1963 ஆம் ஆண்டு தலைநகர் சென்னையில் துவங்கிய நான் இப்போது 5ஆவது கிளையை தாமிரபரணி கரையிலிருந்து துவங்குகிறேன். எல்லோரும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பார்கள். உழவருக்கும் தொழிலாளருக்கும் வந்தனை செய்வோம் என்று சொல்வதை பலர் ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் உழவுக்குள்ளும் தொழிலுக்குள்ளும் இது அடங்கித் தானே இருக்கிறது என்பார்கள். பொருளடக்கம் சரிதான். ஆனால், அதை விட உழவரும், தொழிலாளரும் அடக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது ஒரு உண்மை. அந்த உண்மையை அந்த தனிப்பட்ட ஒடுக்குமுறையை எடுத்துச் சொல்லி மாற்ற வேண்டும் என்பதற்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறேன். பல நேரங்களில், ஏன் பெரும்பாலான நேரங்களில் நான் சார்புத் தன்மையோடு நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. நான் சார்புத் தன்மையோடு தான் இருக்கிறேன் என்று சொல்வதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. மாறாக, பெருமிதம் கொள்கிறேன். நடுநிலை என்பதே மிகப்பெரிய பம்மாத்து. நடுநிலை என்று சொல்பவர்கள் தங்கள் சார்பு நிலையை மறைப்பதற்காகவே அதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில், நடுநிலை என்பது ஒரு பம்மாத்தே தவிர சுத்தம் சுயம்பிரகாசமான நடுநிலைமை என்று ஏதும் இல்லை. சுரண்டப்படுபவர்களுக்கும், சுரண்டுபவர்களுக்குமிடையே நடுநிலை என்பது சுரண்டுபவர்களுக்கு ஆதரவான நிலைபாடு தான். ஒடுக்கப்படுபவர்களுக்கும், ஒடுக்குபவருக்கும் இடையே நடுநிலைமை என்பது ஒடுக்குமுறைக்கு ஆதரவான நிலைபாடு தான். பெண்ணுரிமைக்கும், ஆணாதிக்கத்திற்கும் இடையே நடுநிலைமை என்பது ஆணாதிக்கத்திற்கு ஆதரவான நிலைபாடுதான். எனவேதான், நான் சார்பு நிலை என்று சொல்கிறபோது, சுரண்டப்படுபவர்களுக்கும், ஒடுக்கப்படுபவர்களுக்கும் பெண்ணுரிமைக்காகவும் நிற்கிறேன் என்று பொருள். இப்படிச் சொல்வது ஒருவருக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். ஏன் கசப்பாக கூடத் தோன்றலாம். ஆனால், இதுதான் உண்மை.
பொதும்பு என்று மதுரைக்கு அருகில் இருக்கும் கிராமம். மாணவிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளானபோது யாருமே பேசவில்லை. நான் யாருக்காக பேசினேனோ அவர்களும் கூட வரவில்லை. அதை பேசிய நான்கு பேர், மூன்று பேர் நடத்திய போராட்டங்களை நான் பதிவு செய்திருக்கிறேன். நீண்ட போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணமும் கிடைத்தபோது நான் திருப்தியடைந்தேன். ஆனால், நான்கு பேரும், ஐந்து பேரும் போராடியபோது அதை வெறும் செங்கொடி இயக்கச் செய்தியாக மட்டும் கடந்து போன பலரும் நீதிமன்றம் சொன்னபிறகு முழுபக்கமும் பிரசுரித்து தங்கள் நடுநிலைமையை வெளிப்படுத்திக் கொண்டார்கள். பலரின் ஆன்மீகப் பற்று அல்லது வேசம், பிரேமானந்தாவால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக்கொண்டு வராதபோது நான் தொடர்ச்சியாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தேன். இப்போதும், தமிழகத்தில் உள்ளடங்கிய கிராமங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமையோ, சாதி ஒடுக்குமுறை யோ, ஆணவக் கொலையோ - ஒன்று அதை முதலில் பதிவு செய்தவனாக நான் இருந்திருப்பேன் அல்லது பலர் விட்டு ஓடிய இடத்திலிருந்து நியாயம் கிடைக்கும் வரை எங்காவது உரத்த குரலில் பேசிக் கொண்டே இருந்திருக்கிறேன். பேசி கொண்டே இருக்கிறேன்.