tamilnadu

img

முருங்கை சாகுபடியில் லாபமீட்டும் கூட்டுப் பண்ணை விவசாயிகள்

“காஞ்சிபுரத்துகாரங்க காலாட்டிக்கிட்டே சாப்பிடுவாங்க" என வழக்கு மொழி உண்டு. காஞ்சிபுரம் நெசவுக்கு பெயர் போனது. இங்கு இருப்பவர்கள் பெருவாரியாக காலால் தறி அடித்து துணி நெய்பவர்கள். நுட்பமாக துணி நெய்வதற்கு கண் பார்வை கூர்மையாக இருக்க வேண்டும். எனவே எது இருக்கிறதோ இல்லையோ கண்களை பாதுகாக்கும் முருங்கை மரம் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக இருக்கும். முருங்கைக் கீரைக்கு கண்பார்வையை கூர்மையாக வைத்திருக்கும் மருத்துவ குணம் உண்டு என்பதால் இதனை சாப்பிடும் இவர்கள் பார்வை குன்றாமல் எவ்வளவு வயதானாலும் தறி அடித்து பணிபுரிய முடியும் என்பதே இதன் உட்பொருள். தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய முருங்கையை கைக்கெட்டும் உயரத்தில் பறிக்கும் வகையில் வளர்த்து வருகின்றனர் திருநாவலூர் பகுதி விவசாயிகள். உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டிக்குழி ஊராட்சியில் கல்லமேடு, ஆண்டிக்குழி, தொப்பையாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வி. மணிகண்டன், செல்வகுமார் பன்னீர்செல்வம் ஆகிய விவசாயிகள் ஒன்று கூடி நான்கு ஏக்கரில் கொடி முருங்கை என்ற குட்டையான முருங்கையை வளர்க்கின்றனர்.

சுமார் 4 முதல் 6 அடி வரை மட்டுமே இந்த முருங்கை மரம் வளர்கிறது. செடி நட்டதிலிருந்து ஆறு மாதங்களில் காய் காய்க்கிறது. 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு செடியிலிருந்தும் அறுவடை நடைபெறுகிறது. ஒரு ஏக்கர் செடியிலிருந்து 700 கிலோ வரை முருங்கைக் காய் கிடைக்கிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 15 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் இதனை சென்னை, திருச்சி, மதுரை என பல்வேறு பெரு நகரங்களுக்கு  அனுப்புகின்றனர். இந்த முருங்கைக்காய் இரண்டிலிருந்து இரண்டரை அடி உயரம் உள்ளது. இதுகுறித்து விவசாயி மணிகண்டனின் மகனான இளைஞர் வீரசேகர் என்பவர் கூறுகையில், "நான்கு ஏக்கரில் பயிரிட சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை நான்கு ஏக்கருக்கும் சேர்த்து 50,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 டன் காய் கிடைக்கும். தற்போது நாங்கள் பயிரிட்டு 8 மாதம் ஆகியுள்ள நிலையில் 3 டன் அளவிற்கு அறுவடை செய்துள்ளோம். இதனை பராமரிக்க பலரக உரங்களை கலந்து மாதந்தோறும் அடிக்க வேண்டும். இல்லையென்றால் தழையில் பூச்சி வந்து சாப்பிட்டு விடும். இதனால் செடியில் பூ நிற்காது, காய் காய்க்காது. எனவே இதனை பராமரிப்பது முக்கியமான பணியாகும்.  நட்டதிலிருந்து 3 முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த செடியை பராமரிக்கலாம். கரும்பு வெட்டுவது போல தரைக்கு மேலே உள்ள பகுதியை கழித்துவிட வேண்டும். இது ஆறு மாதத்தில் மீண்டும் துளிர்த்து காய் காய்க்க ஆரம்பித்து விடும். எனவே முறையாக பராமரித்தால் நல்ல லாபம் வரக்கூடிய பயிர் இந்த கொடி முருங்கை ஆகும்" என்றார். மேலும் முருங்கைக் கீரையை இலவசமாக கொடுத்து விடுவோம் எனவும் கூறினார்.  துவக்கத்தில் தர்பூசணியை பயிரிட்டு அருகே முறைப்படி முருங்கை செடியை நட்டுள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் தர்பூசணி விற்பனையாகாமல் தேங்கி அழுகிப்போக சிறிய ரக டிராக்டர் மூலம் 6 டன் தர்பூசணியை வயலிலேயே கொட்டி உழுதுள்ளனர். இதனால் ஏற்பட்ட நட்டத்தை முருங்கை பயிர் ஈடுசெய்யும் என்ற நம்பிக்கையுடன் முருங்கை மரங்களை வளர்க்கின்றனர் இக்கூட்டுப் பண்ணை விவசாயிகள்.

தொடர்புக்கு: மணிகண்டன் 9843990370, வீரசேகர் 9500616386.

-வி.சாமிநாதன்