளுடன் கட்டப்பட்டது. 1988 முதல் இயங்கி வரும் இந்த ஓய்வு இல்லத்தில் தரை தளம், மேல் தளம் ஆகியவற்றில் தலா ஐந்து அறைகள் உள்ளன. இத்துடன், மேல்தளத்தில் கருத்தரங்க கூடம்  அமைந்துள்ளது.

ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி,வெளி மாவட்டங்களில், இருந்து மாமல்ல புரத்திற்கு வரும் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற பயணிகள் மிக குறைந்த கட்டணத்தில் நேரு இல்லத்தை பயன்படுத்தி வந்தனர். (தொழிலாளர் நிதி செலுத்தும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வாடகை ரூ.140, சுற்றுலா பயணிகளுக்கு ரூ.750 என வசூலிக்கப்பட்டு வந்தது. நகரின் பிரதான இடத்தில் இந்த விடுதிக்கு நாளுக்கு நாள் பயணியர் கூட்டம் அதிகரித்தது.

இந்நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த ஓய்வு இல்ல வளாகத்தில் பெரும் பகுதி திறந்த வெளியாக இருந்தது. பிறகு,  வாரியத்தின் வருவாய்  கருதி,  தனியார் உணவகமான அடையார் ஆனந்த பவனுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த உணவகம் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது.

அதிமுக ஆட்சியின் அலங்கோலம்!

இச்சூழலில், நேரு ஓய்வு இல்லம் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போதிய பராமரிப்பின்றி சீரழிந்தது. புதர் மண்டி கிடந்தது. கட்டி டங்களில் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளித்தது. பாழடைந்து இடிந்து விழும் நிலைக்கு சென்றது. இதனால் யாரும் இங்கு தங்குவதில்லை. சில ஆண்டுகளாக மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியது.இருப்பி னும் இதனை சீரமைக்க தொழி லாளர் நலத்துறையும், நல வாரியமும் முன்வரவில்லை.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு,  புதிதாக பொறுப்பேற்ற தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து விட்டு அதே  இடத்தில் புதிய கட்டிடம் கட்டி  சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு  கொண்டு வர பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பழைய கட்டிடத்தின் சுவர் மற்றும் பெயர்ந்துள்ள மேற்கூரை மட்டுமே தற்போது சீரமைத்து வருகின்றனர். சாதாரண தரையில் டைல்ஸ் பதித்தல், கதவு மற்றும் ஜன்னல்கள் புதிதாக மாற்றி வருகின்றனர். மின் இணைப்பும் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் எந்த பணியும் முழுமை பெறவில்லை. இந்தப்பணி எப்போது முடிக்கப்படும், தொழி லாளர்கள் மற்றும் பயணியர்கள் பயன்பாட்டுக்கு வருமா, வராதா, என்பதும் ரகசியமாக உள்ளது.

பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றுக் காக கடந்த இரண்டு நாட்களாக மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்,  ரிசார்ட்களில் ஒரு நாள் தங்குவ தற்கு விசாரித்தபோது குறைந்தது ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20  ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப் படுவது தெரியவந்தது.

பல இடங்களில் அலைந்து திரிந் தும் இங்கு, குறைந்த கட்டணம் வசூலிக்க அரசு சார்பில் எந்த ஒரு கட்டடமும் இல்லை. கருத்தரங்கம், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகள்  நடத்தவும் இரண்டு மூன்று நாட்கள்  தங்குவதற்கு மிக குறைந்த  கட்டணத்தில் அரசே ஓய்வில்லங் களை அமைக்க வேண்டும், இதனால், சுற்றுலா வரும் தொழி லாளர்கள் அவரது குடும்பத்தினர் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பயனடைய முடியும்.

பொருளாதார வசதி, இல்லாத சாதாரண சுற்றுலா பயணிகள் அரசு பேருந்துகளில் வந்து பல்லவ  சிற்பங்கள் கண்டு ரசித்து மீண்டும் அரசு பேருந்துகளில் வீடு திரும்ப வேண்டியுள்ளது. 

நேரு ஓய்வு இல்லத்தை புதுப்பித்து வருவது தொழிலாளர் நலத்துறை என்றாலும் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தா லும் இனிமேல் அது தொழிலாளர் நல வாரியத்திடம் இருக்குமா? அல்லது தனியார் விடுதியின் கட்டுப் பாட்டிற்குள் சென்று விடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. காரணம் நேரு ஓய்வு இல்ல வளாகத்தை முழுமையாக பயன்படுத்தி வரும் தனியார் உணவகம் அந்த  வளாகத்தை நீண்ட கால குத்த கைக்கு எடுத்துள்ளதாக கூறப்படு கிறது.

 சாமான்ய மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய நேருவின் பெயரால் இயங்கும் இந்த இல்லம் எளியவர்களுக்கு கிடைக்குமா?

- சி. ஸ்ரீராமுலு