articles

நலத்திட்டங்கள் புறக்கணிப்பு; மோடி அரசின் பிடிவாதம்- மோஹித் வர்மா, ஷ்ரவன் எம்.கே

பாஜக கூட்டணி அரசு அதனுடைய மூன்றாவது ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே கடைப்பிடித்த கொள்கை யையே மாற்றம் ஏதுமின்றி தொடர்கிறது. 

மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு காரணங்க ளுக்காக பல மட்டத்திலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசின் தரவுகளின்படியே, சுமார் 34 சதவிகித மக்கள்  நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய்க்கும்  குறைவான வருமானத்தில் வாழ்கின்ற நிலையில், 81 கோடி மக்கள் பசியை போக்க இலவச உணவு தானியங்களை நம்பி இருக்கும் நாட்டில் தான் ஒன்றிய அரசின் முரட்டுப் பிடிவாதம் கவலை அளிக்கிறது.

முக்கிய நலத்திட்டங்களுக்கு  நிதி குறைப்பு!

அரசாங்கத்தின் மிகப்பெரும் இரண்டு நலத் திட்டங்கள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உத்தரவாத சட்டம்  (MGNREGA )மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA). இவை இரண்டிற்கும் 2014 - 15 ஆம் ஆண்டில் இருந்தே ஒதுக்கப்படுகின்ற நிதியின் அளவு குறைந்து வருகிறது. கோவிட்  19 தொற்றுநோய் ஆண்டுகளில் ஒரு பேரழிவிலிருந்து இந்திய மக்களை பாதுகாத்ததில் இந்த இரண்டு திட்டங்களும் முக்கியப் பங்காற்றின.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.72 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 0.63 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவிற்கு வழியில்லாத நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மூன்று வேளை உணவு பெற முடியாத நாட்டில் இத்தகைய முடிவுகள் விநோதமாக உள்ளது.

அதுபோல, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு 0.29 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 0.26 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் 2014-15 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடும் பொழுது பட்ஜெட் ஒதுக்கீடு 25 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  கிராமப்புறங்களில் உண்மை ஊதியம் தேக்கம் அடைந்து முறையான நிதி உதவி இல்லாமல் நாடு முழுவதும் கிராமப்புற மக்கள் துயரங்கள்  அதிகரித்து வருகிறது.

விழி பிதுங்கும்  விளிம்பு நிலை மக்கள்!

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் விதவைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் போன்ற விளிம்பு நிலை மற்றும் பாதிப்படைந்தவர்களும் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டனர். இவர்களுக்கான சமூக நிதி உதவி திட்டம் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் அந்த குடும்பங்களுக்கு பண உதவியை வழங்குகிறது. பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீட்டில் எந்தவிதமான அதிகரிப்பும் இல்லை. 2014 -15 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.06 ஒதுக்கப்பட்டது என்றால், தற்போது அது பாதியாக 0.03% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் முதியவர்களுக்கு மாதம் ரூபாய் 200 மற்றும் உதவிகளுக்கு மாதம் 300 ரூபாய் என அற்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. பலமுறை பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை வைத்தும் 2006ஆம் ஆண்டு முதல் இந்த தொகை அதிகரிக்கப்படவில்லை. வறுமைக்கோடு, நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் ஊதியம் என்றால் இவர்கள் அதற்கும் குறைவாக (சுமார் 66 சதவீதத்திற்கும் குறை வாக) பெற்று அதல பாதாளத்தில் இருக்கின்றனர்.

நலன் மற்றும்  ஊட்டச்சத்திற்கான திட்டங்கள்

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை களின் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஒப்புக் கொண்டார். மேலும் இந்திய பெண்கள் மற்றும்  குழந்தைகளின் ரத்த சோகை விகிதம் உலக சராசரியை விட முறையே 20% மற்றும் 15% அதிகமாக உள்ளது. சக்க்ஷம் அங்கன்வாடி திட்டம்  (Saksham Anganwadi) 2021- 22, பிரதம மந்திரியின் முழுமையான ஊட்டச் சத்துக்கான போஷான் அபியான் திட்டம் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்துடன் (Poshan- Prime minister’s Overar ching Scheme for Holistic Nourishment)இணைக் கப்பட்டது. இதற்கு நிதி அதிகரிக்கப்பட்டாலும் 2014 -15 ஆண்டின் பட்ஜெட்டின் அளவில் பாதிக்கும் குறைவாக தற்போது உள்ளது . அதாவது,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13லிருந்து 0.6 சத வீதமாக குறைக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியைப் போக்க ஒன்றிய அரசு மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தியாவின் சுமார் 12 கோடி குழந்தைகளுக்கான திட்டம் இது. வகுப்புக்கு வருகை தருவது அதிகரிப்பதிலும் கல்வி மற்றும் ஊட்டச்சத்து அளிக்கும் இந்த திட்டத்திற்கும் மோடி அரசு நிதி ஒதுக்கீட்டை பாதியாக குறைத்துவிட்டது. மேலும் நிதி அமைச்சகம் 2021 ஆம் ஆண்டில் பள்ளிகளில் காலை உணவு அளிக்கும் திட்டத்தை நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி நிராகரித்துவிட்டது. கண்முன்னே தமிழகத்தில் சிறந்த உதாரணம் இருந்த போதும் அவர்களுக்கு இதை அமல்படுத்தும் விருப்பம் இல்லை. நம் குழந்தைகள் எதிர் நோக்கும் கடு மையான ஊட்டச்சத்து குறைபாட்டை மனதில் கொண்டு இந்த திட்டங்களை விரிவாக்கி அவர்க ளுக்கு ஊட்டச்சத்து உணவை உறுதி செய்வது மிகவும் அவசியமானதாகும். 

