tamilnadu

img

பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 768 பதவிகள்.. விவசாயிகளுக்கான நல நிதி வாரியம்... கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்:
கண்ணூர் பரியாரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 768 பதவிகளை உருவாக்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 247 கற்பித்தல் பணியிடங்கள், 521 செவிலியர் பணியிடங்கள் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுகாதாரத் துறையில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, 20 பட்டியல் சாதியினர், 52 பட்டியல் பழங்குடியினர் என 72 கூடுதல்  பதவிகள் உருவாக்கவும் கேரள அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.   

மேலும், மாநிலத்தில் விவசாயிகளின் நலனுக்காக கேரள உழவர் நல நிதி வாரியத்தை அமைக்க அமைச்சரவை முடிவுசெய்தது. வாரியத்திற்கு தலைவராக டாக்டர்.பி. ராஜேந்திரன் நியமிக்கப்படுவார். இந்த வாரியம் ‘கேரள கர்ஷகா சேமநிதி வாரியம்’ என்று அழைக்கப்படும். விவசாயிகளின் நலன்மற்றும் மேம்பாட்டிற்காக இதுபோன்ற ஒருகுழு அமைக்கப்படுவது நாட்டில் இதுவே முதல் முறை. சட்டத்தின் படி ஒரு விவசாயி என்றால், உரிமையாளராகவோ, உரிமம்பெற்றவராகவோ, குத்தகை உரிமை பெற்றவராகவோ, வாய்வழி குத்தகைதாரராகவோ, 5 சென்ட்டுக்கு குறையாமலும், 5 ஏக்கருக்கு குறையாத, 15 ஏக்கருக்கு மேற்படாத நிலம் உள்ளவராகவோ, ஆண்டு வருமானம்ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவராகவோ, 3 ஆண்டுகளுக்கு குறையாமல்  விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாக கொண்ட நபர்.  தோட்டக்கலை, மூலிகைதாவர சாகுபடி, நாற்றங்கால் மேலாண்மை, மீன், அலங்கார மீன், தேனீக்கள், பட்டுப்புழுக்கள், கோழி, வாத்துகள், ஆடுகள், முயல்கள், கால்நடைகள், முக்கியமாக விவசாய நோக்கங்களுக்காக நிலத்தை பராமரித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

வாரியத்தின் நல நிதி திட்டத்தில் உறுப்பினராவதற்கு, விவசாயிகள் பதிவு கட்டணம் நூறு ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச மாத சந்தா ரூ .100  விவசாயிகள் செலுத்த வேண்டும். ஆறு மாதங்கள்அல்லது ஒரு வருடம் ஒன்றாக ஈவுத்தொகையை செலுத்தலாம். நலவாரிய நிதியத்தின் உறுப்பினர்களுக்கு ரூ .250 / - வரை சமமானபங்கை அரசு வழங்கும். நலவாரிய உறுப்பினர்களுக்கு தனிநபர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை உதவி, ஊனமுற்றோர் உதவி, திருமணம், மருத்துவத்துக்கான உதவி, மகப்பேறு, கல்வி உதவி மற்றும் மரணத்திற்குப் பிந்தைய சலுகைகள் ஆகியவற்றிற்கு உரிமை உண்டு.

ஐந்து வருடங்களுக்கும் குறையாமல் தங்கள் பங்களிப்பை செலுத்திய விவசாயிகள், நிலுவைத் தொகை இல்லாமல் நலநிதியில் உறுப்பினராக இருந்து 60 வயதை எட்டிய விவசாயிகள், வழங்கப்படும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். விவசாயிகளின் ஓய்வூதியத்தைப் பெறுபவர்களுக்கு பின்னர் நல நிதியில் இருந்து ஓய்வூதியம் கிடைக்கும். குடும்பஓய்வூதியம் பெற குறைந்தது 5 ஆண்டுகளுக்கு நிலுவைத் தொகை இல்லாமல் ஈவுத்தொகையை செலுத்திய பின்னர் இறந்த நபரின் குடும்பத்திற்கும் கிடைக்கும். ஓய்வூதிய தேதிக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக விவசாயத்தைத் தொடர முடியாதவர்களுக்கு 60 வயது வரை மாத ஓய்வூதியம் வழங்கப்படும். நோய் அல்லது விபத்து காரணமாக உடல் ஊனமுற்றவர்களுக்கும் இந்த நன்மை வழங்கப்படுகிறது. வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர வேண்டும்.அத்தகைய உறுப்பினர்கள் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிக்கு தகுதியற்றவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு உதவி வழங்கப்படும்.