tamilnadu

மூதாட்டிக்கு பரிசு வழங்கி பாராட்டு விழுப்புரம்.

மார்ச் 10- விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள திருமுண்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி பெண்ணரசி (62). இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரட்டார வளர்ச்சி கல்வியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளார். வங்கியில் பணம் எடுப்பதற்காக பெண்ணரசி தனது வீட்டிலிருந்து பேருந்து மூலமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தார்.  பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கிலிருந்து ரூ.32 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து மீண்டும் ஷேர்ஆட்டோ மூலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார். புதிய பேருந்து நிலையம் முன் ஷேர் ஆட்டோவிலிருந்து பெண்ணரசி கீழே இறங்கிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென பெண்ணரசி கையில் வைத்திருந்த பணப் பையை பறிக்க முயன்றனர்  இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணரசி, உடனடியாக சுதாரித்துக்கொண்டு பணப்பையை விடாமல் பிடித்துக்கொண்டார்.  இதையடுத்து அவர் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர் இதைப் பார்த்த மர்ம நபர்கள் இருவரும் பணப் பையை விட்டுவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். இதனால் பணப் பை தப்பியது. கொள்ளையர்களிடமிருந்து பணப் பையை பாதுகாக்க போராடிய மூதாட்டி பெண்ணரசியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும் விழுப்புரம் நகரத்தில் சமீப காலமாக வங்கிகளில் வந்து பணம் எடுத்துச் செல்லும் பொது மக்களிடம் வங்கிகளில் காத்திருந்து பணம் பறிக்கும் கும்பலின் வேலை தொடர்ந்து நடப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நகர மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.