வாரத்தில் ஆறுநாட்களும் வாயில் நுரைதள்ளாத குறையாக ஓடும் நகரத்து நடுத்தர வர்க்கத்தின ருக்கு சற்றே இளைப்பாறக் கிடைக்கும் வார விடுமுறை நாள், ஒரு “பாலைவனச் சோலை”.இந்த உவப்பான ஒரு நாளையும் கசப்பாக்குகிறது சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் போலீஸ். எளிமையானகதைக்கருவைக் கொண்ட திரைப்படமான “நூடுல்ஸ்” நடுத்தர வர்க்க பயம் கலந்த மனவியல்பையும், காவல்துறையின் சாந்தமான மிருகத்தனத்தையும் ஒரு சேரப் பேசுகிறது. வார விடுமுறையை குடியும் கும்மாளமுமாக பப், பார் எனக் கழிக்கும் இன்றைய தலைமுறைகளில், தமிழர்களின் விளையாட்டான சினிமா பாட்டுப் போட்டியை நிகழ்த்தி, சந்தோஷமாக இரவு பொழுதை கழிக்கிறது, நடுத்தர குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடியின் மேல் தளத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளடங்கிய குழு. அந்தக் குழுவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணன், அவன் மனைவி, மகளும் உள்ளனர். சாதி மறுத்த காதல் திருமணத்தால், மனைவியின் பெற்றோரால்,
பல ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது சரவணனின் குடும்பம். இந்நிலையில் மனைவியின் பெற்றோர் மனம் மாறி, இவர்களைப் பார்க்க வருகிற திடீர் தகவலும் இந்த குதூகலத்திற்கு ஒரு காரணம். களிப்பென்றாலே அங்கு கலகலப்பு, கூச்சல் இல்லாமலா இருக்கும்! வன்முறையாளர்களின் கூச்சல் குழப்பத்திற்கும்; பண்பட்ட குடும்பத்தினர் மகிழ்வால் ஏற்படும் சத்தத்திற்கும், வித்தியாசம் தெரியாத காவல் துறை; இந்த எளிமையானவர்களின் சந்தோசத் துக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டுகிறது. மிரட்டலை சரவணனும், அவனது மனைவியும் தைரியமாக நியாயம் பேசி எதிர்கிறார்கள். எதிர்கின்ற சரவணனை சரியான நேரம் பார்த்து பழி வாங்க, மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறது போலீஸ்படை. எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் தப்பித்தே வாழ்ந்து பழக்கப்பட்ட, மத்திய தரவர்க்கத்தின் மனோநிலை, இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்கிறது, என்பதே மீதிக்கதை. மக்கள் கூட்டம் காவலர்களைப் பார்த்து பயப்பட வேண்டும்; யாரும் எதிர்த்துப் பேசக்கூடாது;
மீறுபவர் களை எவ்வகையிலேனும் நசுக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்ட காவலர்களின் உளவியலையும்; அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய தொழிலாளர் களின், போராட்டக் களங்களில், கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும், ஒழுங்குபடுத்தவும் வரும் காவலர் களோடு, தலைவர்கள் விவாதம் செய்வதையும், சரியான வழிமுறைகள் சொல்வதையும், கேள்வி கேட்பதை யும், உரையாடுவதையும் நடைமுறையில் விருப்ப மின்றி காவல்துறை ஏற்றாலும்; எதிர் வினா தொடுக்கும் சிறுகூட்டமோ, தனி மனிதனோ காவலர்களிடம் மாட்டிக் கொண்டால், எப்படியும் பழிவாங்கி விடும் என்ற மத்திய தர வர்க்கத்தின் அச்சத்தை யும்; அசலாக நம்முன் வைக்கிறது இப்படம். போலீஸ் பழி வாங்க எந்த எல்லைக்கும் அத்துமீறும் என்பதற்குச் சான்றாக, குடி யிருப்பாளர்கள் அனைவரையும் தோப்புக் கரணம் போடச் சொல்கிறது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை தோப்புக் கரணம் போடும்போது, குழந்தைகள் அதனை சாதாரண மாக எடுத்துக் கொள்வதையும், பெரியவர்களின் ஈகோ சுக்குநூறாக நொறுங்குவதை, தங்களது முகபாவத் தால் வெளிப்படுத்துகின்ற காட்சியில்; படம் பார்க்கின்ற வர்களுக்கு போலீஸ் மீதான கோபம் எகிருகிறது. பின்னணி இசை சுமார் ரகம். இறுதிக்கட்ட பாடல் ரசிக்கவைக்கிறது. மொட்டைமாடி, சரவணன் வீடு,தெரு, மற்றும் தெருவில் உள்ள மளிகைகடை,வக்கீல் வீடு உள்ளிட்ட ஒரு சில இடங்களே கதைகளம். செல்பேசி திருடன் வீட்டிற்குள் வந்தது; திடீரென மூச்சு வந்து வெளியேறுவதும்; லாஜிக் மீறல்கள். காவல் ஆய்வாளராக நடித்துள்ள மதன் தெட்சிணாமூர்த்தி, மனதிலுள்ள வக்கிர வன்முறையை, சாதாரண பார்வை மூலமே குடியிருப்பாளர்களிடம் காட்டி மிரட்டுவது உள்ளிட்ட பாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பான நடிப்பை தந்துள்ளார். சரவணனாக நடித்துள்ள ஹரிஸ் உத்தமனை வில்லனாகவே பார்த்துள்ளோம். ஆனால், குணச்சித்திரப் பாத்திரத்திலும் நன்றாக நடிக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளார்.ஆனால் ஒரு சில இடங்களில் இவரது உடல் மொழி ஒத்திசைக்கவில்லை.சரவணனின் மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமார், ஏற்ற பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
பிற அனைத்து பாத்திரங்களும் குறைவற்ற பங்கை செலுத்தியுள்ளனர். மத்தியதர வர்க்கத்தினரின் “தானுண்டு, தன் வேலையுண்டு” என்ற தன்நலப் போக்கை, அனைவரும் சிறப்பாக சித்தரித்துள்ளனர்.குறிப்பாக தோப்புக்கரணம் போட உடல் பிரச்னையை காட்டி விதிவிலக்கு கோரும் பெண் பாத்திரத்தில் நடித்தவர் கவனிக்க வைக்கிறார். இறுதிக் காட்சியில் ஆய்வாளரை குடியிருப்போர் பிடித்து கொண்டு மடக்குவது, கொஞ்சம் செயற்கையாகவும், நாடகபாணி யிலும் உள்ளது. எதார்த்தத்தை காணமுடியவில்லை. முதல் பாதியில் பட ஓட்டம் சற்று தொய்வை தருகிறது. திரைக்கதை உருவாக்கத்தில், இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். படத்தின் இயக்குநர் மதனுக்கு முதல் முயற்சி. தைரியமான முன்னெடுப்பு. கைகொண்ட கதைக்கு நேர்மையாக உழைத்துள்ளார். போலீஸ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால், போலீஸ் பிரச்சார படமாக மாறிவிடுமோ என நினைக்கையில், இறுதியில், நல்ல டுவிஸ்ட் வைத்து படத்தை நிறைவு செய்துள்ளார். சினிமா என்ற பெயரில், பல குப்பைகள் பெருகி நாற்ற மெடுக்கையில், இது போன்ற குறைந்த பட்ஜெட்டில் வந்துள்ள நல்முயற்சி படங்களையும், நம்பிக்கை தரும் புதிய இளம் இயக்குநர்களையும் உற்சாகமூட்ட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.