world

img

“சாவேஸ் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார்

“ராபின்சன் மிஷன்”

ஹியூகோ சாவேஸ் கொண்டு வந்தது தான் இந்த ராபின்சன் மிஷன்.  2003 ஆம் ஆண்டில் அவரால் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாகப் படிப்பு சொல்லிக் கொடுக்கப்பட்டது. 34 மொழிகளில் மட்டுமில்லாமல், செவி மாற்றுத் திறனாளிகளுக்கு சைகை மொழியிலும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்ல் மூலமும் கூட கற்பித்தார்கள். காரகஸ்  மலைத்தொடரில் பார்வை மாற்றுத் திறனாளி களுக்கு எழுத்தறிவு மையம் ஒன்றையும் திறந்தனர்.

இரண்டு ஆண்டிலேயே எழுத்தறிவின்மை யில் இருந்து விடுதலை பெற்ற பகுதியாக வெனிசுலாவை யுனெஸ்கோ அங்கீகரித்தது. இந்தக் காலகட்டத்தில் 14 லட்சம் பேர், குறிப்பாக மூத்த குடிமக்கள், எழுத்தறிவு பெற்றனர். இத்ன்பிறகு இடைநிலைக் கல்விக்காக ரிபாஸ் மிஷன் மற்றும் உயர்கல்விக்காக சுக்ரே மிஷன் ஆகியவையும் கொண்டு வரப்பட்டது. புதிதாக 42 பல்கலைக்கழகங்களைத் தொடங்கினார்கள். பல்கலைக்கழகத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்தது. சேர்க்கை விகிதத்தில் உலகிலேயே ஐந்தாவது இடத்தை வெனிசுலா பிடித்தது.

லத்தீன் அமெரிக்க தலைவர்கள் புகழாரம்

காரகஸ், மார்ச் 8- ஏகாதிபத்தியத்திற்கும், நவீன காலனியாதிக்கத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் சாவேஸ் இன்னும் உயிர்ப்போடு இருந்து கொண்டுதான் இருக்கிறார் என்று லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான சாவேசின் பொலிவாரியக் கோட்பாடு பற்றிய மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். ஹோண்டுரசின் முன்னாள் ஜனாதிபதியான மானுவல் செலாயா பேசுகையில், “கொடுமையான வன்முறையை வெனிசுலா மீதும், அந்நாட்டின் மக்கள் மீதும் ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டது. சாவேஸ் பதவியில் இருந்த காலத்தில் ஏராளமான சதிகள் பின்னப்பட்டன. ஆனால் இன்று, பத்தாண்டுகள் கழித்து, பொலிவாரியப் புரட்சியின் நாயகனான சாவேசுக்கு புகழாரம் சூட்டுவதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வெனிசுலாவில் ஒன்று சேர்ந்திருக்கிறோம்” என்றார். மேலும் பேசிய அவர், “பேரரசுக்கு வெனிசுலா மக்கள் எளிதாக இரையாகி விடுவார்கள் என்று நினைத்து சிலர் சாவேசின் மரணத்தைக் கொண்டாடினார்கள். புரட்சிகரப் பாதையை தடம் புரளச் செய்துவிடலாம் என்று தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி சீர்குலைக்க முயன்றவர்கள் இருந்தனர். பொலிவாரியப் புரட்சியின் தலைவர்களைக் கொல்ல முயன்றனர். ஹோண்டுரஸ், ஈக்குவடார், பராகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கலகம் செய்து ஆட்சிகளைக் கவிழ்த்தார்கள். வெனிசுலாவைத் தடைகள் மூலம் சிதைக்க நினைத்தார்கள்.  ஆனால் இன்று நிகோலஸ் மதுரோவோடு, நான், ரபேல் கோரியா, இவோ மொரெல்ஸ், லூலா, கிறிஸ்டினா, ரால் காஸ்ட்ரோ, டேனியல் மற்றும் பல ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஒரே மேடையில் நின்று கொண்டிருக்கிறோம். எங்கு நின்று கொண்டு மரியாதையைத் தர வேண்டுமோ, அங்கு நின்று கொண்டு உரிய மரியாதையைத் தந்து கொண்டிருக்கிறோம்” என்றார். 

இவோ மொரேல்ஸ்

பொலிவியாவில் புரட்டிப் போடும் மாற்றங்களைக் கொண்டு வந்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இவோ மொரேல்ஸ், “கொள்ளையடிப்பது, சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பறிப்பது ஆகியவற்றிற்கு எதிராக இந்தப் பூமி பந்து இருக்கும்வரையில் போராட்டங்கள் நடக்கும். மீண்டும், மீண்டும் போராட்டக்களத்திற்குத் திரும்புவோம். இதற்கு உத்வேகமாக இருந்த முற்போக்காளர், தலைவர் ஹியூகோ சாவேசுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். அதேபோல், ஏகாதிபத்தியத்தின் அனைத்து வகையான அக்கிரமங்களையும் எதிர்த்து நின்ற வெனிசுலா மக்களுக்கு எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “சாவேசுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி எப்படிப்பட்டதாக இருகக வேண்டும் என்றால், நாமும் புரட்சிகர சக்திகளில் ஒன்றாக இருப்பதேயாகும். மக்களின் போராட்டத்திற்கு துரோகம் செய்யாமல் இருப்பதே சாவேசின் போராட்டத்திற்கு துணை நிற்பதாகும். சாவேசின் கோட்பாடுகளைச் சிதைக்க ஏகாதிபத்தியம் எவ்வளவோ முயன்றது. ஆனால், சாவேசுக்கு அழியாப் புகழைத் தேடித் தந்து விட்டார்கள்” என்று கூறினார்.