புதுதில்லி, ஜூன் 16- இந்திய - சீன எல்லையில் லடாக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்துள்ள மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் பலியாகியுள்ளனர். சீனத் தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்த விபரம் வெளியாகவில்லை. பலியான இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி ஆவார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: லடாக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இங்கு எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் திங்களன்று இரவு இந்திய- சீன துருப்புகளுக்கு இடையே ஒரு கடுமையான மோதல் நடந்துள்ளது. அந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், வீரர்கள் இருவருமாக மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய - சீன எல்லையில் கடந்த 5 வாரக் காலமாக பிரச்சனை நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ள சம்பவம் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 1975 ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தில் இருதரப்பு எல்லைப் பகுதியில் துலுங் லா பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு நடந்துள்ள உயிர்ப்பலி நேர்ந்துள்ள முதல் சம்பவம் இது என்றார். மோதல் நடந்த போது இருதரப்புக்கிடையே துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர். இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வான் பள்ளத்தாக்கில் திங்களன்று இரவு இருதரப்புக்கிடையே ஒரு கடுமையான மோதல் நடந்து உயிர் பலி ஏற்பட்டுள்ளது; இப்பகுதியில் இருதரப்புக்கிடையே ராணுவ துருப்புகளை படிப்படியாக குறைத்துக் கொள்ளும் நடவடிக்கை நடந்து கொண்டிருந்த சமயத்தில் இது நடந்துள்ளது”.
இந்த மோதலில் பலியான இந்திய ராணுவ அதிகாரி, அப்பகுதியின் ராணுவ பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் ஆவார். மோதல் நடந்த போது சீனத் தரப்பிலிருந்து தொடர்ந்து கற்கள் எரியப்பட்ட நிலையில் அதில் இந்த அதிகாரியும் இரண்டு வீரர்களும் படுகாயமடைந்து உயிரிழந்தனர் எனத் தெரிகிறது. எனினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த மோதல் தொடர்பான தகவல்கள் வந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கிழக்கு லடாக்கில் எழுந்துள்ள நிலைமை தொடர்பாக முப்படைத் தலைமை தளபதி பிபின் ரவத் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் ஆய்வுசெய்தார். இச்சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உடன் இருந்தார். கடந்த 5 வார காலமாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் இதர சில பகுதிகளில் இந்திய மற்றும் சீனத்துருப்புகள் ஏராளமாக குவிக்கப்பட்டு, ஒருவருக்கொருவர் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியிலிருந்து, இருதரப்புக்கு இடையே கடந்த ஜுன் 6 அன்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், படிப்படியாக துருப்புக்கள் குறைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று இந்திய ராணுவத் தளபதி அறிவித்து, அது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மேற்கண்ட மோதல் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய துருப்புக்கள் எல்லையைக் கடந்து சீனப் பகுதிக்குள் நுழைந்த போதுதான், சீனத் துருப்புக்கள் தாக்குதல் நடத்தின என்று கூறியுள்ளது. கிழக்கு லடாக்கின் பன்கோங் ட்சோ, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவ்லத் பெக் ஆகிய பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே இத்தகைய மோதல் போக்கு நிலவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பன்கோங் ட்சோ உள்பட சில பகுதிகளில் இந்திய எல்லையைத் தாண்டி சீன ராணுவத் துருப்புக்கள் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் நுழைந்ததைத் தொடர்ந்துதான் அங்கு முதலில் பிரச்சனை எழுந்தது.
இதை இந்திய ராணுவம் கடுமையாக ஆட்சேபித்தது. சீனத் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அப்பகுதியில் அமைதியும், பதற்றமின்மையும் நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்குப் பிறகு இருதரப்புக்குமிடையே இப்பிரச்சனையை தீர்க்க கடந்த சில நாட்களாக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதன் முதல் கட்டமாக ஜுன் 6 அன்று முக்கிய பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய ராணுவத்தின் தரப்பில் லே பகுதியை மையமாகக் கொண்ட 14 கார்ப்ஸ் படைப்பிரிவின் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீனத்தரப்பில் திபெத் ராணுவ மாவட்டத்தின் மேஜர் ஜெனரல் லியு லின்னும் சுமார் 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை இரு தரப்பு மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில், சம்பந்தப்பட்ட எல்லைப்பகுதியில் முந்தைய நிலைமை மீட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சீன ராணுவத் துருப்புக்கள் உடனடியாக வாபஸ்பெறப்பட வேண்டும் என்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்தப் பின்னணியில் கடந்த சனிக்கிழமை, இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே, இருதரப்பிலும் படிப்படியாக துருப்புக்கள் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். “கல்வான் ஆற்றின் வடக்குப் பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைப்பை துவக்கியுள்ளோம்; கணிசமான அளவு படைக்குறைப்பு நடந்துள்ளது. இருதரப்புக்குமிடையே பலனளிக்கக்கூடிய விதத்தில் இந்த நிகழ்வுகளும் பேச்சுவார்த்தையும் அமைந்துள்ளது” என்றும் ஜெனரல் நரவானே கூறியிருந்தார். முன்னதாக கிழக்கு லடாக்கில் இரு தரப்புக்குமிடையே எழுந்த மோதல் போக்கின் விளைவாக, எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டிருந்தனர்.
அதுமட்டுமின்றி, வடக்கு சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய எல்லைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்தினர் பலப்படுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே, பன்கோங் ட்சோ ஏரியைச் சுற்றி அமைந்துள்ள பிங்கர் எனும் பகுதியில் ஒரு முக்கியமான சாலையை உருவாக்கும் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டதாகவும், அதற்கு சீனத்தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதைத்தொடர்ந்து இருதரப்புக்குமிடையே மோதல் வெடித்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேற்கண்ட பிங்கர் பகுதிக்கான சாலை என்பது, கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள தர்புக் - சையோக் - தவ்லத் பெக் சாலையை இணைப்பதற்கான சாலை ஆகும். இந்த சாலை, பன்கோங் ட்சோ பகுதியில் இந்தியத் தரப்பு முழுமையாக ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முக்கிய சாலையாக கருதப்படுகிறது.
கிழக்கு லடாக் பகுதியில் எல்லையையொட்டி ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சாலை அமைத்தல் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும், சீனா ஆட்சேபிக்கிறது என்பதற்காக நிறுத்துவதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்தது. மேற்கண்ட பிரச்சனை எழுந்த பின்னணியில்தான் மே 5, 6 தேதிகளில் இரு தரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மே 9 அன்று அதேபோன்ற மோதல் வடக்கு சிக்கிமிலும் ஏற்பட்டது. இத்தகைய பின்னணியில்தான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்துள்ளது. இந்த மோதலில் பலியான வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி(40)யும் பலியாகியுள்ளார். அவரது உடல் சொந்த கிராமத்திற்கு உரிய அரசு மரியாதையுடன் கொண்டுவரப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட எல்லைப் பகுதியில் மோதல் போக்கை தீர்ப்பதற்கும் தொடர்ந்து பிரச்சனைகள் எழாமல் சரிசெய்வதற்கும் உரிய பேச்சுவார்த்தைகள் உடனடியாக துவங்கியிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட எல்லையிலேயே உயர் ராணுவ அதிகாரிகள் இருதரப்பிலிருந்தும் விரைந்து, பேச்சுவார்த்தை துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் அளித்த பேட்டியில் இருதரப்பும் இப்பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது என ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும். நிலைமையின் தீவிரத்தை தணிப்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இருதரப்பும் ஒப்புக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார். (பிடிஐ)