tamilnadu

img

மாட்டு வண்டிப் போராட்டம்

100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சில சாட்சிகள் - 4

1930 ஏப்ரல் 4. கொல்கத்தா ஹாரிசன் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக மாட்டு வண்டிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொழிலாளர்கள். போக்குவரத்து முற்றாக முடங்கியது. சும்மா இருக்குமா பிரிட்டிஷ் அரசு.காவல்துறையை ஏவியது. தடியடி நடத்தியது. உழைத்துக் காய்ப்பேறிய கரங்களும் உடலும் கொண்ட உழைப்பாளிகளா அசைவர்? அரசு தன் கோர முகத்தைக் காட்டியது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஏழு பேர் உயிர்ப் பலியாகினர். இந்தப் போராட்டம் எதற்காக நடத்தப்பட்டது என்றால் ஒவ்வொரு மாட்டு வண்டி ஓட்டியும் தன் கையில் எப்போதும் பித்தளை உரிமை வில்லையை கட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என பிரிட்டிஷ் அரசு ஆணையிட்டது.

எங்கிருந்தோ வந்த வெள்ளக்காரன் எங்கள் சுயமரியாதையைக் கேவலப்படுத்துவதா? நாங்கள் என்ன சிறைக் கைதிகளா? இப்படித்தான் கொதித்தெழுந்தனர். அன்று ஆட்டோ, டெம்போ எதுவும் கிடையாது. மாட்டுவண்டியே பெரும் போக்குவரத்து வாகனமாகும். பங்கிம் முகர்ஜி, அப்துல் மைமின், சுவாமி பிஸ்வாத் போன்றோர் இப்போராட்டத்துக்கு தலைமை ஏற்றனர். வீதியில் நின்று வழிகாட்டினர். 1926ல் இந்து முஸ்லிம் மதக்கலவரம் நடந்த கொல்கத்தாவில் மாட்டு வண்டி ஓட்டிகளில் பெரும்பகுதியினர் முஸ்லிம். இங்கு முஸ்லிம் – இந்து என பேதமின்றி அனைவரும் திரண்டது ஆட்சியாளருக்கு அதிக ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்ட நியாயத்தை எடுத்துச் சொல்லியும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியும் துண்டு அறிக்கை விநியோகிக்கப்பட்டது. ..இதை எல்லாம் மனதில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஏழு பேரைக் கொன்றது மட்டுமல்ல; முன்னணித் தலைவர்கள் மீது சதி வழக்குகள் புனைந்து சிறையில் அடைத்தது. அப்போது போலீஸ் உளவுப் பிரிவில் பணியாற்றிய ஹொர்ஸ் வில்லியம் ஒரு ரகசியக் குறிப்பை அரசுக்கு அனுப்பி இருந்தார்: “கல்கத்தாவில் மாட்டு வண்டிகள் நடத்திய ஊர்வலமும் கலவரமும் கம்யூனிஸ்ட்டுகள் தூண்டுதலால் நடை பெற்றவையாகும். இந்தியாவில் போலீசாருடன் நடத்திய முதல் மோதல் என்று பெருமையாக இதனை அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.”