அரசு கூட்டுறவு சங்கங்களில் பட்டுப் புடவைகள் தேக்கம் 25 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி நெசவாளர்களை பாதுகாத்திட வேண்டும் கைத்தறி நெசவாளர் சங்கம் வேண்டுகோள்
கும்பகோணம், ஜுன் 15- தமிழக அரசு மானியம் வழங்கி கைத்தறி பட்டு நெசவையும், நெசவாளர்களையும் பாதுகாத்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கொடுக்கப்படும் நெசவாளர்கள் கூலியை வங்கியில் செலுத்துவதை தவிர்த்து கையில் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டு கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநில செயலாளர் என். பி. நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியாக அகவிலைப் படி 10 சதவீதம் உயர்வை 2025 மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவிட்டு, அதை அமல்படுத்தியதற்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சம்மேளனம் நன்றி தெரிவித்து கொள்கிறது. தற்சமயம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களில் குறிப்பாக கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கங்களில் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் பட்டுப் புடவைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கோரப்பட்டு வெள்ளி ஜரிகை விலை கடுமையான உயர்வினாலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பினாலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பட்டுப்புடவையின் விலை உயர்ந்துள்ளதாலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை குறைத்து வழங்கி வருகிறார்கள். வருமானம் இழந்து நெசவாளர் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி ரூ.200 தான் குடும்ப வருமானம் இருந்து வருகிறது. ஆகவே திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ள பட்டுச் சேலையை விற்பனை செய்யவும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடவும் தமிழக அரசு, தேங்கியுள்ள பட்டுப் புடவைகளுக்கு நிபந்தனை இன்றி 25 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.