world

img

இந்திய அரசால் மிரட்டப்பட்டோம்!

போட்டுடைத்த டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி

வாஷிங்டன், ஜூன் 13- விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பதிவிடப்பட்ட டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப் பட்டோம் என டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி  (சிஇஓ) ஜேக் டார்ஸி தனியார் செய்தி  நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று (ஜூன் 12) “பிரேக்கிங்  பாயின்ட்ஸ்” என்ற யூடியூப் செய்தி நிறு வனம் டுவிட்டர் முன்னாள் தலைமை  செயல் அதிகாரி ஜேக் டார்ஸி யிடம், “டுவிட்டர் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரியாக இருந்த போது எந்தெந்த வெளிநாடுகளில் இருந்து என்ன மாதிரியான அழுத்தங் களை சந்திக்க நேர்ந்தது” என்று கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த ஜேக் டார்ஸி இந்தியாவின் அழுத்தங்களை முதன்மையானதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் விரிவாக கூறியதாவது, இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், ஒன்றிய அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன. அதாவது விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போராட்ட நிகழ்வுகளையும் பதிவிடும் டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் ஊழி யர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப் படும் என்றும், டுவிட்டர் அலுவல கங்கள் மூடப்படும் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன. ஒரு கட்டத்தில் இந்தியாவில் டுவிட்டரை கட்டுப் படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. ஆம், இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான். இதுதான் இந்தியா என்ற ஜன நாயக தேசம். துருக்கியும் இந்தி யாவைப் போலத்தான் நடந்து கொண் டது. விவசாயிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுது “காலிஸ்தான்” இணைப்புகள் என்று  கூறப்படும் கிட்டத்தட்ட 1,200 கணக்கு களை அகற்றுமாறு டுவிட்டரை இந்திய அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு முன்னரே 250க்கும் மேற்பட்ட கணக்குகளை அகற்றுமாறு டுவிட்டர் தளத்திற்கு மிரட்டல் விடும் வகையில் உத்தரவுகள் வந்தன” என ஜேக் டார்ஸி கூறியுள்ளார். 

துருக்கியும், நைஜீரியாவும்..

“இந்தியா போன்று துருக்கியும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக செயல்பட்டது. துருக்கியிடம் இருந்து எங்களுக்கு பல கோரிக்கைகள் இருந்தன. நாங்கள் துருக்கியுடன் அவர் களின் நீதிமன்றங்களில் போராடி னோம், அடிக்கடி வெற்றி பெற்றோம், ஆனால் அவர்கள் எங்களை (டுவிட்ட ரை) தொடர்ந்து மூடுவதாக அச்சுறுத்தி னர். மேலும் ஆப்பிரிக்கா நாடான நை ஜீரியா அச்சுறுத்தியது.  நைஜீரிய அரசாங்கம் எதாவது செய்துவிடுமோ என்ற பயத்தில் ஊழியர்களை வெளியே உலாவ (சாலை மார்க்க மாக) விட முடியாத சூழல் இருந்தது” என்றும் அவர் கூறினார். ஜேக் டார்ஸியின் கருத்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு மழுப்பல் ஜேக் டார்ஸியின் கருத்தால் எரிச்சல்  அடைந்துள்ள ஒன்றிய பாஜக அரசு,  அவரது கருத்திற்கு மறுப்பு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,  “டுவிட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஜேக் டார்ஸி கூறியிருப்பது உண்மையல்ல. என்ன காரணத்திற்காக அவர் இவ்வாறு கூறி இருந்தாலும் அது கற்பனையானதே. இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் அது உள்நாட்டு நிறுவனமோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, சிறிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ அவை இந்திய  சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்  என்பதில் ஒன்றிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

விவசாயிகள் போராட்ட ஆதரவு, அரசுக்கு எதிரான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஒன்றிய மோடி அரசின் இந்த செயல்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒன்றிய அரசு மீதான டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸியின் குற்றச்சாட்டு மோசமானதாகும். மோடி அரசு நிரந்தர மறுப்புப் போக்கிலேயே உள்ளது. நமது விவசாயிகளின் காவியப் போராட்டம் எப்படி நடத்தப்பட்டது. லத்திசார்ஜ், தண்ணீர் பீரங்கி, நெடுஞ்சாலைகள் தோண்டி எடுக்கப்பட்டது போன்ற சம்பவங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் மோடி பின்வாங்க வேண்டியதாயிற்று. ஊடகங்கள் கையாளப்படும் மூர்க்கத்தனமான விதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். மேலும் பொய்யான சாக்குப்போக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மோடி அரசாங்கத்தின் எந்த மறுப்பும் ஊடக உள்ளடக்கத்தின் உண்மையை மறைக்க முடியாது”என  கூறியுள்ளார்.