tamilnadu

img

ஃபானி புயல்: நிவாரணம் துரிதமாக மேற்கொள்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய மாநில அரசுகள் துரிதமாகச் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஃபானி புயல், ஒடிசாவில் மிகவும் கடுமையானமுறையில் முழு நாசத்தை ஏற்படுத்தியுள்ள பல புயல்களில் ஒன்றாகும். பல்லாயிரக்கணக்கான கூரை வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மின் விநியோகம், தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் சேதமடைந் திருக்கின்றன.


மிகவும் மோசமான இந்த நிலைமையை மாநில அரசாங்கம் சமாளிப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக உதவிகளைச் செய்திட முன்வர வேண்டும். நிவாரண வேலைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ மற்றும் சுகாதார உதவிகள் உடனடியாகச் சென்றடைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்நிர்மாணப் பணிகளை அவசரகதியில் மேற்கொண்டிட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

(ந.நி)