articles

img

கல்வி நிலையங்களில் பாலியல் கொடுமைகள் தொடர் கதையாவதா? - கே.பாலகிருஷ்ணன்

கலாச்சேத்ரா பிரச்சனையில் ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகமும், தேசிய மகளிர் ஆணையமும் நடந்துகொண்ட முறை மிகவும் மோசமானது; மிகுந்த கண்டனத்துக்கு உரியது. 

காலஞ்சென்ற பரதநாட்டியக் கலைஞர் ருக்மிணி அருண்டேல் பரதநாட்டி யம் உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாக்கிய கலைப் பள்ளியே, சென்னை பெசண்ட் நகரில் அமைந்துள்ள கலாச்சேத்ரா நிறுவனம். கடந்த 1935 ஆம் ஆண்டில் அடையார் பிரம்மஞான சபையால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த பல பத்தாண்டு களாக மிகப்பெரிய வளர்ச்சி கண்டு இன்றைக்கு உல கப்புகழ் பெற்ற கலைப்பள்ளியாக விளங்குகிறது. இந்தியா முழுவதுமிருந்து மட்டுமல்லாது, பல வெளி நாடுகளில் இருந்தும் மாணவ- மாணவியர்கள் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்த்து கலைகளைக் கற்பதற்காக இங்கு சேர்கிறார்கள். அப்படிப்பட்ட புகழ்மிக்க இந்தக் கல்வி நிலையத்தில்தான் மிகமோச மான தொடர் பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நடைபெற்று, அதைத் தடுப்பதற்குப் பதிலாக குற்றவா ளிகளைக் காப்பாற்றும் நோக்கில் கலாச்சேத்ரா நிர்வாகம் செயல்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி வளாகங்களில் குறிப்பாக ஆய்வுக்கல்வித் துறையில் நடக்கிற பாலியல் குற்றங்கள் சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படையான பேசும்பொருளாயின. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கலாச்சேத்ரா அறக்கட்டளை யின் முன்னாள் இயக்குனர், கலாச்சேத்ரா வளா கத்தில் ஒரு சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களில் ஈடுபடுவதாக சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்நிறுவனத்தில் நடைபெற்று வரும் பாலியல் அச்சுறுத்தல்கள் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் அரங்கேற்றப் பட்டுள்ளன. தொடர்ந்து மாணவிகளிடம் பேராசிரி யர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது இரவு நேரங்களில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஒருமையில் பேசுவது, வகுப்பறைகளில் அநாகரீகமாக நடந்து கொள்வது போன்ற கொடுமைகளை இழைத்து வந்துள்ளனர். தங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவிகள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ள னர். அதையும் மீறி சிலர் நிர்வாகத்திடம் புகார்கள் அளிக்கத் தொடங்கிய போது, இவர்கள் பகிரங்கமாக மிரட்டப்பட்டுள்ளனர். இதைபொறுக்கமுடியாமல் சிலர் படிப்பை பாதியில் தொலைத்துவிட்டு வெளி யேறியுள்ளனர்.

தொடர் தொல்லை

இந்நிலையில் கலாச்சேத்ராவைச் சேர்ந்த ருக்மிணி தேவி கவின்கலைக் கல்லூரியின் முன்னாள்,  இந்நாள் மாணவிகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார்கள் அளிக்கத் தொடங்கினார்கள். தங்களுக்குப் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்த ஆசிரி யர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, தங்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்து அவர்கள் கல்லூரி யின் புகார் குழுவிடம் புகார்கள் அளித்திருக்கிறார்கள். கல்லூரியின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், நடனத்துறை தலைவர் ஜோஷ்னா மேனன், ஆகியோர் மாணவிகளின் புகார்கள் குறித்து முறை யாக விசாரிக்கவோ, குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முயற்சிக்கவில்லை.  குற்றம் புரிந்த ஆசிரியர்களை காப்பாற்றுவதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். மாணவிகள் அளித்த புகார்கள் கல்லூரியின் நற்பெய ருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கம் கொண்டவை எனத் தெரிவித்து கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன்  இந்தப் பிரச்சனைகள் குறித்து இனி யாரும் வாய்திறக்கக்கூடாது எனத் தடை விதித்ததாக மாணவிகள் குற்றம் சுமத்துகிறார்கள். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவிற்கு அளிக்கப்பட்ட புகார்களும் முறையாக விசாரிக்கப்படவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவிகளே புகார்களை திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சேத்ரா உள்விசாரணைக் குழுவில் வெளி உறுப்பினராக செயல்பட்ட  வழக்கறிஞர் பி.எஸ். அஜிதா கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் புகார்கள் குறித்து நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்த காரணத்தினால்  ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் உள் விசாரணைக்குழுவை செயல்படுத்தவும், அதன் சிபாரிசுகளை அமல்படுத்தவும் ஒத்துழைப்பு நல்கவில்லை எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாச்சேத்ரா கல்லூரியில், மாணவிகள் அளித்த புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த மாதம் வளாகத்துக்கு வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, நிர்வாகத்திடமும், நிர்வாகம் பரிந்துரை செய்த ஒரு சில மாணவிகளிடமும் மட்டும் விசாரணை நடத்தி இருக்கிறார். புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரைக்கூட விசாரிக்காமல், யாரும் புகார் தர முன்வரவில்லை, கல்லூரியில் எந்தவித மான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடக்க வில்லை என நற்சான்றிதழ் வழங்கி சென்றுள்ளார்.

