tamilnadu

img

புதுச்சேரி: இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கி உள்ளது. 
கொரோனா தொற்றைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் காலவரையின்றி பள்ளிகள் மூடப்பட்டது.  இந்நிலையில் கொரோன தொற்று படிப்படியாக குறையத்துவங்கியதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் செயல்பட தொடங்கின.  அதன் பின்னர் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளும் வகையில் ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி 2 பிரிவுகளாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகளில் முழுநேரமும் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று முதல் முழு நேரமும் செயல்படும். வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி வாரத்தில் 6 நாட்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

;