tamilnadu

img

புயல் மேகமாய்ச் சூழும் பொருளாதார மந்தம்!

இன்றைய ஒட்டுமொத்த உலகப் பொருளாதார மந்தம், அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தகப் போர், ஈரான், வெனிசுலா  நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் அமெரிக்கா இந்தியா மீது விதித்திருக்கும் தடை முதலியவற்றின் பின்னணியில் இந்தியா சந்தித்து வரும், சந்திக்க விருக்கும் நெருக்கடிகள் குறித்து மேற்கண்ட தலைப்பில், பேரா. பிரபாத் பட்நாயக் பீப்பிள்ஸ் டெமாக்ரசி (26.05.2019) இதழில்  கட்டுரை ஒன்றினை எழுதியிருக்கிறார். அதன் சாரம் இங்கு தொகுத்துத் தரப்படுகிறது.

இந்தியாவின் தொழில் உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production) கடந்த மார்ச் மாதம் 0.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2013 ஜூன்  மாதத்திற்குப் பின்னர் இதுவே மிகப் பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில், தொழில் உற்பத்தியில் 77.6 சதவீதப் பங்கினை வகிக்கும் எந்திர பொருளுற்பத்தி கடந்த ஆண்டை விட 0.4 சதவீத வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தவிர, மூலதனப் பண்டங்களின்    (Capital Goods) உற்பத்தி  8.7 சதவீதமும், நுகர்வுப் பண்ட உற்பத்தி 5.1 சதவீதமும், இடைப் பட்ட பண்டங்கள் (Intermediary Goods) உற்பத்தி 2.5 சதவீதமும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. நீண்ட கால நுகர்வு அல்லாத உற்பத்திப் பண்டங்கள் (Non Consumer Durables) மட்டும் 0.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் நிதி ஆண்டு 2017 -18ல் 4.4 சதவீதமாக இருந்த தொழில் உற்பத்தி குறியீடு, 2018 – 19ல்  3.6% ஆக குறைந்து விட்டது. 

சுருங்கிவரும் உள்நாட்டுச் சந்தை!

இந்த பொருளாதார மந்தம் ஒரு வகையில் சொல்லப் போனால் இயல்பானதேயாகும். இந்தியப் பொருளாதாரம், உலகின் பல பொருளாதாரங்களைப் போலவே, வடிவமின்றிசிதைந்து கிடக்கிறது. நவீன தாராள வாதம் தொடர்ந்து முன்னேற முடியாமல் ஒரு முட்டுச் சந்தில் நிற்கிறது. அதற்குமாற்றாக, உள்நாட்டுச் சந்தையினை ஆதாரமாகக் கொண்டு,ஒரு புதிய பொருளாதார வடிவத்தினை உருவாக்கவும் முடியவில்லை. உலகப் பொருளாதாரத்தின் வேகம் மிகவும் குறைந்துவிட்டது. ஏற்றுமதி வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, இந்தியா மற்றும் சீனப் பொருளாதாரங்களைப் பாதித்திருக்கிறது. குறைந்த அளவிலாவது இதற்கு ஈடு செய்யும் வகையில்,உள் நாட்டுச் சந்தையை வலுப்படுத்தலாம் என்றால், அதுவும்வளரவில்லை.  மாறாக, அது சுருங்கி வருகிறது.  கிராமப்புற நெருக்கடி, ஏற்றுமதிக் குறைவின் விளைவாக உருவாகும் மறுசூழல், வங்கிகளின் வராக்கடன்கள், தொழில் உற்பத்திக்குறைவு ஆகிய அனைத்தும் முதலீட்டுச் செலவு முயற்சிகளைபெரிதும் பாதித்திருக்கின்றன. மொத்தத்தில், ஏற்றுமதிக் குறைவினை சரிக்கட்ட உதவுகின்ற உள்நாட்டுச் சந்தையும், எதிர்பார்ப்பிற்கு மாறாக சுருங்கிப் போயிருக்கிறது. 

கார்கள், இரு சக்கர வாகனங்கள் போன்ற நீண்ட காலப் பயன்பாட்டு நுகர்வுப் பண்ட (Consumer Durables) சந்தை சுருங்கிப் போய் நிற்கிறது. துணிமணி, காலணிகள், சோப் போன்ற நீண்ட காலப் பயன்பாட்டு நுகர்வு அல்லாத  பண்டங்களின் (Consumer Non–durables) சந்தை தேக்கம் அடைந்துள்ளது. எந்திரங்களை உற்பத்தி செய்யும்  எந்திரங்கள் போன்ற மூலதனப் பொருட்களின் சந்தையும் சென்ற ஆண்டிலேயே சுருங்கிப் போய் விட்டது.
 

