மும்பை:
அயோத்தி விவகாரம் குறித்து, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அண்மையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.“ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த 370 -ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு எப்படிஅதிரடியாக நீக்கியதோ, அதேபோன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சட்டத்தை கொண்டு வந்து, அங்கு விரைந்து கோயில் கட்ட வேண்டும்.இதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கக் கூடாது” என்றுஅவர் கூறியிருந்தார்.
அதாவது, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான முயற்சியாகவும், அக்கட்சிக்கு ‘செக்’ வைக்கும் விதமாகவும் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருந்தார். 50 சதவிகித இடங்களை தங்களுக்கு ஒதுக்கா விட்டால் தனித்துப் போட்டியிடுவதற்கு சிவசேனா தயங்காது என்று அக்கட்சியின் மற்றொரு தலைவரான சஞ்சய் ராவத்தும் மிரட்டியிருந்தார்.இந்நிலையில், சிவசேனாவுடன் பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாக மோதியுள்ளார். நாசிக் நகரில் நடைப்பெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியுள்ளார். அதில், “உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீவிர விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அங்கு ராமர் கோயில் கட்டுவது குறித்து சிலர் அதிகபிரசங்கித்தனமாக, வாய்க்கு வந்தப்படியெல்லாம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்; இதுபோன்ற உளறல் பேர்வழிகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றனர்? இந்த விஷயத்தில் ஏன் தேவையில்லாமல் தலையிட்டு தடையை ஏற்படுத்துகின்றனர்?” என்று கடுமையாக சாடியுள்ளார்.