tamilnadu

img

‘தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி எந்த நாட்டிலிருந்தும் ரயில்களை வாங்கலாம்’

மத்திய அரசு தாராள அனுமதி

புதுதில்லி, அக். 6 - 50 ரயில் வழித்தடங்களில் ரயில்களை இயக்க  முன்வரும் தனியார் நிறுவனங்கள், வெளிநாடு களில் இருந்தும் தங்களுக்கு விருப்பமான ரயில் களை வாங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் 2021ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு  தில்லி - மும்பை, தில்லி - ஹவுரா உள்ளிட்ட 50 வழித் தடங்களில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனு மதிப்பது என ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்தும் ரயில்களை வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தெரிவித்துள்ள ரயில்வே துறையின் உயர் அதிகாரி ஒருவர், தனி யார் ரயில் நிறுவனங்கள், ரயில்வே துறையின் ரயில்கள் மற்றும் எஞ்ஜின்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் விருப்பப்படி எந்த நாட்டி லிருந்தும் ரயில்களை வாங்கலாம் எனவும், ஆனால் பாதுகாப்பு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னரே அந்த ரயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக் கப்படும் இருப்புப் பாதைகள் அனைத்தும் அரை அதிவேகப் பாதைகளாக மேம்படுத்தப்பட்ட பின்னரே தனியார் நிறுவனங்கள் அதன்மீது ரயில்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்புப்பாதைகளை மேம்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் ‘டெல்கோ’ ரயில்கள் இந்திய இருப்புப் பாதைகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதேசமயம் சீனாவில் தயாரிக்கப்படும் அதிவேக ரயில்கள் இந்திய இருப்பு பாதைகளில் ஆபத்தானதாக இருக்கும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். 
இந்தியாவின் மொத்த ரயில் பயணிகளில் 25 சதவீதம் பேர், டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் மட்டும் பயணிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதனால் இந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வழித்தடங்களில் உள்ள இருப்புப்பாதைகள் தனியார் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின்னரே மேம்படுத்தப்படும் எனவும், அதுவரை பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழித்தடங்கள் மிகவும் சிக்கலானவை என்பதாலும், அவற்றை மேம்படுத்த பல வருடங்கள் ஆகலாம் என்பதாலும் ரயில்வே துறை நீண்ட கால திட்டங்களை துவக்கியிருக்கிறது எனத் தெரிவித்த அதிகாரி, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இப்போதே தொடங்கி விட்டதாகவும் கூறினார். மேலும் தனியார் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

;