tamilnadu

img

பட்டு வண்ண ராசாவாம்! - எஸ்.வி.வேணுகோபாலன்

பட்டு வண்ண ராசாவாம்! - எஸ்.வி.வேணுகோபாலன்

1980களின் இறுதியாக இருக்கக் கூடும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் முக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்க வந்திருந்தனர்.  நிகழ்ச்சி முடிந்து அவர்களை வழியனுப்ப வெளியே வருகையில் தமுஎச மூத்த தலைவர் கே.முத்தையா ஒரு திரைக்கலைஞரோடு  உரிமையோடு நெருக்கமாகப் பேசிக் கொண்டே வெளியே வருகையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘இதோ பாரு....இருக்கற இடம் முக்கியமானது... நம்மாளுங்க அங்கே சாதிக்க நிறைய இருக்கு... எல்லோரையும் போல இல்ல ...எங்களுக்கு எல்லாம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கு’ என்று கே.எம் சொல்லிக் கொண்டே வர, புன்னகையோடு தலையாட்டியபடி வந்த அந்த திரைக்கலைஞரை அத்தனை நெருக்கத்தில் பார்த்தது அது தான் முதல் தடவை, ராஜேஷ் தான் அவர்! கே.பாலச்சந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தைப் பார்த்ததில் இருந்தே தமிழ்த் திரையில் மற்றுமொரு வித்தியாசமான திரைக்கலைஞர் வாய்த்திருக்கிறார் என்று ஆர்வம் மேலிட நேசித்த காலங்கள்.   முற்பகுதிக்கு நேரெதிரான பாத்திர மாற்றம் அந்தத் திரைப்படத்தில்!  காதல் கணவன், மக்கள் நலனுக்காகக் களத்தில் இறங்கி உத்தமன் போல் பேசி மக்கள் நம்பிக்கையைக் கையகப்படுத்தி அரசியல்வாதியாக உருப்பெற்றதும் அதே அராஜகங்கள் தொடர்வதற்குத் தானும் துணை போவதைக் கண்டு வெகுண்டு எழும் சரிதா, முக்கியமான பாத்திரம். உள்ளூர் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசானாக வரும் ராஜேஷ் மிக சாதாரணமாக நெறியற்ற அரசியல்வாதியாகப் பரிணமிக்கும் இடத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார்.  அற்புதமான வயலின் கலைஞரும், இசை அமைப்பாளருமான வி.எஸ்.நரசிம்மன் இசையில் படத்தில் இடம் பெற்று இருக்கும் ‘ஆவாரம் பூவு ஆறேழு நாளா...’ என்ற பாடலும், ‘ஓடுகிற தண்ணியிலே உரசி விட்டேன் சந்தனத்தை...’ என்ற பாடலும் (பாடல்கள்: கவிஞர் வைரமுத்து) மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை. மென் காதல் கடத்தி, ராஜேஷ். அவரது வசன உச்சரிப்பும், அலட்டிக் கொள்ளாத உடல் மொழியும் மட்டுமல்ல, பல்வேறு உணர்வுகளைக் கண்களால் பேசும் அற்புதக் கலைஞர் ராஜேஷ். அவரது கண்களின் பேச்சை, அந்த 7 நாட்கள் படத்தின் முக்கியமான காட்சிகளில் பார்க்கலாம்.  உறுதியான கருத்தை முரட்டுத் தனமாக முன்வைக்காமல் மிக இலகுவாகக் கடத்தும் மொழியைக் கற்றிருந்த கண்கள் அவை!  கே.பாலச்சந்தரின் ‘வானமே எல்லை’ திரைப்படம் வெவ்வேறு காரணங்களுக்காக வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை முடிவை நோக்கி ஒரே நேரத்தில் இணையும் இளைஞர்களின் கதை.  (அது தனது சிறுகதையின் அப்பட்டமான காப்பி என்று எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன் பின்னர் குறிப்பிட்டிருந்தார்!).  அதில் ஒரு வாலிபனின் தந்தை இந்த இளைஞர்களை தற்கொலை முடிவில் இருந்து மீட்டு எடுக்கும் வலுவான பாத்திரம், ராஜேஷ் அதை அசாத்தியமாக செய்திருப்பார். கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசவும் செய்யும் இடங்களில் உள்ளத்தைத் தொடுவார். மகாநதியில் மிகவும் வித்தியாசமான பாத்திரம் அவருக்கு.  சிறையில் பணியாற்றும் நேர்மையான காவல் துறை அதிகாரி. வேறென்ன வேண்டும், அதிகார வர்க்கத்தின் தவறான ஆட்களால் மிகுந்த அவமதிப்புக்கு உள்ளாகும் குமைச்சலை அவரது கண்கள் பேசும்.  குற்றவாளிக்குத் தன்னால் வீட்டில் அடைக்கலம் இனி கொடுக்க முடியாது என்று கமல் ஹாசனிடம் சொல்லும் காட்சியில் அந்த சங்கடத்தை அப்படிப் பேசும் அவரது கண்கள். தமிழ்த் திரையில் வசன உச்சரிப்புக்காக, தமிழ் இனிமைக்காக எஸ்.எஸ்.ராஜேந்திரனைக் கொண்டாடிய பழைய தலைமுறை ரசிகர்கள் உண்டு. அப்படியான ரசிகர்களைப் பெற்றிருந்தார் ராஜேஷ்.   செக்கச் சிவந்த சிந்தனைக்கு ஏற்ப சில படங்களும், பாத்திரங்களும் அவருக்கு வாய்த்தது.  