தஞ்சாவூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தமிழக முதல்வர் இன்று வழங்குகிறார்
தஞ்சாவூர், ஜுன் 15- தஞ்சாவூரில் ஜுன் 16 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தார். கல்லணையை டெல்டா பாசனத்துக்காக திறந்து வைத்த அவர், இரவு தஞ்சாவூருக்கு வந்தார். அவருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, நடைபயணமாக சென்று மக்களைச் சந்தித்து, பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார். பின்னர், ஓய்வு எடுப்பதற்காக சுற்றுலா மாளிகைக்குச் சென்றார். தொடர்ந்து, திங்கட்கிழமை காலை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடை பயிற்சி மேற்கொள்கிறார். பின்னர், மேல வஸ்தா சாவடியில் காலை 10 மணியளவில் நடைபெறும் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதையடுத்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இதில், ஏறத்தாழ 2.25 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 558 கோடி மதிப்பில் விலையில்லா பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழாவில் ஏறக்குறைய 12 பேர் கலந்து கொள்வர் என்றும், மேடையில் 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும், மற்றவர்களுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அலுவலர்கள் வழங்குவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நூறு சிற்றுந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். மீண்டும் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு கார் மூலமாக திருச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். தஞ்சாவூருக்கு தமிழக முதல்வர் வருகையையொட்டி, 9 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஏறத்தாழ 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் காவல் துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில் பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால், வாகன நிறுத்துமிடம், விழாவுக்கு வந்து செல்வோரின் வழித்தடம் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.