மாணவிகள் போராட்டம்

கல்லூரி நிர்வாகமும், தேசிய மகளிர் ஆணைய மும் தங்களுக்கு மோசமான அநீதியை இழைத்த தைக் கண்டு கொத்தித்தெழுந்த மாணவிகள்  நீதிவேண்டி தொடர் போராட்டத்தைத் தொடங்கினார் கள். மார்ச் 30ந் தேதி காலையில் துவங்கிய போராட்டம் இரவு 3.00 மணி வரை விடிய, விடிய நடந்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தோடு காவல்துறை  மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் சம்பந்தப்பட்ட புகார் குறித்து விசாரிப்பதற்கோ, குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ நிர்வாகம் இசைவு தெரிவிக்க மறுத்துவிட்டது.   இதனிடையே மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா, அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி,  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் எஸ்.மிருதுளா, எஸ்.ஆனந்த், ரா.பாரதி,  அருண், வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் தீ.சந்துரு, சிபிஎம் தென்சென்னை  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, வேளச்சேரி பகுதி செயலாளர் எஸ்.ரஃபி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்க ளும், ஜனநாயக அமைப்புகளும் துணையாக நின்று போராடின.  

மாணவிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியா கத் தலையிட்டு, மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் எஸ்.குமாரி மூலமாக விசாரணை நடத்தியது. வளாகத்தில் காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் ஆணையம் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் 100க்கும் மேற்பட்ட மாணவியர்கள் நேரடியாக புகார் அளித்துள்ளதாகவும், அவற்றில் 47 புகார்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை என்றும், மற்றவை மனரீதியாக, வார்த்தை ரீதியாக புண்படுத்தல் போன்றவை தொடர்பான புகார்கள் என்றும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். மாணவிகளால் குற்றம்சாட்டப்பட்ட கலாச்சேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர்களான ஹரிபத்மன், ஸ்ரீ நாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக குற்ற விசாரணை மேற்கொள்ளவும்,  குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், கலாச்சேத்ரா கல்லூரி நிர்வா கத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவை அடுத்து, கல்லூரி நிர்வாகம், விசாரணை முடியும் வரை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை இடைநீக்கம் செய்ததுடன், மற்ற மூவரையும் டிஸ்மிஸ் செய்தது.   

கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர், ஆசிரியர் ஹரிபத்மன் தனக்கு இழைத்த துன்புறுத்தல்களால், தன்னால் மேற்படிப்பைத் தொடர முடியாமல் கல்லூரியிலிருந்து விலகநேரிட்டது என்றும் அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஹரிபத்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால், பாலியல் புகார்களுக்கு உள்ளானவர்கள் வேறுயாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தேர்வுகளைப் புறக்கணித்து தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாகவும், மாநில மகளிர் ஆணையத்தின் தலையீட்டின் மூலமாகவும் கலாச்சேத்ராவில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்  மீதான முறைப்படியான சட்ட விசார ணைகள் தொடங்கி இருக்கின்றன. ஒன்றிய அரசின் அதிகார மையங்கள், கல்லூரி நிர்வாகம் அளித்த அழுத்தங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, கலாச்சேத்ரா மாணவிகள் மிகுந்த நெஞ்சுரத்தோடு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

பொறுப்பற்ற நிர்வாகம்

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் கலாச்சேத்ரா விடுதி மாணவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதன் விளைவாக பல மாணவ - மாண வியர்களுக்கு  வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.  பாதிக்கப்பட்ட மாணவ-மாணவி யர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து, கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தி வளாகத்தின் சூழலை மேம்படுத்தாமல், இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன்  புகார் அளித்த மாணவ- மாணவியர்களிடமே மன்னிப்புக் கடிதம் கோரிப் பெற்றிருக்கிறார். ஒரு மாணவரை கூட மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை யளிக்க மறுத்துள்ளார். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சில பேர் தாங்களாகவே மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கோ, வெளியுலகின் கவனத்திற்கோ, ஊடகங்களின் கவனத் திற்கோ செல்லாமல் அனைத்தையும் மூடி மறைக்கும் வகையில் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் செயல்பட்டுள்ளார்.  

