கடலூர் மாவட்ட செங்கொடி இயக்க என்பது தங்கள் வாழ்வை இவ்வியக்க த்திற்காகத் தியாகம் செய்த பல்லாயிரம் தோழர்க ளின் வரலாற்றின் தொகுப்பே யாகும் தலைமுறை தலை முறையாய் செங்கொடியைக் காத்து வரும் தோழர்களின் உழைப்பிலும், மக்களுக்காக எதையுமே எதிர்பார்க்காமல் உழைக்கும் அந்த மகத்தான வர்களின் வியர்வையிலும்தான் இன்று கடலூர் மாவட்டத்தில் கம்பீரமாய் பறக்கிறது செங்கொடி.
மாவட்டத்தின் சமூக அமைப்பு
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாவட்டத்தில், இருதரப்பு மக்களையும் மோதவிட்டு அதனால் ஆதாயம் அடையும் சக்திகள் தொடர்ந்து கலவரங்களை உருவாக்குவது கடந்த நூற்றாண்டு வரலாறு. ஆனால் செங்கொடி இயக்கம் தன் தோற்றத்திலிருந்தே இம்மாவட்டத்தில் இருதரப்பு மக்களின் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து களமாடி வருகிறது. ஒற்றுமையை வலியுறுத்தும் அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பக்கம் சமரசம் இல்லாமல் உறுதியோடு நின்றதுதான் அதன் வீரம் மிக்க வரலாறு.
விதைக்கப்பட்ட 71 ஆண்டுகள்
தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் தென்னாற்காடு மாவட்டமாக இருந்த இப்பகுதி, பின்னர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும் புதுச்சேரி மாநிலமாகவும் பிரிந்தது. 1953 நவம்பரில் சிதம்பரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் 120 உறுப்பினர்களுடன் தொடங்கிய பயணம், 1975-ல் மார்க்சிஸ்ட் கட்சியில் 100 கிளைகளுடனும் 1,000 உறுப்பினர்களுடனும் வளர்ந்தது. இன்று 1,000 கிளைகளும், 10,000 கட்சி உறுப்பினர்களும், லட்சக்கணக்கான வர்க்க, வெகுஜன உறுப்பினர்களும் கொண்ட பெரும் இயக்கமாக உயர்ந்துள்ளது.
முன்னோடித் தலைவர்களின் பங்களிப்பு
1943-ல் மும்பையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் பி.சி.ஜோஷி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து இராமமூர்த்தி, சி.எஸ்.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், சி.கோவிந்தராஜன், கே.ரமணி உள்ளிட்ட எட்டுப் பேர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். இதில் சி.கோவிந்தராஜன் கடலூர் மாவட்ட ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். 1949-ல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய சமாதான கவுன்சில் மாநாட்டில் தென்னார்காடு மாவட்ட மாதர் சங்கத் தலைவர் ஷாஜாதி பிரதிநிதியாக கலந்துகொண்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் உருவாக்கம்
1964 ஆம் ஆண்டு துவக்கத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் மாகாண கவுன்சில் கூட்டத்தில் பெரும் தத்துவார்த்த மோதல் நடைபெற்றது. கட்சியின் வர்க்கக்கூட்டு என்ற போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், வி.பி.சிந்தன், கே.ரமணி, சி.கோவிந்தராஜன், எஸ்.நடராஜன் உள்ளிட்ட 29 கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதிய கட்சியின் தொடக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொருட்டு மதுரையில் 1964 ஏப்ரல் 28, 29 தேதிகளில் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் 54 தோழர்களைக் கொண்ட மாநில இணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் தென்னார்காடு மாவட்டத்திலிருந்து சி.கோவிந்தராஜன், எஸ்.நடராஜன், கே.வேணுகோபால், டி.பி.கோவிந்தன், டி.ஆர்.விஸ்வநாதன் ஆகிய 5 தோழர்கள் இடம்பெற்றனர்.
முதல் மாவட்ட மாநாடு
கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட மாநாடு 1964 செப்டம்பர் 12, 13 தேதிகளில் கடலூரில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. எஸ்.நடராஜன் கட்சியின் முதல் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவசர நிலைக் கால போராட்டங்கள்
1975 ஜூன் மாதம் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்தது. நெய்வேலி, சிதம்பரம், புதுவை, நெல்லிக்குப்பம், கடலூர், விழுப்புரம், விருத்தாசலம், பெண்ணாடம், தேவபாண்டலம், பண்ருட்டி போன்ற இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
1976 ஜனவரி 30 அன்று தமிழக திமுக அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தோழர்கள் எஸ்.நடராஜன், சி.கோவிந்தராஜன் மீது மிசா சட்டத்தின் கீழ் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நெல்லிக் கப்பத்தில் தோழர்கள் அமீர், லாசர், தயாளன், நடுவீரப்பட்டில் 4 தோழர்கள் கைது செய்யப்பட்ட னர். விருத்தா சலத்தில் என்.ஆர்.ராமசாமி, துரைசாமி, கோதண்டம் ஆகியோர் கைதானார்கள்.