பொங்கலோ பொங்கல் திரைப்படத்தில் நம்பிக்கையூட்டி இளந்தலைமுறையை முன்னோக்கி உந்தும் ஆசிரியர் பாத்திரம்.  கோமல் சுவாமிநாதனின் ‘அனல் காற்று’ படத்தில் தீவிர வாத சிந்தனையாளராக நடித்திருந்தார்.  ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் சிறிய பாத்திரத்தில் தொடங்கிய திரை வாழ்க்கையில், நாயகனாக அறிமுகமானது, பாக்கியராஜ் திரைக்கதை அமைத்த ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில்!  கிராமத்து வீரன் சுப்பையா பாத்திரம்.  யாரும் நெருங்காத காளையைத் துணிந்து சென்று அடக்கும் தொடக்க காட்சியிலேயே அந்தக் காளை அவரை முட்டித் தள்ளிவிடக் கீழே சரிந்து விழுகையில் ஏற்படும் விபத்து, குணப்படுத்த முடியாத முக்கிய குறைபாடாக அவரது இல்வாழ்க்கையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.  காதலித்துக் கைப்பிடிக்கும் வடிவுக்கரசி, இந்தப் பெருங்குறையைத் தனது திண்மையான மனதால் பொருட்படுத்தாது வாழவே துடிக்கிறார். ஒவ்வோர் இரவையும் பெருங்குற்ற உணர்ச்சியோடும், கையறு நிலையிலும் கடக்கும் பாத்திரப் படைப்பை ராஜேஷ் அநாயசமாகத் திரைக்கு வழங்கினார்.   இந்தக் குருவிக் கூட்டில் குண்டு வைக்க நுழையும் நண்பன் பாத்திரத்தில் பாக்யராஜ்!  தனது வசமற்ற ஒரு கணத்தில் கொஞ்சம் சலனப்பட்டு  ஆனாலும் சட்டென்று தன்னை விடுவித்துக் கொண்டுவிடும் வடிவுக்கரசி, கள்ளம் கபடமற்ற கணவனின் அன்பில் கரைந்து கதறும்போது, என்ன ஏதென்று அறியாத நிலையிலும் அவரை ஆற்றுப் படுத்தும் இடத்தில் ராஜேஷ் அற்புதமாக நடித்திருப்பார்.   ‘பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்’ எனும் அழகான பாடலை மலேசியா வாசுதேவன் அத்தனை மென்குரலில் பாடி இருப்பார்.... ‘காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம், கரையுது எம் மனசு உன்னாலே’ என்று விரியும் புலமைப்பித்தனின் அற்புதமான பாடலை எஸ்.ஜானகியும் பாடி இருப்பார். எண்பதுகளில் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் அது. உயிர் நண்பனது  அத்துமீறலைச்  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தத்தளிக்கும் மனைவியைத் தனது நட்பின் நிமித்தம் கைநீட்டி அடித்துவிடும் தருணத்திலும், உண்மையை அறியவரும் கடைசிக் காட்சியில் மனைவியைத் தடுத்தாட்கொண்டு, ‘நீ மனசால எந்தத் தப்பும் செய்யல புள்ள...’ என்று அரவணைக்கும் இடத்திலும் அசத்தலாக செய்திருப்பார் ராஜேஷ்.  நாயகனாகத் தன்னை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நடிப்பது என்ற இடத்தை மிக விரைந்து கடந்து குணசித்திர பாத்திரங்களை உற்சாகமாக ஏற்று நடிக்கத் தொடங்கியதால் அவரால்  தமிழ், மலையாளம் உள்ளிட்டு 150 படங்களுக்கு மேல் பங்களிக்க முடிந்திருக்கிறது.  ரசனைக்குரிய பாத்திரங்கள் அவை.  ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களுக்குப் பின்னணி குரலை வழங்கத் தொடங்கி விட்டிருந்தார் ராஜேஷ்.  தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.  2020 மார்ச் மாதத்தில், கவிஞர் - பாடலாசிரியர் காமகோடியன் அவர்களது  ‘மெல்லிசை மன்னர் எம் எஸ் வியும் நானும்’ எனும் புத்தக வெளியீட்டில் ராஜேஷ் கலந்து கொள்ள வந்திருந்தபோது, அவரது ஜோதிட ஆர்வத்தைக் குறித்து மற்ற உரையாளர்கள் ஓரிருவர் குறிப்பிட்டனர்.  வியப்புக்குரிய மாற்றம் அது. மார்க்சிய தாக்கத்தை உட்கொண்டு இந்திய பொதுவுடைமை இயக்கத்தில், இளைஞர் பெருமன்றத்தில் இயங்கியவர் அவர் என்று கேள்விப்பட்டதுண்டு.  இங்கிலாந்து செல்ல வாய்த்த தருணத்தில் லண்டன் ஹைகேட் சதுக்கத்தில் மாமேதை மார்க்ஸ் கல்லறைக்குச் சென்று தனது உள்ளார்ந்த அஞ்சலியைப் பதிவு செய்துவந்தவர் ராஜேஷ்.    ‘ஆவாரம் பூவு’ பாடல் காட்சியில், தனது அன்புக் காதலன் சைக்கிள் ஓட்டியபடி வருவதை மலைப்பாறை மீது ஒய்யாரமாக சாய்ந்தபடி ரசிக்கும் சரிதா, அருகே நீர்ப்பரப்பில் தலைகீழாகத் தெரியும் பிம்பத்தில் மனத்தைப் பறிகொடுக்கும் படி காட்சிப்படுத்தி இருப்பார் ஒளிப்பதிவாளர் லோகநாத்.  மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று அது.  கண்கள் முழுக்க நிறைந்திருக்கிறீர்கள், ராஜேஷ் !