குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுராவில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் மாநில பாஜக அரசு இணைய சேவையை முடக்கி உள்ளது.
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. இதில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த தமிழர்கள் மசோதா அடிப்படையில் இந்திய குடியுரிமை கோர இயலாது என தெரிவித்துள்ளது. இன்று மாநிலங்களவையில், இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குடியுரிமை வழங்குகிறபோது, தங்கள் நலன் பாதிக்கப்படும் என அந்த மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த மசோதா வரம்பில் இருந்து அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கிற வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் விலக்கு தரப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்று 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திரிபுராவில் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாநில பாஜக அரசு இணையதள சேவை, மற்றும் செல்போன் குறுஞ்செய்தி சேவை ஆகியவற்றை 48 மணி நேரத்திற்கு முடக்கி வைத்துள்ளது.