80 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமிக்கும் தனிநபர்!
மீட்டுத் தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், ஜுன் 2- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியைச் சேர்ந்த அய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், அய்யர்பாளையம் - செம்மண்குட்டை இடையிலான பாதையை 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த பாதையை செல்வம் என்ற நபர் அடியாட்களை பயன்படுத்தி தடுக்கிறார். மேலும் பால் கொண்டு செல்லும் வாகனத்தை கொளுத்தி விடுவதாக மிரட்டி வருகிறார். இது சம்பந்தமாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்திலும் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனுவாக அளித்து இருந்தனர். இச்சூழலில் பாதையை இயந்திரம் மூலம் கரை எழுப்பியுள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து, பொதுமக்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையினை மீட்டு தர வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பந்தட்டை வட்டச் செயலாளர் கே.எம். சக்திவேல் தலைமை வகித்தார். கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்திரன் கோரிக்கை குறித்து உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் பெரியசாமி நன்றி உரையாற்றினார்.