2024 தேர்தல்களில் தனது வெற்றி வாய்ப்பு குறித்து பாஜகவுக்கு பெரிதாக கவலை ஏற்பட்டுள் ளது. ராமர் கோவில் கூட தனக்கு பெரும்பான்மையை தராது என மோடி தலைமையிலான பாஜக எண்ணு கிறது. பொருளாதார பிரச்சனைகள் மக்களிடையே கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளன. இதனை இந்துத்துவா வாக்கு வங்கி ஈடுகட்டுமா என்பது சங் பரிவாரத்துக்கு பெரும் ஐயம்! எனவே அனைத்து வாய்ப்புகளையும், சூழ்ச்சிகளையும் பிரயோகிக்க பாஜக முனைந்துள்ளது. அதில் ஒரு முக்கிய நகர்வு தான் பாரத ரத்னா விருதுகளை அப்பட்டமாக தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்வது.
தேர்தலுக்கு சற்று முன்பாக 5 பாரத ரத்னா விருதுகளை மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பும் பாரத ரத்னா விருதுகள் விவாதங்க ளை கிளப்பியது உண்டு. 1988-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட பொழுது டாக்டர் அம்பேத்கருக்கும் சர்தார் பட்டேலுக்கும் தரப்படாத பாரத ரத்னா எம்.ஜி.ஆருக்கு எப்படி பொருந்தும் எனும் கேள்வி எழுந்தது. அதே போல 2014-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு தரப்பட்ட பொழுது அதற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் பாஜக அரசாங்கம் ‘விருது வஞ்சக அரசியலில்’ பெரும் சாதனை படைத்துள்ளது எனில் மிகை அல்ல.
‘மண்டலை’ சுவீகரிக்க முயற்சி
இந்த ஆண்டின் முதல் பாரத ரத்னா கர்ப்பூரி தாக்குருக்கு அறிவிக்கப்பட்டது. சோசலிசம் பேசிய ஆளுமைகளில் ஒருவரான கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா அளிக்கப்பட்டதை எவரும் விமர்சிக்க இயலாது. ஆனால் திடீரென தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதின் பின்னால் உள்ள அரசியல் நோக்கம் இந்த விருதின் தன்மையை மட்டுமல்ல; கர்ப்பூரி தாக்குர் எனப்படும் ஆளுமையையும் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
பிற்படுத்தப்பட்ட/ தலித்/ பழங்குடி இன மக்க ளுக்கு சமூக முன்னேற்றம் காண பயன்படும் பல அரசியல் முன்னெடுப்புகளில் ஒன்று இட ஒதுக்கீடு. தமிழ்நாடும் ஏனைய தென் மாநிலங்களும் இதில் முன்னோடிகள் என்றாலும் வட மாநிலத்தில் இதனை செயல்படுத்திய பெருமை கர்ப்பூரி தாக்குர் அவர்களையே சாரும். இட ஒதுக்கீடு நன்மை கூட இடை நிலை சாதிகளில் உள்ள மிகவும் பாதிக்கப் பட்டவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என அவர் விரும்பினார். எனவே இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரான தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களிடம் கலந்தாலோ சித்து பீகாரில் அவர் அமலாக்கிய இட ஒதுக்கீடு ‘‘கர்ப்பூரி தாக்குர் ஃபார்முலா’’ என பின்னர் அழைக்கப் பட்டது. அவர் 1988-ஆம் ஆண்டு மறைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா குறித்து பா.ஜ.க எதுவும் சிந்திக்கவில்லை. இடையில் சங் பரிவாரத்தை சேர்ந்த மதன் மோகன் மாளவியா/நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு பாரத ரத்னா அறிவித்த மோடி அரசாங்கம், இப்பொழுது ஏன் கர்ப்பூரி தாக்குர் மீது பாசம் காட்டியிருக்கிறது எனும் கேள்வி எழுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் பீகாரில் 40-ல் 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. அப்பொழுது பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இருந்தது. பின்னர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இதன் விளைவாக சுமார் 20 முதல் 25 தொகுதிகளை பாஜக இழக்கும் நிலை உருவானது. இதனை வேறு எங்கும் ஈடுகட்ட இயலாது. எனவே பீகாரில் மீண்டும் வெற்றி பெற வேண்டுமானால் எதிர்த் தரப்பில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையை சிதைப்பது ஒன்றுதான் ஒரே வழி. அதற்கு இசைந்து போகும் ஒருவர் இருப்பார் எனில் அது நிதிஷ் குமார்தான் என்பது பாஜகவுக்கு தெரியும். எனவே அவர்கள் நிதிஷ்குமாருடன் பேரம் பேசினர். திடீரென கூட்டணி மாறினால் மக்களிடம் வெறுப்பு உருவாகும் என்பதால் அதற்கு வழிவகுத்த ஒரு சூழ்ச்சிதான் கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது. அதற்கு பின்னரும் கூட நிதிஷ்குமார் ‘‘பல்டுராம்’’ (குட்டி கரணம் அடிக்கும் குரங்கு) என மக்களால் விமர்சிக் கப்படுகிறார் என்பது வேறு கதை!
கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா என்பதில் பீகாரைத் தாண்டியும் பாஜகவுக்கு ஒரு நோக்கம் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலுவான கோரிக்கை உருவாகி வருகிறது. பீகாரில் எடுக்கப்பட்ட கணக்கெ டுப்பில் பல உண்மைகள் வெளி வந்துள்ளன. ஆனால் ‘ஆர்எஸ்எஸ், சாதிவாரி கணக்கெடுப்பை விரும்ப வில்லை. இன்றைய சூழலில் ஆர்எஸ்எஸ் வரைந்துள்ள லட்சுமண ரேகையைத் தாண்டும் தைரியம் மோடிக்கு இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கூடாது; அதே சமயம் தன்னை இடஒதுக்கீடு காவலனாக பிம்பம் உருவாக்க வேண்டும். அந்த நோக்கத்தை கர்ப்பூரி தாக்குருக்கு விருது மூலம் நிறைவேற்ற பாஜக முனைந்துள்ளது. கர்ப்பூரி தாக்குரை தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக பயன்படுத்துவதன் மூலம் அவரையும் பாரத ரத்னா விருதையும் பாஜக அரசாங்கம் சிறுமைப்படுத்தியுள்ளது எனில் மிகையல்ல.
விவசாயிகளை ஏமாற்ற விருதுகள்
நாடு முழுவதும் விவசாயிகள் தமது அரசுக்கு எதிராக அதிருப்தி கொண்டுள்ளனர் என பாஜக அறியும். வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற்ற அனுபவம் பாஜகவுக்கு கசப்பான ஒன்று. தனது அரசியல் வரலாற்றிலேயே சட்டங்களை இயற்றி பின்னர் மோடி பின்வாங்கிய ஒரே மிக முக்கிய தருணம் மூன்று வேளாண் சட்டங்கள்தான்! அதற்கு பின்னரும் விவசாயிகளிடம் பரவலான அதிருப்தி உள்ளது என்பதில் பாஜக கவலை கொண்டுள்ளது. எனவே விவசாயிகளை திருப்திப்படுத்த சரண்சிங் அவர்க ளுக்கும்; எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு ஆளுமைகளும் முன்வைத்த கோட்பாடுகளை குழி தோண்டி புதைத்துவிட்டு அவர்களுக்கு விருது அளிப்ப தன் மூலம் விவசாயிகளை வென்றெடுக்கலாம் என பாஜக அரசு தப்பு கணக்கு போடுகிறது.
தன் வாழ்நாளின் பெரும் பகுதியை விவசாயிக ளின் நலனுக்காக செலவிட்டவர் சரண்சிங். அந்த காலத்திலேயே நேருவை எதிர்க்கும் தைரியம் பெற்றவர். நேருவின் கொள்கைகள் நகர்புறங்களில் நன்மை உருவாக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் முன்னேற்றத்தை கொண்டுவரவில்லை என ஆழமாக அவர் விமர்சித்தார். இது விவசாயிகளிடையே, குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் தாக்கத்தை உரு வாக்கியது. இதற்கும் மேலாக சரண்சிங் ஒரு மகத்தான செயலை செய்தார். அதுதான் இந்து-முஸ்லீம் ஒற்றுமை! விவசாயிகள் இயக்கத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பங்கேற்பதை அவர் உத்தரவாதம் செய்தார். பல ஆண்டுகளாக ஜாட் இன மக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக பழகினர் எனில் அதற்கு சரண்சிங் அவர்களின் மத ஒற்றுமையை உருவாக்க வர்க்க ஒற்றுமையை கட்டிய முன்னெ டுப்புகள் முக்கிய காரணம்.
இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பல ஊழியர்களை களம் இறக்கிய ஆர்எஸ்எஸ் வெற்றி பெற்ற பொழுதுதான் 2013-ல் முசாபர் நகர் மதக்கலவரம் உரு வானது. ஜாட்-முஸ்லீம் ஒற்றுமை சீர்குலைந்தது. மீண்டும் இந்த ஒற்றுமை தில்லி விவசாயிகள் போராட்டத்தின் பொழுதுதான் ஓரளவுக்கு புனர மைக்கப்பட்டது. 1980-களின் தொடக்கத்தில் ஜனதா கட்சியில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பி னர்களாக இருக்கக் கூடாது எனும் பிரச்சனையில் சரண்சிங் உறுதியாக இருந்தார். இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலை எடுத்த மொரார்ஜி தேசாய் அரசாங்கம் கவிழ்ந்து சரண்சிங் ஆட்சி அமைத்த பொழுது இடதுசாரிகள் அவருக்கு ஆதரவு அளித்தனர். அப்பொழுது நடந்த ரிசர்வ் வங்கி ஊழி யர்கள் போராட்டம் மற்றும் லோகோ ரயில்வே ஊழி யர்கள் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவ தில் சாதகமான நிலையை சரண்சிங் எடுத்தார்.