ரிசர்வ் வங்கியின் முயற்சி! 

லதனம் கிடைக்க உதவும் வகையில், ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு தான் கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் என்ற அளவில் அண்மையில் இரண்டுமுறை குறைத்துள்ளது. ஆனால், இதில் பிரச்சனை வட்டி விகிதங்கள் அல்ல. வங்கிகள் வராக்கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், வங்கிகள் கொடுக்கும் கடன் அளவே குறைகிறது. கடன் அளவே குறையும் போது, பிரச்சனையைத் தீர்ப்பதில் வட்டி விகிதக் குறைப்பு எப்படி கை கொடுக்கும்? 

அரசின் செலவினங்கள் அதிகரிக்காமல்…

அரசின் செலவினங்களை அதிகரிப்பதே இங்கு முக்கியதேவை. ஆனால், பிரச்சனையும் இங்கு தான் தொடங்குகிறது.அண்மைய தேர்தல்களில், பல்வேறு கட்சிகள் கிராமப்புற ஏழை மக்களைச் சென்றடையும் வகையில் நேரடி பண உதவிக்கான திட்டங்களை அறிவித்தன. மோடி அரசின் கடந்தபட்ஜெட் 12 கோடி மக்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.6,000உதவி என அறிவித்தது. காங்கிரஸ் அதையும் கடந்து தனதுதேர்தல் அறிக்கையில் நியாய் (NYAY) திட்டத்தின் கீழ் 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6,000 (ஆண்டுக்கு ரூ.72,000) என அறிவித்தது. இவை போன்ற திட்டங்களை அமலாக்கினால், உள் நாட்டுச் சந்தை விரிவடையும் என்பதுஉண்மை தான். ஆனால், இவற்றுக்கெல்லாம்  பணம் எங்கிருந்து வரும்? வரிகள் மூலமே இவற்றை அமலாக்க முடியும். இந்தியாவில் செல்வ வரி நடைமுறையில் இல்லை. செல்வ வரிவிதித்தால் பெரிய அளவில் அரசின் வருமானம் கூடும். ஆனால், நிதி மூலதனம் அதை அனுமதிக்காது. காங்கிரசின் நியாய் திட்டத்தை அமல்படுத்துவது எளிது  என டாக்டர்மன்மோகன் சிங் வாதிட்டார். ஆம், எளிது தான், ஆனால், நவீன தாராளவாத எல்லைகளுக்குள் நின்று அதனை அமலாக்குவது மிகவும் கடினமானது. 

நிதிப்பற்றாக்குறை.. 

அரசுச் செலவினங்களை சற்று அதிகரித்துக் கொண்டாவது, இவை போன்ற திட்டங்களை அமலாக்கிடலாம் என்றால்,நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) அதன் குறிஇலக்கான 3.4 சதவீதத்தினைக் கடந்து விடும். இது இந்தியாவின் கடன் மதிப்பீடு  அந்தஸ்தினை குறைத்து விடும். இதன் விளைவாக நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையிலும் பரிவர்த்தனைச் சமநிலையிலும் நெருக்கடி உருவாகும்.  இத்துடன் இந்தியா வேறு சில நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியா ஈரானிடமிருந்து கச்சாஎண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா நிர்ப்பந்தித்துவருகிறது. தேர்தல்களுக்கு முன்னதாகவே, அமெரிக்காவின் இந்த நிபந்தனையினை மோடி அரசு ஏற்றுக் கொண்டு விட்டது.சலுகை விலையில் இதுவரை இந்தியாவிற்குக் கிடைத்து வந்த ஈரான்  எண்ணெய் இனி கிடைக்காது. நமது நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறையினை உயர்த்தும் அளவிற்கு, சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை ஏறத் தொடங்கி விட்டது. ஈரான் குறித்து அமெரிக்கா விதித்திருக்கும் பிற நிபந்தனைகளையும் கணக்கில் கொண்டால், நமது கடன் மதிப்பீடுஅந்தஸ்து குறையும் வாய்ப்பு அதிகம் உண்டு. அந்நிலையில்,உள்நாட்டிற்குள் வரும் நிதி வரவும் குறையும். போகிற போக்கில்இந்தப் பற்றாக்குறையினைச் சமாளிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். 

