tamilnadu

புதுக்கோட்டை ,மயிலாடுதுறை முக்கிய செய்திகள்

ஆவுடையார்கோவில் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவரை நியமிக்க கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக.30- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் இரவுப் பணி மருத்துவரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், சி.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வே.வீரையா, அழகர், கலந்தர், காளியம்மாள், வைரமணி உள்ளிட்டோர் பேசினர். ஆவுடையார்கோவிலில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்தை தொடர்ந்து இயக்க வேண்டும். முன்னறிவிப்பு இல்லா மின்தடையை போக்கி தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


ஏ.வி.சி.கல்லூரி மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம் 
 

மயிலாடுதுறை, ஆக.30- நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இந்தாண்டு மற்றும் இதற்கு முன்பு தேர்ச்சி பெற்ற இளங்கலை, இளம், முதுகலை அறிவியல் மற்றும் ஆய்வில் நிறைஞர் மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் அதற்குரிய தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். வரும் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் காலை மற்றும் மாலை நேரக் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.