சரண்சிங் அவர்களின் விவசாயக் கொள்கை களை உதாசீனப்படுத்திய பாஜக அவரின் மிக முக்கிய முன்னெடுப்பான இந்து-முஸ்லீம் ஒற்றுமையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனினும் அவருக்கு பாரத ரத்னா அறிவித்ததன் மூலம் உ.பி.யில் ஒரு நிதிஷ்குமாரை உருவாக்கியுள்ளது. சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக்தள் கட்சியை அகிலேஷ் யாதவ் தலைமை யிலான கூட்டணியிலிருந்து உருவி எடுத்துள்ளது. இதன் மூலம் உ.பி.யில் கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வென்ற 80க்கு 64 எனும் எண்ணிக்கை யை உயர்த்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது. எனினும் உ.பி.யில் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே வாக்கு வங்கி கொண்டுள்ள ராஷ்டிரிய லோக்தளம் பாஜகவுக்கு பெரும் நன்மையை தரப் போவது இல்லை.
விவசாயிகள் ஏமாளிகள் அல்ல!
விவசாயிகளை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட இன்னொரு விருது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு தரப்பட்ட பாரத ரத்னா ஆகும். எம்.எஸ். சுவாமிநாதனுக்கு தரப்பட்ட விருதை எவரும் குறை கூற இயலாது. அதே சமயம் விவசாயிகளுக்கு 50 சதவீத லாபம் உத்தரவாதம் செய்தல்/ குறைந்தபட்ச ஆதார விலை போன்ற அவரின் வலுவான பரிந்துரை களை புறம்தள்ளிவிட்டு அவருக்கு விருது தருவது விவசாயிகளை ஏமாற்றும் இழிவான அணுகுமுறை. விவசாயிகள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக அரசாங்கம் உணரும்.
எல்.கே. அத்வானிக்கும் நரசிம்மராவுக்கும் தரப்பட்ட விருதுகளும் அரசியல் நோக்கம் கொண்ட வையே! ஒருவர் பாபர் மசூதியை இடித்தார் எனில் இன்னொருவர் பிரதமராக இருந்தும் அந்த இடிப்பின் பொழுது மவுனம் காத்தார். ராமர் கோவில் உருவானதில் மிகப்பெரிய பங்கு ஒருவருக்கு இருக்கி றது எனில் அது அத்வானிக்குதான்! ‘ரத்த யாத்திரை’ யாக மாறிய அத்வானியின் ரத யாத்திரைதான் மசூதி இடிப்புக்கு காரணமாக இருந்தது. ஆனால் இன்றைய பாஜகவோ ராமர் கோவில் எனில் அது மோடிதான் என பிம்பம் உருவாக்க முனைந்துள்ளது.
அத்வானி அல்லது வேறு எவருக்கும் எந்தப் புகழும் சென்று விடக்கூடாது என எண்ணுகின்றனர். எனவே ராமர் கோவில் தொடக்க விழாவில் அத்வானி புறக்க ணிக்கப்பட்டார். அது பல விமர்சனங்களை உருவாக்கி யது. அந்த அதிருப்தியை மட்டுப்படுத்த அத்வானி க்கு பாரத ரத்னா! தேசத்தின் உயரிய விருதை இதுவரை இல்லாத அளவுக்கு தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன் படுத்த முனைந்துள்ள பாஜகவின் செயல்கள் அந்த விருதை சிறுமைப்படுத்துவது மட்டுமல்ல; கர்ப்பூரி தாக்குர்/ சரண்சிங்/ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய ஆளுமைகளையும் பகடைக்காய்களாக பயன் படுத்தும் மோசமான அணுகுமுறையும் கொண்டுள் ளது. இந்த ஆளுமைகளின் கோட்பாடுகளை புறக்க ணித்துவிட்டு அவர்களுக்கு தரும் விருது என்பது ஒருவரின் உயிரையும் ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டு வெறும் எலும்புக்கூட்டை ஆராதிப்பதற்கு சமம்.
இந்த அப்பட்டமான அரசியல் கூட பாஜகவுக்கு பலன் தருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.