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். மொழிகளில் வர்க்கத் தன்மை, ஒடுக்குமுறைத் தன்மை ஆகியவற்றை நான் உணர்ந்து பல நேரங்களில் என் பேச்சின் மூலம் அவற்றின் தன்மையை மாற்றி யிருக்கிறேன். ஆணவப் படுகொலை கள் என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், ஆரம்பத்தில் இவை கௌரவப் படுகொலைகள் அழைக் கப்பட்டு வந்தன. ஆனால், கொலைகளில் என்ன கௌரவம் இருக்கிறது என்று விடாப்பிடியாக விவாதித்து அதை ஆணவப் படு கொலை என்று எழுத ஆரம்பித்தேன். இப்போது பரவலாக அந்த கொடூரம் ஆணவப்படுகொலை என்றே அழைக்கப் படுகிறது. கற்பழிப்பு என்ற வார்த்தை இப்போது கற்றுத் தேர்ந்தோரா லும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட ஒரு பெண் ணையே குற்றவாளியாக்கும் அந்த வார்த்தையை நான் நீக்குவதற்கு போராடினேன். இப்போது அது பாலியல் வன்கொடுமை என்றே வழக்கத்திற்கு வந்திருக்கிறது.
நவீன தாராளமயம் வளர்ச்சி என்ற வேசத்தோடு இந்தியாவில் அடியெடுத்து வைத்த காலத்தில் அதை சீர்திருத்தம் என்றார்கள். பிறகு, நானும் என்னை போன்றவர்களும் அதிலிருந்த உழைப்பா ளருக்கும் விவசாயிகளுக்கும் எதிரானவற்றையெல்லாம் உரத்து பேசிக் கொண்டே இருந்தோம். அப்போது அவர்கள் தங்கள் குரலை மாற்றினார்கள். மனித முகத்துடன் கூடிய சீர்திருத்தம் என்று கூறினார்கள். முகத்தில் மனித தோற்றமும், மூளையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும், லாப பெருவெறியும் நிறைந்திருப்பதை நான் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறேன். இந்தியாவின் திருக் கோவில்கள் என்று உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் காவு கொடுக்கப்பட்ட போதெல்லாம் அவற்றை காவு கொடுக்க முனையும் போதெல்லாம் களத்தில் நான் நின்றிருக்கிறேன். களத்தில் நிற்பவர்களோடு கரம் கோர்த்து நின்றிருக்கிறேன். இதனால் எல்லாம் ஆட்சியாளர்களால் பல நேரம் நான் ஒடுக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். மதவெறித் தீயை, சாதி வெறிக் கொடூரங்களை தங்கள் குரலாக அழகிய வார்த்தைகளில் பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது எந்தவித சமரசமுமின்றி எல்லாக் காலத்திலும் மக்கள் ஒற்றுமைக்காக என்னை மனமுவந்து அர்ப்பணித்திருக்கிறேன். எனது பேச்சுப் பரப்பு சிறியது. மணிப்பூரின் துயரங்களை, பெண்கள் ஆடையின்றி ஊர்வல மாக அழைத்துச் செல்லப்பட்ட காணொலி வந்தபிறகு தான் எல்லோரும் பேசினார்கள். ஆனால், அதற்கு வெகு காலத்திற்கு முன்பே நான் அதை பேசியிருக்கிறேன். பேசிக் கொண்டே இருக்கிறேன். பேசிக் கொண்டே இருப்பேன். இப்போது இன்னும் வீரியத்தோடும், இன்னும் வேகத்தோடும், இன்னும் பரவலாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள், சுரண்டப்படும் மக்கள், துயரப்படும் பிரிவினர் இவர்களுக்காக வாதாடாவும், போராடவும் இன்னும் விரிவாகச் செல்வதற்காக திரு நெல்வேலியில் இருந்தும் என் பயணத்தை துவங்குகிறேன்.