மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், விரைவில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிதி அறிக்கையில் விவசாயத்துறையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிப்பதற்காக, விவசாயிகளிடமோ அல்லது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடமோ எவ்வித ஆலோசனையும் செய்திட முன்வராததிலிருந்தே, இது ஒரு விவசாயிகள் விரோத அரசாங்கமே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் தலைவர் அசோக் தாவ்லேயும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாவும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி-2 அரசாங்கம், ஒரு விவசாய விரோத அரசாங்கமே என்பது, 2019 ஜூன் 11 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நிதிநிலை அறிக்கையில் விவசாயம் சம்பந்தமாக என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற கூட்டத்திற்கு, நாட்டு மக்களுக்கு உணவைப் படைப்பதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப் படாததிலிருந்து தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்திற்கு அதிகாரவர்க்கப் பிரதிநிதிகளுக்கு அப்பாற்பட்டு தோட்ட முதலாளிகள் மற்றும் பணக்கார விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படும் இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டார்கள்.
மத்திய அரசின் இத்தகைய விவசாய விரோத நடவடிக்கைக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அகில இந்திய அளவில் செயல்படும் அனைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்று கோருகிறது. அவ்வாறு அழைத்து அவர்களின் ஆலோசனைக் கேட்டால் மட்டுமே நாட்டில் தற்போது நிலவும் விவசாய நெருக்கடிக்கும் விவசாயிகள் மிகவும் விரிவான அளவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கும் தீர்வு கண்டிட, உரிய நடவடிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
மத்திய அரசு, பட்ஜெட் ஒதுக்கீட்டில் விவசாயத்திற்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். முற்போக்கான மற்றும் ஒருங்கிணைந்த நிலச்சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். வன உரிமைகள் சட்டத்தைக் கறாராக அமல்படுத்திட வேண்டும். வன நிலங்களை, பழங்குடியினரிடமிருந்து கார்ப்பரேட் கம்பெனிகள் பறிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். குத்தகை விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும்.
விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்குத் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் இணைத்திட வேண்டும். விவசாயிகளின் கடன் வலைகளிலிருந்து விவசாயிகளை மீட்டிட உரிய நடவடிக்கைகளை பட்ஜெட் மூலம் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளைத் தற்கொலைப் பாதையில் தள்ளும் மக்கள் விரோத, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மறுதலித்திட வேண்டும். தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளித்திட வேண்டும்.
மத்திய அரசு, சிறுகுறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும், வாரக் குத்தகை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர் களுக்கும் விவசாயக் கடன்கள் 4 சதவித வட்டி வீதத்தில் அளித்திட வேண்டும்.
விவசாயிகள் மிகப்பெரிய அளவில் சுரண்டப்படுவது என்பது அவர்களுக்கு விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க மறுப்பது என்பதாகும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், விவசாயிகளுக்கு விவசாய விளைபொருள்களின் உற்பத்திச் செலவினத்துடன் மேலும் 50 சதவீதம் உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திட வேண்டும். விவசாய விளைபொருள்களை அரசாங்கமே விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சேவகம் செய்யும் விதத்தில், விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில், இ-சந்தை ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இதற்குப் பதிலாக, அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பயன் அடையும் விதத்தில் விவசாயப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் மொத்த மற்றும் சில்லரை சந்தை வலைப்பின்னல்களையும் சமூகக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அளித்திட முன்வர வேண்டும்.
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும். குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 500 ரூபாய் ஊதியம் நிர்ணயித்திட வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் விதத்தில், மத்தியச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும், ஏழை விவசாயிகளுக்கும் இலவசமாக வீட்டு மனைகள் வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கு குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் அளித்திட வேண்டும்.
அனைத்துப் பயிர்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்கிட வேண்டும். இயற்கைப் பேரிடர், காட்டு விலங்குகளின் தாக்குதல்கள், பயிர் நோய்கள் முதலானவற்றால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு முழு இழப்பீடு அளித்திட வேண்டும். இவ்வாறு இழப்பீடு வழங்குவதற்கு வருவாய் கிராமத்தை அளவீடாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைவருக்குமான பொது விநியோக முறையை வலுப்படுத்தி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
பாசன நிலம் அனைத்திற்கும் போதிய நீர்ப்பாசன வசதி உத்தரவாதப்படுத்தும் விதத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்திட வேண்டும்.
நாடு முழுவதும், விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் 5000 ரூபாய் ஓய்வூதியமாக அளிக்கப்படுவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
அனைவருக்கும் பாதுகாப்பான குடிதண்ணீர், வீட்டு மனைகள், வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரம் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
கால்நடை வர்த்தகம் மீது எவ்விதமான தடையைக் கொண்டுவருவதையும் நிறுத்த வேண்டும். வீதியில் திரியும் விலங்குகளைக் கட்டுப்படுத்திட வேண்டும். இவற்றால் ஏற்படும் பயிரிழப்புகளுக்கும் உரிய இழப்பீட்டை விவசாயி களுக்கு அளித்திட வேண்டும்.
கிழட்டுக் கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அக்கால்நடைகளுக்கான உரிய சந்தை விலையை அளித்து, அவற்றை அரசாங்கமே தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூடப்பட்டுள்ள சர்க்கரை, சணல், ஜவுளி ஆலைகளை மீளவும் உடனடியாகத் திறந்திட வேண்டும். பால் பண்ணை விவசாயிகளிடம் பெற்றிடம் பாலுக்கு முறையான விலை நிர்ணயம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அசோக் தாவ்லே, ஹன்னன் முல்லா தங்கள் அறிக்கையில் கோரியுள்ளார்கள்.
(ந.நி.)