நாம் இப்போது மிக நெருக்கடியான நிலைமையில் இருக்கிறோம். இந்தப் பொருளாதார மந்தத்தினை எதிர்கொள்ள வேண்டும் என அரசு நினைத்தால், நடைமுறைக் கணக்குப்பற்றாக்குறையினை சமாளிப்பதில் அரசுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும். மந்தத்தினைக் கண்டு கொள்வதில்லை என முடிவெடுத்தால், வேலையின்மை நிலைமை மேலும் மிகவும் மோசமாகி விடும்.    

வேலையின்மையின் கடுமை

நமது நாட்டில் நிலவும் வேலையின்மை குறித்த தகவல்களையும்,  உண்மை நிலவரத்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக  மோடி அரசு மூடி மறைத்து வருகிறது. இருப்பினும், மத்திய புள்ளிவிவர அமைப்பிலிருந்து கசிந்து வெளிவந்த செய்திகள், இந்தியாவின் வேலையின்மையின் அளவு  6.1 சதவீதம் எனவும், கடந்த 45 ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் எனவும் கூறுகின்றன.  கடந்த ஏப்ரல் மாதத்தில் இது7.1 சதவீதத்தினை எட்டியிருப்பதாக இந்தியப் பொருளாதாரத்தினைக் கண்காணிக்கும் அமைப்பு CMIE) கூறியிருக்கிறது. வேலையின்மை விகிதம் குறித்த அம்சத்தில் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த புள்ளி விவரங்கள் வேலையின்மையின் ஏற்ற இறக்கங்களைத் தான் குறிக்கின்றனவே தவிர, அதன் அளவினையினையும் கடுமையினையும் உணர்த்துவதில்லை. இங்கு வேலையில் இருப்பவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஆண்டு முழுவதுமாக வேலையில் இருப்பவர்கள் அல்லர்.  இந்தியாவில் இருக்கும் வேலைப் பங்கீட்டு முறையில் (Employment Rationaing) பலர் ஆண்டில் சில காலம் மட்டும் வேலை கிடைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.  

நவீன தாராளவாதத்தை கைவிடுக! 
 

இந்த நிலையில் வேலையின்மையினைப் போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆனால், நவீன தாராளவாத எல்லைகளுக்குள் நின்று அதைச் செய்தால்,பரிவர்த்தனைச் சமநிலையினை அது பாதிக்கும். இன்றையகால நிலை நவீன தாராளவாதம் நம்மைக் காவு வாங்குவதாகமாறிவிட்டது.   அந்தக் கொள்கை இன்று ஒரு முட்டுச் சந்திற்குள்நுழைந்து விட்டது. அந்தக் கொள்கைகளிலிருந்து மீண்டு,மறுபடியும் வர்த்தகம் மற்றும் முலதனக் கட்டுப்பாடுகளுக்குள் செல்வதே சிறந்தது. இன்று  அமெரிக்கா வர்த்தகக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து விட்டது அல்லவா? அமெரிக்காவின் இந்தச் செயல்பாட்டு நிழலை  இந்தியாவும்  பின் தொடர வேண்டியது தானே? அதைத் தொடர்ந்து செல்வ வரி, வாரிசு உரிமை வரி போன்ற வரிகளை விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஏழைகளுக்கு இந்த நேரடிப் பண உதவியினைச் செய்யஇயலும். அதே வேளையில், உணவு தானிய உற்பத்தியினையும் பெருக்க வேண்டும். அந்நிய மூலதனம் வரவில்லை என்ற கவலையும் தேவை இல்லை. அதனால் உருவாகும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைப் பிரச்சனையைச் சமாளிப்பதை விட இதுஅதிக சிரமத்தைக் கொடுத்து விடாது. வர்த்தகக் கட்டுப்பாடு இருப்பதால் நடப்புக்கணக்குப் பற்றாக்குறையும் கட்டுக்குள்ளேயே இருக்கும். எனினும், நவீன தாராளவாதம் முடிவுக்கு வந்து விட்டது என்ற உண்மையினை மோடி அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், தொழில் மந்தம் அதிகரிக்கவே செய்யும். 

தொகுப்பு : இ.எம் ஜோசப்



 

;