சாதாரண கோரிக்கைகளுக்காக நிர்வாகத்தை அணுகுவதற்குக்கூட சுதந்திரம் இல்லாதவர்களாக மாணவர்கள் நடத்தப்பட்டிருக்கி றார்கள் என்ற பல விபரங்கள் தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு  புகார்களிலும் இயக்குனரின் அணுகு முறை மிக மோசமானதாகவே இருந்திருக்கிறது.  கலாச்சேத்ரா பிரச்சனையில் ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகமும், தேசிய மகளிர் ஆணையமும் நடந்துகொண்ட முறை மிகவும் மோசமானது; மிகுந்த கண்டனத்துக்கு உரியது. தேசிய மகளிர் ஆணையம் கல்லூரி வளாகத்தில் மாண வர்கள் அனுபவித்து வருகிற பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளைக்  களைவதற்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது மிக மோசமான செயல். பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான பல்வேறு வழக்குக ளில் பாஜக அரசுகள் குற்றவாளிகள் தரப்புக்கே ஆதரவாக இருந்துவருவதை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். இதே அணுகுமுறையைத்தான் கலாச்சேத்ரா பாலியல் புகார்கள் தொடர்பான பிரச்ச னையில் ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மகளிர் ஆணையம் பின்பற்றி யுள்ளது. கலாச்சேத்ரா கல்வி நிறுவனத்தில் நடைபெற்றுள்ள  முறைகேடுகள் குறித்து ஒன்றிய அரசும், கலாச்சாரத்துறை அமைச்சகமும் முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், கல்லூரி இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

பாதுகாப்பை உறுதி செய்திடுக!

தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் விசாரணை அடிப்படையில் அளித்துள்ள சிபாரிசுகளை நடை முறைப்படுத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை யினை மேற்கொள்ள வேண்டும். மாணவிகள் அளித்துள்ள பாலியல் புகார்கள் குறித்து காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும். சமீப காலமாக நாடு முழுவதும் கல்வி வளாகங்க ளில் மாணவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டு வருகின்றன. என்றா லும், பாதுகாப்பான கல்வி வளாகங்களை உறுதி செய்வதில் ஒன்றிய பாஜக அரசு எந்தவித உருப்படி யான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. ரோகித் வெமுலா, ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்குகள் உள்ளிட்டு பல்வேறு வழக்குகள் ஒன்றிய அரசின் மோசமான அணுகுமுறைக்கு சாட்சியாக இருக்கின்றன.

சமீபத்தில் சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஐ.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி வளாகங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் தற்கொலைகளைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில் இருந்து அதிர்ச்சி யளிக்கும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த ஐந்தாண்டு களில் மட்டும் ஐ.ஐ.டி உள்ளிட்ட  மத்திய கல்வி வளாகங்களில்  61 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சரின் பதிலில் இருந்து தெரிய வருகிறது. கல்வி வளாகங்களில் எவ்வளவு வன்முறை யான சூழல் நிலவுகிறது என்பதை இந்தத் தகவல் வாயிலாக நம்மால் உணரமுடிகிறது. பொதுவாக, கல்வி வளாகங்களில் தங்களுக்கு எதிராக ஏவப்படும் வன்முறையை எதிர்த்துப் போராடக்கூடிய வலுவற்றவர்களாக, பாதுகாப்பில் லாத நிலையிலேயே மாணவர்கள் இருக்கிறார்கள். பல மாணவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடும் மனபலம் இல்லாமல், கல்வியைத் தொடராமல் விலகும் சம்பவங் கள் தொடர்கதையாகின்றன. மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவல நிலையும் தொடர்கிறது. கல்வி நிலையங்க ளில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மை நமது இளைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. இத்தகைய சூழலைத் தடுத்து பாலின, சாதிய, வர்க்கப் பாகுபாடுகள் களையப்பட்ட சூழல் கல்வி  வளாகங்களில் உறுதிசெய்யப்பட வேண்டும். ஒன்றிய, மாநில கல்வி வளாகங்களில் மாணவர் குறைதீர் மன்றங்கள், ஆலோசனை மையங்கள், புகார் மையங்கள் முறையாக ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் உறுதிசெய்யப்பட வேண்டும். இதுவே கலாச்சேத்ரா பிரச்சனை நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.