நாட்டுக் கோழி வளர்க்க இன்று இலவச பயிற்சி
திருச்சிராப்பள்ளி, மே 22-திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 23, 24 ஆகிய தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி நடைபெற உள்ளது.இதில் நாட்டுக்கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவை கூண்டில் வளர்த்தல், முறையான பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வர வேண்டுமென ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
பொன்னமராவதியில் நாளை மின்தடை
பொன்னமராவதி, மே 22 -புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே 24 அன்று (வெள்ளிக்கிழமை) ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொன்னமராவதி பகுதியில் உள்ள கொப்பனாபட்டி, காட்டுப்பட்டி, பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, ஏனாதி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படும். கொப்பனாபட்டி முதல் வேந்தன்பட்டி வரை செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழும் தருவாயில் உள்ளன. அந்த கம்பிகளை உடனடியாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூல்: தனியார் பள்ளிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
திருவாரூர், மே 22-திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத் தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத் தொகையை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது. அவ்வாறு ஏதேனும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தால் அப்பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.மேலும், நர்சரி பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்துவதாக தெரிவித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் முதன்மை கல்வி அலுவலர் - 7373003011, மாவட்டக்கல்வி அலுவலர், திருவாரூர் - 9442223440, மாவட்டக்கல்வி அலுவலர், மன்னார்குடி – 9750983053 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு வன்கொடுமை முதியவர் மீது வழக்கு
சீர்காழி, மே 22 -நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியின் தாய் 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், அச்சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை விடப்பட்டதால், சிறுமியை பெரியப்பா ரவி (60) அழைத்துச் சென்று, கடந்த 10 நாட்களாக தன்னுடன் தங்க வைத்து, பின்னர் செவ்வாயன்று பாட்டி வீட்டில் விட்டு விட்டார். சிறுமி உடல்நிலை சரியில்லை என கூறியதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ சோதனைக்குப்பின், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னை மரத்தில் ஏறிய கூலித் தொழிலாளிக்கு எலும்பு முறிவு
சீர்காழி, மே 22-நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் சையதுநகரைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி என்பவரின் மகன் கூலித் தொழிலாளி மணிகண்டமூர்த்தி (25).இவர் செவ்வாயன்று வீட்டுத்தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து தேங்காய்களை பறித்து விட்டு, சில தென்ன மட்டைகளை வெட்டி கீழே தள்ளி கொண்டிருந்தார். அப்போது இறுதியில் ஒரு மட்டையை வெட்டும் போது மணிகண்டமூர்த்தியின் வலது கையின் பந்து கிண்ண மூட்டு நழுவியது. இதனால் திடீரென கையில் வீக்கம் ஏற்பட்டு கையை அசைக்க முடியாத நிலையில் வலியால் கூச்சலிட்டபோது பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மரத்தில் உள்ளவரை மீட்க முடியாமல் திணறினர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி மரத்தின் உச்சியிலிருந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு எலும்பு முறிவு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
உலர் கழிவுகள் விற்பனை
அறந்தாங்கி, மே 22 -புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி எல்லைக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் மே 15 முதல் மே 21 வரை வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பெறப்பட்டன.மக்காத குப்பையில் இருந்து பெறப்பட்ட விற்பனைக்குரிய உலர் கழிவுகள் 1,033 கிலோ சிரட்டை, பாட்டில், பேப்பர் அட்டை பெட்டிகள் கிலோ 4 ரூபாய் வீதம் விற்பனை செய்து ரூ.4,214, 68 துப்புரவு பணியாளர்களுக்கு அவரவர் கொண்டு வரும் பொருட்களின் எடைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், விற்பனை செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் 1,987 கிலோ அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைக்கு அனுப்ப முறையாக பேக்கிங் செய்வதற்காக கலவை உரக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.