தலைமறைவு வாழ்க்கையும் தொடர் போராட்டங்களும்
கட்சி பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, தோழர்கள் எஸ்.வீரபத்திரன், கே.பாலகிருஷ்ணன் (தற்போதைய மாநிலச் செயலாளர்) இருவரும் தலைமறைவாக இருந்து செயல்பட்டனர். நெய்வேலியில் சிஐடியு சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வீரபத்திரன் வேலை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் கே.திருவேங்கடம் கண்பார்வை இழந்தார். தோழர் கே.சிவதாஸ் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். இத்தகைய கடும் அடக்குமுறைகளையும் மீறி கட்சி தனது போராட்டங்களைத் தொடர்ந்தது.
காவிரி படுகையில் தொடங்கிய போராட்டம்
காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம் வட்டங்களில் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டும்போது மிராசுதார்களுடையவும் அரசினுடையவும் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நூற்றுக்கணக்கான தோழர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். தடியடி கொடுமைகளுக்கு ஆளானார்கள், தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. எனினும் செங்கொடி இயக்கம் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, கூலி உயர்வுக்காக, குத்தகை உரிமைக்காகத் தொடர்ந்து களமாடியது. இந்தப் போராட்டங்களுக்கு 60 ஆண்டுகள் பாரம்பரியம் உண்டு.
மக்கள் இயக்கமாக விரிவடைதல்
மெல்ல மெல்ல மாவட்டம் முழுவதும் படர்ந்து சென்ற செங்கொடி இயக்கத்தில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தீரமிக்க இளைஞர்கள். வீரமுடைய பெண்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் இணைந்தனர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் போராட்டம்
தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிலையமான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தொழிற்சங்கம் துவக்கியது செங்கொடி இயக்கமே. 1970களில் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கக் கோரிக்கை வைத்து, 2014ல் அதை நிறைவேற்றியதும் இவ்வியக்கத்தின் வெற்றிகளில் ஒன்று.
செங்கொடி இயக்கத்தின் தவப்புதல்வர்கள்
கடலூர் மாவட்டத்தில் எஸ்.நடராஜன், சி.கோவிந்தராஜன், என்.ஆர்.ராமசாமி, ஷாஜாஜி கோவிந்தராஜன், டி.ஆர்.விஸ்வநாதன், எம்.ரத்தினசபாபதி, எஸ்.துரைராஜ் ஆகியோர் செங்கொடி இயக்கத்தை உருவாக்கி வளர்த்த தவப்புதல்வர்களாவர். இவர்கள் களப்போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் செய்து, இயக்கத்தை வலுவான அடித்தளத்தில் நிறுத்தினர்.
தற்கால போராட்டங்கள்
காவல் நிலையக் கொடுமைகளுக்கு எதிராக தமிழக வரலாற்றில் தடம் பதித்த கடலூர் மாவட்டத் தோழர்கள், தற்போது உச்ச நீதிமன்றத்திலும் தங்கள் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாசிச அபாயத்தை எதிர்த்தும், கூட்டு களவாணி கார்ப்பரேட் முதலாளித்துவத்தை எதிர்த்தும், செங்கொடி இயக்கப் புதல்வர்கள் தேசம் முழுவதும் களமாடிக் கொண்டிருக்கின்றனர்.
சமகால சவால்கள்
உலகமயம் உருவாக்கியுள்ள சமூகக் கொடுமைகளுக்கு எதிராக நெருக்கடிகள் மிகுந்த சூழலில், சாதி, இனம், மதம், உருவ வழிபாடு என்ற பெயரில் மக்களைப் பிரிக்க முயலும் சக்திகளை எதிர்த்து, உழைக்கும் வர்க்கமாக மக்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை செங்கொடி இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கிறது.
எதிர்கால நம்பிக்கை
சமூக மாற்றத்திற்கான கோபம் பொதிந்த செங்கொடியை முன் தலைமுறையினர் எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் அதைப் பற்றிச் செல்கிறோம். எங்கள் தலைமுறை களமாடும் செங்கொடியை அடுத்த தலைமுறை பற்றி எழும். தமிழக செங்கொடி இயக்க வரலாற்றில் எப்போதும் கடலூர் மாவட்டம் முன்னணிப் படையாக நிற்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 24-வது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது.
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)