tamilnadu

img

கம்யூனிஸ்ட் அறிக்கையை முதலில் வெளியிட்டவர் - என்.ராமகிருஷ்ணன்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டும், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.எம்.ராமசந்திரன் எழுதிய ’ஒவ்வொரு தொழிலாளியும் பொதுவுடமை கட்சியில் சேர வேண்டியது ஏன்? என்ற கட்டுரையையும் பெரியார், குடியரசு’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார். 

பெரியார் ரஷ்யாவைக் குறித்து தொடர்ந்து பல கட்டுரைகளை ‘குடியரசு இதழில்’ வெளியிட்டார். ‘ரஷ்யாவைப் பற்றிய உண்மை விபரம் என்ன’, ரஷ்யாவில் சுகாதார வைத்திய முறைகள்’, ‘ரஷ்யாவில் பெண்கள் நிலை - அழகைப்பற்றிய கவலை அணு அளவுமில்லை’, ‘மாதர்களுக்கு சம உரிமை உள்ள நாடு ரஷ்யா ஒன்றுதான்’ போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் வெளி வர ஆரம்பித்தன. அத்துடன் குடியரசு ஏட்டில் ‘புரட்சி ஓங்குக! பொதுவுடமை தோணுக! ‘கடவுள் உணர்ச்சியை ஒழிப்பது பணக்காரத் தன்மையை ஒழிப்பதாகும்’ போன்ற பெட்டிச் செய்திகளும் வெளிவந்தன.

மே தினத்தை சமதர்மப் பெருநாளாக சுய மரியாதை இயக்கத்தினர் கொண்டாட வேண்டுமென்று 1933ஆம் ஆண்டில் பெரியார் அறிவித்தார். அவரது அறிக்கை பின்வருமாறு:  ‘சமதர்ம சபைகள் யாவும், சமதர்மக்  கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும் அந்தந்தக் கிராமங்களிலும் பட்டிணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்ம இன்னதென்றும் தொழிலாளருக்கும், விவசாயிகளுக்கும் விளக்கமுறச் செய்யலாம்’ என்று ஈ.வே.ரா. தன் பெயரில் அறிவிப்பை வெளியிட்டார். பெரியார் மற்றொரு காரியத்தையும் செய்தார். பொதுவாக அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல பொது மாநாடுகளை நடத்துவதுண்டு. பெரியார் அதே வழியில் சமதர்ம லட்சியத்தை பிரச்சாரம் செய்யும் பொருட்டு பல பொது மாநாடுகளை நடத்தினார். 

1. தொழிலாளர் மாநாடு
2. விவசாயிகள் மாநாடு
3. ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு
4. லேவாதேவி ஒழிப்பு மாநாடு
5. நாத்திகர் மாநாடு
6. இளைஞர் மாநாடு
7. ஜமீன்தார் அல்லாதார் மாநாடு

 

போன்ற மாநாடுகளை பல மாவட்டங்களில் நடத்தினார். இச்சமயத்தில் தீவிர காங்கிரஸ் ஊழியரும், நாத்திகரும், முற்போக்கு சிந்தனையாளரும், சோசலிஸ்ட்டுமான ஜீவா என்ற ப.ஜீவானந்தம் என்ற சிறந்த தளபதி பெரியாருக்குக் கிடைத்தார். சிறாவயல் என்ற கிராமத்தில் காந்தி ஆசிரமம் என்ற ஒன்றை நடத்தி வந்த ஜீவா 1930ஆம் ஆண்டில் நடைபெற்ற மறியல் போரில் கலந்து கொண்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர். அச்சமயத்தில் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேந்திர மோகன் கோஷ் திவாரி, பிரதுல் சந்திர கங்குலி போன்ற பகத்சிங்கின் சக தோழர்கள் நட்பு அவருக்கு கிடைத்தது. அவர்கள் பயங்கரவாதத்திலிருந்து அப்பொழுது மார்க்சியத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்ட நூல்களைப் படித்து கம்யூனிஸ்ட் ஆனார் ஜீவா. விடுதலையாகி வெளிவந்ததும் சோசலிசப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். சிறந்த பேச்சாளரான ஜீவா குறித்து அறிந்த பெரியார் அவரோடு உரையாடி அவரை சுய மரியாதை இயக்கத்திற்கு ஈர்த்தார். பெரியாரும், ஜீவாவும் ஏராளமான மாநாடுகளில் கலந்து கொண்டு அற்புதமான உரைகள் ஆற்றி சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தனர். 

பெரியார் மார்க்சியத்திற்கு மற்றொரு சிறப்பான பங்கை இக்கால கட்டத்தில் செய்தார். மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தன் சக தோழர் எஸ்.ராமநாதனுடன் இணைந்து தமிழில் வெளியிட்டார். சமதர்ம அறிக்கை என்ற பெயரில் அந்த அறிக்கை தமிழில் வெளிவந்தது. இதன்மூலம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் முதன் முதலாக வெளியிட்ட பெருமை பெரியாரையே சாரும். அத்துடன் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டும், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.எம்.ராமசந்திரன் எழுதிய ’ஒவ்வொரு தொழிலாளியும் பொதுவுடமை கட்சியில் சேர வேண்டியது ஏன்? என்ற கட்டுரையையும் பெரியார், குடியரசு’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார்.  பெரியாரும் எஸ்.ராமநாதனும் சேர்ந்து லெனின் எழுதிய ‘மதத்தைக் குறித்து’ என்ற தலைப்பிலான கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டனர். பிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசக் கோட்பாடுகள் என்ற நூலையும் தமிழில் வெளியிட்டார். இச்சமயத்தில் உடல்நலம் குன்றியிருந்த மார்க்சிய அறிஞர் ம.சிங்காரவேலர் ஏராளமான கட்டுரைகளை எழுதி குடியரசு ஏட்டிற்கு உதவினார். விஞ்ஞான சோசலிசத்தை விளக்கியும், மேல்நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை குறித்தும் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தியும், சாதி, மதம் போன்றவை எவ்வாறு தோன்றின? அவற்றின் அடிப்படை எவை? என்பன போன்றவை குறித்தும் இக்கட்டுரைகள் அமைந்திருந்தன. 

பெரியார், ஜீவா ஆகியோரின் சோசலிசப் பிரச்சாரமும், சமூக சீர்திருத்தப் பிரச்சாரங்களும் சிங்காரவேலரின் அறிவுறுத்தும் கட்டுரைகளும், புதிய ரஷ்யாவைக் குறித்து பெரியார் கூறிய விபரங்கள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பரவியது ஆகிய அனைத்தும் சேர்ந்து சுயமரியாதை இயக்கச் செயல்வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. அந்த இயக்கத்தை வெறும் சமூக சீர்திருத்த இயக்கமாக வைத்துக் கொள்வதா அல்லது மார்க்சிய அடிப்படைக் குறிக்கோள் கொண்ட ஒரு இயக்கமாக மாற்றலாமா? என்ற கருத்து பெரியாருக்கும், அதேபோன்று அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டது. ‘சுய மரியாதை இயக்கத்தை அரசியல் கொள்கையுடைய இயக்கமாக மாற்ற பெரியார் எண்ணினார். உடனே அவர் சிங்காரவேலரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்து சுய மரியாதை இயக்கத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தை எழுதித் தரும் படி கேட்டுக் கொண்டார். அவரும் அதன்படி ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்துக் கொடுத்தார். (சாமி/ சிதம்பரனார்: ‘தமிழர் தலைவர் பெரியார்’ என்ற நூலில்) அதுதான் மகத்தான ஈரோட்டுப் பாதை திட்டமாகும்.