tamilnadu

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தூத்துக்குடியில் 124 பேருக்கு சிகிச்சை

தூத்துக்குடி, ஜூன் 14- தூத்துக்குடியில் சனிக்கிழமை 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 124 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வந்து உள்ளனர். தற்போது சென்னையில் இருந்து இ-பாஸ் மூலம் தூத்துக்குடிக்கு வந்தவர்களால் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மகராஷ்டிராவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேர், சென்னையில் இருந்து வந்த 16 பேர், திருவள்ளூரில் இருந்து வந்த ஒருவர், கோவில்பட்டி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவர், மருத்துவர்கள் 3 பேர், ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 7 பேர் ஆகியோரும் அடங்குவர். மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 6 பேரும், கோவில்பட்டியில் 6 பேரும், புதூரில் 2 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும், செந்தியம்பலத்தில் 4 பேரும், சாயர்புரம், மணியக்காரன்பட்டி, சிதம்பரம்பட்டி, கொங்கராயகுறிச்சி, எட்டயபுரம், தருவைகுளம், வல்லநாடு, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஞாயிறன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் மொத்தம் 124 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.