tamilnadu

img

கொள்ளிடம் கழுதை வாய்க்கால் உடைப்பை சரி செய்யக் கோரிக்கை

சீர்காழி, செப்.16- கொள்ளிடம் அருகே கழுதை வாய்க்காலில் 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பை அடைக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில், பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் தெற்கு ராஜன் பாசன வாய்க்காலிருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே கிளை வாய்க்காலாகி சந்தன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கழுதை வாய்க்காலில் சென்று இந்த சந்தன வாய்க்கால் ஒன்றாக கலந்து பின்னர் தொடர்ந்து செல்லும் கழுதை வாய்க்கால் மாணிக்கவாசல் கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிட்டியணை உப்பனாற்றில் கலக்கிறது. கொள்ளிடம், திருமைலாடி, புத்தூர், கடைக்கண் விநாயகநல்லூர், ஆலாலசுந்தரம், மாணிக்கவாசல் கூட்டுமாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும், சந்தனவாய்க்கால் மற்றும் கழுதை வாய்க்கால் ஆகியவை இருந்து வருகின்றன. மழைக்காலங்களில் மிக அதிகம் வரும் மழைநீரை எளிதில் வடியச்செய்யும் இந்த கழுதை வாய்க்காலின் வலது கரையில் மாணிக்கவாசல் கிராமத்தில் அதிக நீர் வரத்தினை காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு 5 மீட்டர் தூரத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளிலும், வயல்களிலும் சென்று பயிர்களை மூழ்கடித்து நாசமாக்கியது. அப்போது தற்காலிகமாக மண் மூட்டைகள் கொண்டு அடைக்கப்பட்ட இந்த வாய்க்காலின் உடைப்பு இதுவரை நிரந்தரமாக அடைக்கப்படவில்லை. தற்பொழுது வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்தாலோ, மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் தண்ணீர் பெருக்கெடுத்தாலோ கழுதை வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்ட இடத்திலே மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்படும். இந்நிலையில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் எனவும், மழைக்காலம் நெருங்குவதற்குள் பயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் கழுதை வாய்க்கால் உடைப்பை உடனடியாக அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாணிக்கவாசல் விவசாயி ராஜபாண்டியன் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.