அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்குவது, பசிப்பிணியை முற்றிலுமாக அகற்றுவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவைகளுக்காக செயல் படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை மெல்ல மெல்ல சீரழிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. பருவ மழை பொய்ப்பது, வறட்சி, வெள்ளம் மற்றும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போதும், பெருந்தொற்று போன்ற காலங்களிலும் மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பது பொது விநியோகத் திட்டமாகும்.
ஒன்றிய அரசின் சரியில்லாத நிர்ணயிப்பு
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி (2013) பயனாளிகளை கண்டறிவதில் ஏற்பட்ட குளறுபடிகள் இதுநாள் வரை தீர்ந்தபாடில்லை. வறுமைக் கோட்டிற்கு மேல்(APL ), வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) என வரையறுப்பதில் ஒன்றிய அரசின் நிர்ண யிப்புகள் சரியில்லாததால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக அமல்படுத்த இயலவில்லை. பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையில் அமைந்துள்ளன. இந்திய உணவுக் கழகத்தை( FCI )ஆய்வு செய்ய சாந்தகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் பொது விநியோகத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 40 சதவீதமாக குறைக்க வேண்டும், உணவுப்பொருட்களை சந்தை விலையில் விற்பது, மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது, ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் வழங்குவது போன்ற பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை அமலாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பொது விநியோகத்தை தனியாருக்கு தரும் முயற்சி
உலக வர்த்தக ஸ்தாபனத்தின்(WTO) நிபந்தனை களை ஏற்று, வணிக வசதி ஒப்பந்தத்தில் (TFA)கையெழுத்திட்ட ஒன்றிய அரசு பொது விநியோகத் திட்டத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சியை மேற் கோண்டுவருகிறது. பொது விநியோகத் திட்டத்தில் தனியார் பங்க ளிப்புக்கு வாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 நியாய விலைக் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மாவட்டந்தோறும் 75 கடைகள் திறக்க தேவையான இட வசதி செய்து தர வேண்டும். தனியார் டீலர் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பதற்கான அறைகள், சிசிடிவி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு அம் சங்கள் உட்பட உள்கட்டமைப்புகள் கொண்டதாக இருக்கும் எனவும் இத்தகைய தனியார் நியாய விலைக் கடை உரிமையாளர்கள், நியாய விலைக்கடை டீலர்கள் (Fair Price Shop Dealer)என்ற பெயரில் அழைக்கப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 4.99லட்சம் நியாய விலைக் கடைகளில் 3.5 லட்சம் நியாய விலைக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டது.
மானிய விலை அரிசியை நிறுத்தும் முடிவு
மேலும் தற்போது மாநில அரசுகளுக்கு நெருக்கடி வழங்கும் வகையில் மானிய விலையில் வழங்கி வரும் அரிசியை முழுவதுமாக நிறுத்துவது என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. உதாரணமாக தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 2,23,52,873 குடும்ப அட்டைகளில், முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைகள்(PHH), முன்னுரிமை குடும்ப அட்டைகள்- அந்தியோதயா அன்ன யோஜனா(PHH-AAY) என வகைப்படுத்தப்பட்டுள்ள 1,14,71,719 அட்டைகளுக்கு மட்டும் விலையில்லாமல் (01-01-2023முதல்) மத்திய தொகுப்பிலிருந்து அரிசி விடுவிக்கப்படுகிறது. எஞ்சி யுள்ள 1,08,81,154 குடும்ப அட்டைகளுக்கு ஈடுசெய் ஒதுக்கீடு முறையில்(Tide Over) கிலோ ஒன்றுக்கு ரூபாய் 8. 30 விலை கொடுத்து வாங்கி விலையில்லா மல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது தமிழக அரசு . மாதம் ஒன்றுக்கு இவ்வகையில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான செலவு தமிழக அரசால் ஏற்கப்படுகிறது.
தனியாருக்குத் தருவது பதுக்கலுக்கும் விலை உயர்வுக்குமே வழி வகுக்கும்
தற்போது ஒன்றிய அரசு வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தனியாருக்கு சந்தை விலையில் அதாவது கிலோ ரூ.35 .40 விற்கப் போகிறோம் என அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநில அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கும். இது போன்ற நெருக்க டியை மாநிலங்களுக்கு உருவாக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய அரசு. மாநிலங்களுக்கு உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய தொகுப்பிலிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் டன் கோதுமை, 5 லட்சம் அரிசியை வணிகர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மாநிலங்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்குவதை தவிர்த்து பதுக்கலையும், கொள்ளை லாபத்தையும் ஊக்குவிக்கும் வகையில் சந்தை விலையில் வணிகர்களுக்கு வழங்குவது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவாது.
இலவச அரிசி திட்டத்தை முடக்க முயற்சி
மாநிலங்கள் மானிய விலையிலும், விலையில்லா மலும் உணவு தானியங்களை வழங்கி அரசியல் செல் வாக்கை பெற்று விடுகின்றன என்பதினால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு. அண்மையில் கர்நாடகா அரசு ஜூலை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசம் என அறிவித்துள்ளதை முடக்கவும் அரிசியை வைத்து அரசியல் செய்கிறது ஒன்றிய அரசு. மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கடமையிலிருந்து தவறி அரிசியில் அரசியல் செய்யும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு எதிராக அணி திரண்டு குரல் எழுப்புவோம்.
கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு
கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு )