articles

img

புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின் துயரம் - அ.பழநிசாமி

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பாலங்கள், சாலைகள், துறைமுகங்கள், இருப்புப் பாதை கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளிலும், சுமை தூக்கும் பணிகள் மற்றும் சாலையோர தேனீர்க் கடை துவங்கி சலூன் வரைக்கும் சிறிய பலசரக்கு கடைகள் முதற்கொண்டு மிகப்பெரிய மால்கள் வரை யிலும் வட மாநில தொழிலாளர்கள் அனைத்து விதமான பணிகளிலும் ஈடுபடுவதை தினசரி நம்மால் பார்க்க முடிகிறது. சமீப ஆண்டுகளாய் தமிழகத்தின் நஞ்சை வயல்களில் வட மாநிலத்தின் ஆண்களும் பெண்களும் நடவுப் பணியில், அறுவடையில்  பருவ    காலங்களில் விவசாயப் பணிகளில், ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் விவசாய வேலைகளில் ஏற்பட்டு வரும் தொழிலாளர் கள் பற்றாக்குறையை சரி செய்து வருகிறார்கள்.  பெரும்பாலான தருணங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் வணிக ஊடகங்கள் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பல்வேறு விதமான மீம்ஸ்கள், கேலிச் சித்தி ரங்கள், கருத்துக்களை தவறாக விஷம் போல பரப்பி வருகிறார்கள். வடக்கன்ஸ்,   வடக்கன்ஸ் ஆதிக்கம்,  அட்டகாசம், அட்டூழியம், சேட்டைகள், தொல்லை தாங்கல, இந்தா வந்துட்டான்யா வடக்கன்ஸ் என்பது போன்ற அருவருப்பான மொழிகளால் அவமானப்படுத் தப்படுகிறார்கள். மொத்த வட  மாநில தொழிலாளர்க ளும் திருடர்களை போல சித்தரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைப்பவர்கள், இவர்க ளால் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது என்பது போன்று தமிழ்ச் சமூகத்தில் ஒருவித வெறுப்புணர்வுடன் பரப்பப் படுகிறது. 

கண்டு கொள்ளாத உச்சநீதிமன்றம் பாடம் கற்காத பாஜக அரசு

2019 மார்ச் 31 கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்தின்  ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில் தண்டவாளங்களிலும் , தேசிய நெடுஞ்சாலைகளிலும் சொந்த கிராமங்களை நோக்கி பயணித்த லட்சக்க ணக்கான தொழிலாளர்களின் துயரங்களை நாடு கவலையோடு பார்த்தது. பசியால் நூற்றுக்கணக்கான வர்கள் இறந்து போனார்கள். தண்டவாளத்தில் நடந்து சென்ற 9  தொழிலாளர்கள் ரயில் மோதி மரித்தார்கள்.  உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஒன்றிய அரசை  கடுமையாக கண்டித்த பிறகு புலம்பெயர் தொழிலா ளர்களுக்கு ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது. போக்குவரத்து செலவினங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது.  இவ்வளவு கொடூரம் நிறைந்த பேரிடர்க் காலத்தில் கூட புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு, இருப்பி டம், சுகாதாரம் குறித்து உச்ச நீதிமன்றமும் எந்த உத்தர வும் பிறப்பிக்கவில்லை. இத்தகைய பேரிடர் கால துய ரங்களிலிருந்து ஒன்றிய அரசாங்கம் பாடம் கற்றுக் கொண்டதாகவும் இல்லை.  துன்ப துயர் நிறைந்த வாழ்க்கையுடன் வாழ்க்கையை நடத்தும் பெரும் சமூகம் குறித்து அரசு ஏஜென்சிகளும் ஊடகங்களும் சரியாக இன்னும் புரிந்து கொள்ள முன்வரவில்லை. 

கதை கட்டும் ஊடகங்கள்...

கடந்த மார்ச் மாதத்தில், தமிழ்நாட்டின் பிரபல நாளி தழ் ஒன்றும், பிரபல தொலைக்காட்சி ஒன்றும் விவசா யத்தில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வேலை பார்த்து வருவதாகவும் விவசாயி கள் நெகிழ்ச்சியோடு இருப்பதாகவும் செய்திக் கட்டுரை  வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள். வட மாநில தொழிலாளர்கள் குறித்த வசவு  மொழிகள் இல்லாதது தான் சிறப்பு.  வயல்வெளியில் உழலும் வட மாநில தொழிலாளர்கள் வாழ்வியல் குறித்து எந்தப் பதிவும் இல்லை.  சிறிய குடிசை,  மாட்டுத் தொழுவம், மின் மோட்டார் அறைகள், போர்ப் பட்டிகள் இப்படி தான் வடமாநில தொழிலாளர்கள் தங்குமிடம் அமைகிறது. பெரும்பா லான கிராமங்களில் 6 க்கு 4 அடி நீளம் அகலமுள்ள தற்காலிக ஓலைக் குடிசைகள் செட்டமைத்து தரப்படு கிறது.  ஒரே அறையில் நான்கைந்து நபர்கள் அடுக்கடுக் காய் ஒருத்தர் மேல் ஒருத்தராக கை கால் நீட்டி படுத்து உறங்க முடியாத அவலத்தில் வாழ்கிறார்கள்.  குளியலறையோ கழிவறையோ இல்லை. அனைத்திற் கும் திறந்த வெளி தான். கடும் வெயில், மழை, குளிர் மற்றும் பேரிடர் காலங்களிலும் இத்தகைய குடியிருப்புக ளிலேயே தங்கி பணி செய்யும் தொழிலாளர்கள் தான் மகிழ்ச்சியோடு இருப்பதாக மேற்கண்ட ஊடகங்கள் சொல்கின்றன.

கொழுக்கும் கங்காணிகள் 

மேற்குவங்கம், பீகார், குஜராத், ஒடிசா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டி ரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் கும்பல் கும்பலாய் ஏஜன்சிகள் மூலம் அழைத்து வரப்படு கிறார்கள்.  ஊடகங்கள் தெரிவிப்பது போல கொஞ்சம் ரேசன் அரிசியும், உள்ளூர் தொழிலாளர்களை விட மிகக் குறைந்த கூலியாக ரூ.150/ முதல் ரூ.200/ ரூ.250/ வரை பெற்றுக்கொண்டு 16 மணி நேரத்திற்கும் மேலாக எந்திரங்களை போல் உழைக்கிறார்கள். பெரும் விவசா யிகளிடத்தில் வேலைக்கு  அமர்த்தும் கங்காணி முகவர் கள் வடமாநில தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கிறார்கள்.  விவசாய வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டப்படி எங்கேயும்  பதிவு செய்யப்படுவதில்லை. 1948 குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் கூலியை ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவாதம் செய்யவில்லை.  1979 புலம் பெயர் தொழிலாளர்களின் நலச் சட்ட அடிப்ப டையில் அவர்களுக்கான இருப்பிடம், உணவு, சுகாதா ரம், கூலி, சமூகப் பாதுகாப்பு குறித்து எந்த அரசும் இது வரை கவலைப்படவில்லை. புலம் பெயர் தொழிலா ளர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல்  ஒரு கவளம்  சோற்றுக்காக சொந்த மண்ணை விட்டு தமிழகத்தில்  நாடோடிகளாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஒரே கூலி, ஒரே வசதி  ஒன்றிய அரசின் தோல்வி

பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களி லிருந்தும், ஏழைகளின் மாதா என பீற்றிக் கொள்ளும் மம்தா ஆட்சி செய்யும் வங்கத்திலிருந்தும் அதிக அளவில் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருகி றார்கள். விவசாய வேலைகளில் நாடு முழுவதும் ஒரே கூலியும், சமூகப் பாதுகாப்பும், உணவு உத்தரவாத மும், சுகாதாரமும் கொடுக்க முடியாத ஒன்றிய அர சின் தோல்விதான் புலம்பெயர் தொழிலாளர்களின் படையெடுப்பாக இருக்கிறது. இத்தகைய தொழிலா ளர்களின் ஆக்கிரமிப்பால் தான் தமிழர்களின் வேலை பறிபோய் விட்டது என்று இனவெறியும் பரப்பப்படு கிறது.  தமிழகத்தை விட விவசாயம் செழித்து வளர்ச்சி அடையும் வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத்,  ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயத் தொழிலாளர்கள் புலம்பெயர்வதற்கு காரணம் அவர்களுக்கு நியாயமான சட்டக் கூலி கொடுக்கப் படாததும், கிராமப்புற ஆதிக்கமும் கௌரவமான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தாத அரசாங்கங்க ளும் தான்  குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.  

குறைந்த கூலி,  எந்திரங்கள் பயன்பாடு...

மிகவும் கடினமான விவசாய வேலைக்கு, 100 நாள்  வேலையில் தரப்படும் கூலியை விட மிகவும் குறைந்த கூலி தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படு கிறது. விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. கல்வி,  மருத்துவம், வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசி யத் தேவைகள் அனைத்தும் பலநூறு மடங்கு உயர்ந்துள்ள சூழல் காரணமாக தான் விவசாய வேலை களில் தரப்படும் குறைந்தபட்ச கூலிக்கு வேலை செய்ய உள்ளூர் ஆட்கள் வருவது இல்லை. ரூ.150/ முதல் ரூ.200/ வரை தான் பெண்களுக்கு தினக்கூலி கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் கௌரவமாக பணித் தளங்களில் நடத்தப்படுவது இல்லை. செய்த வேலைக்கும் நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின்னரே கூலி இன்றளவும் தரப்படுகிறது.   அருகிலுள்ள நகரங்களில் கட்டுமானத் தொழில் களில் பெண்களுக்கு ரூ.500/ முதல் ரூ.600/ வரை கிடைக்கிறது. திறன் பெற்ற ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.1000/ முதல் ரூ.1200/ வரை கூலியாகக் கிடைக்கிறது. திறன் பெறாத தொழிலாளர்களுக்கு ரூ.700/ முதல் ரூ.900/ வரை கூலியாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகவே கிராமப்புற உழைப்பாளி மக்கள் விவசாய வேலைகளைவிட்டு நகர்ப்புறங்களில் கிடைக்கும் பல்வேறு வகையான பணிகளுக்குச் செல்கிறார்கள். விவசாயத்தில் எந்திரங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத் தான் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. 

புலம் பெயர் தொழிலாளர்கள் விவசாயப் பணி களில் ஈடுபடுவதால் பெரும் விவசாயிகளுக்கு குறைந்த கூலிக்கு தொடர்ந்து தங்கி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதால் சற்று ஆறுதல் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் சிறுகுறு விவ சாயிகளுக்கு இதுவும் கிடைக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்படுவதும், இலவச மின்சாரம், நீர்ப்பாசனப் பராமரிப்பு, மேம்பாடு அடைவதும், நதிநீர் தாவாக்களில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதும், விவசாய உற்பத்திக்கான விதை, உரம், பூச்சிக் கொல்லி கள் தரமாகவும், அரசே உற்பத்தி செய்து குறைந்த விலையில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்வ தும், இயந்திரங்களின் பயன்பாட்டை கூட்டுறவாக்கி சிறுகுறு விவசாயிகள் குறைந்த வாடகையில் கிடைக்கச் செய்வதும் தான் விவசாயிகளுக்கு உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும்.  சோற்றுக்காக செக்கு மாடாய் உழைக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்  கூலியை குறைப்பது ஏஜெண்டு கள் கொழுத்துத் திரியவே பயன்படும். புலம் பெயர் தொழிலாளர்களை அமைப்பாய் திரட்டுவதில் உள்ளூர்த் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும். அப்போது தான் விவசாயத் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களை உழைப்புச் சுரண்ட லிலிருந்து பாதுகாக்க முடியும். இப்போதைய தேவை, வட மாநிலத் தொழிலாளர்களை அமைப்பாய் திரட்டி உரிமைகளுக்காய் போராடுவது மட்டுமே. 

கட்டுரையாளர் : மாநிலப் பொருளாளர், 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்