tamilnadu

img

தி.மு.கழகம் துணை நிற்கும்

மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதறடிக்கும் நோக்கில் மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் அவை சார்ந்த உரிமைகளுக்கும் கடும் சவாலும் நெருக்கடியும் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக்குழு நடத்துகின்ற தாய்மொழி பாதுகாப்பு - இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தென்மாநிலங்களின் மாநாடு என்பது காலத்தின் தேவையாகும்.

ஆதிக்க இந்தியை திணிப்பதை அன்று முதல் இன்று வரை எதிர்த்து வரும் திராவிட இயக்கத்தின் அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக்கழகம் இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற உரிமைக்குரலை பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியாக இன்றும் ஒலித்து வருகிறது.

மொழிகளுக்கிடையே சமத்துவம், பண்பாடுகளின் தனித்துவம் இவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தும் முயற்சியில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து தாய்மொழிப் பாதுகாப்பையும் இந்தித் திணிப்பு எதிர்ப்பையும் முன்னெடுக்கிற சிபிஎம் தோழர்களின் முயற்சி முழுமையான வெற்றியினைப் பெறுவதற்கும், இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பன்முகத்தன்மை நிலைத்திடவும் தி.மு.கழகம் துணை நிற்கும் எனத் தெரிவித்து, மாநாடு வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.