கல்வி அளிப்பதிலும்  முனைப்பு இல்லை!

கல்விக்கான (முதன்மை மற்றும் இடைநிலை) ஒன்றிய அரசின் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த ஆண்டு 0.25% ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 0.22% ஆக குறைக்கப்பட்டுள்ளது ஆரம்பக் கல்வியில் சேர்க்கைகள் அதிகமாக இருந்தாலும் கல்வித் தரம், அடிப்படை கட்டமைப்பு இன்னும் பிற விஷயங்களில் நாம் நீண்டதூரம் செல்ல வேண்டி உள்ளது. கல்விக்கான ஒதுக்கீடு 2014 -15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 0.37 %  லிருந்து தற்போது 0.22%ஆக குறைந்தது  கவலை அளிக்கிறது.

பெயர் அளவிற்குத்தான்  சுகாதாரத் திட்டங்கள்!

சுகாதாரத்துக்காக கடந்த 10 ஆண்டுகளில் 0.03% தான் அதிகரித்துள்ளனர். 2014 -15 ஆம் ஆண்டிலி ருந்து இன்று வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.25% தான் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் சுகாதாரத் திட்டங்கள் பல இருந்த போதும் மக்கள் தங்கள் கையில் இருந்து அதற்காக செலவு செய்யும் நிலை இன்று வரை நீடிக்கிறது. லட்சக்கணக்கான மக்களை இது வறுமைக்குள் தள்ளுகிறது.

2014 - 15ஆம் ஆண்டில் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் நல்வாழ்வுத் துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2.1சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 1.53 சதவீதமாக குறைந்துள்ளது.2020 ஆம் ஆண்டில் கோவிட்  19 காலத்தில் 4.31% இந்த திட்டங்க ளுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. எந்த அளவிற்கு அரசின் பங்கு இத்தகைய திட்டங்களுக்கு தேவைப் படுகிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

ஏழைகளைக்  காவு கொடுக்கும் மோடி அரசு!

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு களை வெட்டிச் சுருக்கும் மோடி அரசு தான் 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு  வரியை தள்ளுபடி செய்து (Taxes Foregone) கார்ப்பரேட்டுகளின் வயிற்றில் பாலை வார்த்தது.

உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World Inequality Lab) வெளியிட்ட மனித வளர்ச்சிக் குறியீட்டின் புதிய அறிக்கையில், இந்தியா 132 ஆவது இடத்தில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சமத்துவமின்மை இங்கே கூர்மையாகி வருவதை இது பளிச்சென்று காட்டுகிறது.

வழிகாட்டும் ஐமுகூ சகாப்தம்!

மோடி அரசு “விக்சித் பாரத்” (வளர்ந்த பாரதம்) என படம் காட்டுகிறது .ஆனால் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டுமானால் பசி, பட்டினி, கல்லாமை ஆகியவை களையப்பட வேண்டும். எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அதன் மக்கள் தொகை யில் பெரும் பகுதியினர் கண்ணியமான ஒரு வாழ்க்கையைப் பெற முடியாத நிலையில் அதை வளர்ச்சி அடைந்ததாக கருதி விட முடியாது. பல்வேறு புதிய நலத்திட்டங்களை உருவாக்கியது மட்டுமல்ல, அதற்கான நிதி ஆதாரங்களை பட்ஜெட்டில் உரு வாக்கியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம். அந்த முன்மாதிரியை மோடி அரசு பின்பற்றட்டும்.

கட்டுரையாளர்கள் : மோஹித் வர்மா, பெங்களூருவில் உள்ள 
குட் பிசினஸ் ஆய்வக  மூத்த ஆராய்ச்சியாளர். 
ஷ்ரவன் எம்.கே. பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையத்தில் ஆராய்ச்சியாளர். 
தி இந்து 16/8/24 
தமிழில்:  கடலூர் சுகுமாரன்