tamilnadu

img

நாட்டின் 8 முக்கிய தொழிற்துறைகள் கடும் வீழ்ச்சி!

புதுதில்லி:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய- 8 தொழிற்துறைகளே, நாட்டின் முக்கியமான கட்டமைப்புத் துறைகளாக கருதப்படுகின்றன.ஏனெனில் இந்த துறைகளானது, நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 41 சதவிகித பங்களிப்பை ஆற்றுகின்றன.

ஆனால், இந்த 8 துறைகள், கடந்த50 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியைச்சந்தித்து வருவது, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கடந்த ஓராண்டில், கட்டமைப் புத்துறைகள் எட்டும் மிகக் கடுமையாக அடி வாங்கியுள்ளன.2018 ஜூனில், மேற்கண்ட 8 தொழிற் துறைகளும் ஒட்டுமொத்தமாக 7.8 சதவிகித வளர்ச்சியைப் பெற்றிருந்தன. ஆனால், 2019 ஜூனில் இவற்றின் வளர்ச்சி விகிதம் 0.2 சதவிகிதம் மட்டுமே என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளைப் பொறுத்தவரை, வளர்ச்சியில்தான் சரிவு என்றால், கச்சா எண் ணெய், இயற்கை வாயு, சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட் துறைகளோ பெரும் நஷ்டம் அடைந்துள்ளன. உரம்,இரும்பு ஆகிய 2 துறைகள் மட்டும், கடந்தாண்டைக் காட்டிலும் சுமாரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.2018 ஜூனில் 11.5 சதவிகிதமாக இருந்த நிலக்கரித் துறை வளர்ச்சி, 2019ஜூனில் 3.2 சதவிகிதமாகவும், மின்சாரத்துறையின் வளர்ச்சி 8.4 சதவிகிதத்திலிருந்து 7.3 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 3.4 சதவிகிதம் அளவிற்கு இழப்பைச் சந்தித்து இருந்தது. இந்த நஷ்டம், 2019 ஜூனில் 6.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இயற்கைவாயுதுறை 2018-இல் 2.7 சதவிகிதம் அளவிற்குநஷ்டம் அடைந்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டிலும் 2.1 சதவிகிதம் இழப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இருப்பதிலேயே, மோசமான முறையில் அடிவாங்கியிருக்கும் துறைகள் என்றால், அவை சுத்திகரிப்பு பொருட்கள்துறையும், சிமெண்ட் துறையும்தான். 2018-இல் 12.1 சதவிகித அளவிற்குவளர்ச்சி கண்டிருந்த சுத்திகரிப்பு பொருட்கள் துறை, 2019-இல் அப்படியேதலைகீழாக மாறி, 9.3 சதவிகிதம் நஷ் டத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல சிமெண்ட் துறை கடந்த ஆண்டில், 14.2 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டிருந்தது. தற்போதோ 1.5 சதவிகித நஷ்டத்தை அடைந்துள்ளது. இந்ததுறைகளின் வீழ்ச்சி, நாட்டின்ஏனைய பொருளாதார அம்சங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக சிமெண்ட் உற்பத்தி என்பது, நாட்டின் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சியை பெரிதும் எதிரொலிக்கிறது. இந்த உற்பத்தி,நாட்டின் உள்கட்டமைப்பான சாலைவசதியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.தற்போது சிமெண்ட் துறை சந்தித்துள்ள வீழ்ச்சி, கட்டுமானத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, சுத்திகரிப்புப் பொருட்கள் வீழ்ச்சி காரணமாக, பெட்ரோல் - டீசல்இறக்குமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்,அரசும் தனது சுத்திகரிப்பு நிறுவனங்களை தற்காலிகமாக மூட உள்ளதால், பெட்ரோல் - டீசல் இறக்குமதி அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகி, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

;