ஜனநாயகப் படுகொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புதுதில்லி, ஆக.5 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தகர்த்திருப்பதன் மூலமாகவும் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலமாகவும் ஜனநாயகத்தின் மீது மிகப்பெரும் தாக்குதலை மோடி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக உடைக்கப்பட்டது தொடர்பாகவும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானிலிருந்து எல்லைமீறி நபர்கள் நுழைந்த சமயத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் சிறப்பு அந்தஸ்து மற்றும் சுயாட்சி அளிக்கப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்திட இணங்கினார்கள். இந்த உறுதிமொழியை திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு மோடி அரசாங்கம் துரோகம் இழைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியாளர்கள், மக்களிடம் காணப்படும் வேற்றுமைப் பண்புகளையோ, நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தையோ சகித்துக்கொள்பவர்கள் அல்ல. அவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதிக் கொண்டிருந்தார்கள். அரசமைப்புச் சட்டம் இதுதொடர்பாகக் கூறுவதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று மத்திய ஆட்சியின் கீழ் ஆளப்படும் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி இருக்கிறார்கள். இது, நாட்டின் ஒற்றுமை மற்றும் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்கிற கருத்தாக்கம் ஆகியவற்றின் மீதான மிகப்பெரும் தாக்குதல்களாகும். இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான துருப்புகளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இறக்கி விட்டிருப்பதையும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து வைத்திருப்பதையும், மக்களின் நடமாட்டத்திற்கு தடை விதித்ததையும் பார்த்தோம். இதுவே, மக்களின் சம்மதம் இன்றி தன்னுடைய கட்டளைகளை மோடி அரசாங்கம் மக்கள் மீது திணித்திருப்பதைக் காட்டுகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்டபடி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அங்கு இயங்கி வரும் அனைத்து அமைப்புகளுடனும் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக மட்டுமே ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கும், நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இடையே நல்லதொரு பிணைப்பினை வலுப்படுத்திட முடியும். இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, இப்போது செய்திருப்பதைப்போல ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பது காஷ்மீர் மக்களை நாட்டின் இதரபகுதி மக்களிடமிருந்து மேலும் ஆழமான முறையில் தனிமைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். இது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானதும், அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதுமாகும். இந்தப் பிரச்சனை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமான ஒரு பிரச்சனை அல்ல, மாறாக நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதல்களாகவும் அமைந்திருக்கின்றன. இத்தகைய எதேச்சதிகாரத் தாக்குதல்கள், மக்களுடைய ஜனநாயக மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மீதும் மேற்கொள்ளப்படும் என்று இதன் மூலமாக நாட்டு மக்கள் முன்கூட்டியே மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மக்கள் பக்கம் நின்று அவர்களுக்கு ஆதரவாகவும், அரசமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின்மீதும் ஏவப்பட்டுள்ள தாக்குதலைத் தடுத்து நிறுத்திடவும், நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டியது அவசியம்.
நாளை எதிர்ப்புத் தினம்
இது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 7 அன்று இடது சாரிக் கட்சிகளால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள அகில இந்திய எதிர்ப்பு தினத்தில் பங்கேற்றிட ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. (ந.நி.)