articles

img

பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு எண்களில் ஒப்புக்கொள்கிறது

மதுரை, பிப்.12 -  நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின்மையை ஒன்றிய பாஜக அரசு எண்களில்  ஒப்புக்கொள்கிறது, சொற்களில் ஒப்புக்கொள்ள வில்லை என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார்.  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய நிதி யமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது: 

ஒற்றை இன்ஜின்

வரவு- செலவு திட்டத்தை பொருளாதாரம், சமுதாயம், அரசியல் எனும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் மக்களின் நுகர்வாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக 4 இன்ஜின்கள் தேவைப்படுகின்றது. மக்களின் நுகர்வு, அரசின் முதலீடு, தனியார் முதலீடு, ஏற்றுமதி எனும் 4 இன்ஜின்கள் கொண்டு உந்து சக்தி செயல்படுகிறது. தற்போது ஒன்றிய அரசு, அரசின் முதலீடு எனும் ஒரு இன்ஜினை கொண்டு செயல்படுகிறது. ஒன்றிய அரசு பொருளாதார வளர்ச்சி யின்மையை எண்களில் ஒப்புக்கொள்கிறது, சொற்களில் ஒப்புக் கொள்வதில்லை. வரவு-செலவு திட்டத்தில் அரசின் முதலீட்டை மட்டுமே ஒன்றிய அரசு நம்பியுள்ளது.  இந்தியாவில் மக்களின் நுகர்வு குறைந்துவிட்டது. பணவீக்கத்தின் காரணமாக கார், இருசக்கர வாகனம், ஜவுளி போன்றவற்றை வாங்குவது குறைந்து விட்டது. இந்தியாவில் இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்துவிட்டது.  இந்தியா - சீனா இடையே வர்த்தக இடை வெளி 100 பில்லியன் டாலர்களை தாண்டி யுள்ளது. இந்தியாவில் தனியார் துறையினர் மூதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். நடப்பாண்டில் ஏழரை இலட்சம் கோடி ரூபாய்  முதலீட்டை எட்ட முடியாத நிலையில் வரும் நிதியாண்டில் எப்படி 10 இலட்சம் கோடி ரூபாய்  முதலீட்டை எட்ட முடியும்? 10 இலட்சம் கோடி  முதலீட்டை நம்பியே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 10 இலட்சம் கோடியினை எப்படி செலவு செய்ய முடியும்? தனியார் போல அரசு முதலீடு செய்ய முடி யாது. முதலீட்டில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

சரியும் உற்பத்தி

இந்தியாவில் ஒவ்வொரு காலாண்டுக்கும் உற்பத்தி சரிந்து கொண்டே இருக்கிறது. உற்பத்தி சரிவை சந்திக்கும் போது எப்படி  இந்தியா வளர்ச்சி அடைகிறது என ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே போகிறது. ஒன்றிய அரசின் செலவு மிகக் குறைவாக இருப்பதால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கொண்டு வர முடியாது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை ஒன்றிய  அரசு செலவு செய்வதில்லை. 

மானியங்களின் அவசியம்

பட்ஜெட்டில் உணவு, உரம், பெட்ரோல் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மானியங் கள் கொடுத்தால் மட்டுமே விலைவாசியை கட்டுக்குள் வைக்க முடியும். உணவு, உரம் மானியங்கள் குறைக்கப்பட்டது மிகத்தவறு, கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசானது மாநில அரசுகளுக்கு நிதியை சமமாக பிரித்துத் தர வேண்டும். ஆனால், தற்போது மாநிலங்களுக்கு ரூ. 63  ஆயிரம் கோடியை குறைத்து வழங்கப் போகிறது. நிதியை குறைத்து கொடுப்பதால் கிராம பஞ்சாயத்துகளில் பணிகளை மேற்கொள்ள முடியாது. நிதியை குறைத்துக் கொடுப்பது ஒன்றிய அரசு, மாநில அரசு களுக்கு செய்யும் துரோகம்.

8% வளர்ச்சி தேவை

நடப்பாண்டில் உணவு, உரம் விலை கடுமையாக அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிகப்பெரிய சரிவை சந்திக் கும், வேலை வாய்ப்பின்மை தீவிரமாகும். தனி  நபர் வருமானம் சரிவை சந்திக்கும். இந்தியா தலை நிமிர 20 ஆண்டுகளுக்கு 8 சதவீத வளர்ச்சி தேவைப்படுகின்றது. இந்தியாவில் பசி, வறுமை, ஏழ்மை, வேலையின்மையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும். இந்தியாவில் 60 சதவீத சொத்துக்கள் 5 சதவீத பேரிடம் மட்டுமே உள்ளது.  ஏற்றத்தாழ்வு இல்லாத வளர்ச்சியாக இருக்க வேண்டும். ஏழைகளின் கைகளில் எந்த சொத்துக்களும் இல்லை. ஜி.எஸ்.டி வரி அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டது, ஜி.எஸ்.டி எனும் விலங்கு மக்கள் கால்களில் மாட்டப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியை அதிக அளவில் ஏழை மக்கள் மட்டுமே கட்டுகிறார்கள், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரியை கொண்டு வரும்போது நாடாளுமன்றத்தை கூட்டி மணி அடித்து கொண்டாடினார்கள்.

உலக நிலை

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் கீழே செல்லும், உலக அளவில் வர்த்தகம் 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டும். உக்ரைன் போரினால் உலக அளவில் பாதிப்புக்களை கொடுக்கும், பட்ஜெட்டில் நிதர்சன உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.  ஒன்றிய பாஜக அரசு செலவு செய்ய  மட்டுமே நினைக்கிறது; சேமிக்க நினைக்க வில்லை. எதிர்காலத்திற்கு சேமிப்பு மிக அவசியம். ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு பயன்தராத பட்ஜெட்டை 10 ஆவது ஆண்டாக தாக்கல் செய்துள்ளது, மக்களுக்கு பயன் உள்ள வகையில் பட்ஜெட்டை திருத்தி ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மக்கள் ஓரளவு மீள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.