tamilnadu

img

மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் காவலர்கள் மீது குண்டாஸ்

விழுப்புரம்.ஜன.2- மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மட்டுமல்லாது, உடந்தையாகச் செயல்படும் காவலர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சந்திப்பில் விழுப்புரம் மாவட்ட காவலர்கள் கடந்த ஓராண்டாக வழக்கமான பணிகளுடன், முக்கியத் திருவிழாக்களுக்கான பாதுகாப்புப் பணி, முக்கியத் தலைவர்கள் வருகைக்கு பாதுகாப்புப் பணி, இடைத்தேர்தல் பாதுகாப்பு பணி போன்ற பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டனர். ஓராண்டில் குறிப்பிடும்படியாக சில கொலை சம்பவங்களில், எதிரிகளை அடையாளம் காண்பதில் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அவற்றையும், முறையாக கையாண்டு, எதிரிகளை கைது செய்தோம்.  அதில் குறிப்பாக, 3 கொலை வழக்குகளில் துப்பு துலங்க காவல் துறையின் மோப்பநாய் பெரிய அளவில் உதவியாக இருந்தது, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்து உயிரிழப்புகளைவிட 2019-ஆம் ஆண்டில் 98 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.  அதாவது, கடந்த ஆண்டில், மொத்தம் 440 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்தனர். இதேபோல உயிரிழப்பு இல்லாத 2,433 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மது விலக்குப் பிரிவில் 2,475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மணல் கடத்தலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் மணல் கடத்தல் தொடர்பாக 1,774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மணல் கடத்தல்காரர்கள் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மட்டுமல்லாது அதற்கு உடந்தையாகச் செயல்படும் காவல்துறை, வருவாய்த் துறை போன்ற துறையினராக இருந்தாலும் அவர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.  இதேபோல, லாட்டரி விற்பனை தொடர்பாக கடந்த ஆண்டு 397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, லாட்டரி வியாபாரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  புத்தாண்டில் நல்ல பழக்கங்களை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். மது, புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது. குறுக்கு வழிகளில் முன்னேற நினைக்கக் கூடாது. உண்மையாக உழைத்தால், வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என தெரிவித்தார்.

;