tamilnadu

img

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 94 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

 உடுமலை, செப். 25 – திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்திற்கு புதனன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருமூர்த்தி அணையில் தமிழ்நாடு கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தண்ணீரைத் திறந்துவிட்டார். மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் உள்பட அரசு அதிகாரிகள்,  மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை  வட்டத்தில் 16 ஆயிரத்து 146 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 4ஆயிரத்து 626 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 19 ஆயிரத்து 136 ஏக்கரும், பல்லடம் வட்டத்தில் 5 ஆயிரத்து 966 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 8 ஆயிரத்து 611 ஏக்கரும், காங்கேயம் வட்டத்தில் 16 ஆயிரத்து 425 ஏக்க ரும் என 70 ஆயிரத்து 910 ஏக்கர் விவசாயப் பகுதி பாசன வசதி பெறும்.  அத்துடன் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் 19 ஆயிரத்து 502 ஏக்கரும், சூலூர் வட்டத்தில் 3 ஆயிரத்து 656 ஏக்கரும் என 23 ஆயிரத்து 158 ஏக்கரும் பாசன வசதி பெறும். இரு மாவட்டங்களிலும் சேர்ந்து பிஏபி நான்காம் மண்டலத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று பயனடையும். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறுகையில், காண்டூர் கால்வாயில் ஒரே நாளில் பெய்த கனமழை காரணமாக பாறை சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதை விரைவாக அகற்றி கால்வாயை சரி செய்திருந்தால் இன்னும் முன்கூட்டியே தண்ணீரை விவசாயத்துக்குத் திறந்து விட்டிருக்க முடியும். 10 நாட்கள் காலதாமதமாக திறக்கப்பட்டாலும் விவசாயத்துக்கு பலனளிக்கும் என்று கூறினார்.