tamilnadu

img

தஞ்சாவூரில் தொடர் யோகா பயிற்சி தமிழ் பல்கலை. துணைவேந்தர் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை சார்பாக வெள்ளிக்கிழமை உலக யோகா நாள் விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், 'யோகக்கலை பயிற்சிக்காக தமிழ் பல்கலைக்கழகத்திற்கு என ரூ.10 லட்சம் நிதியை தமிழக அரசு கடந்த ஆண்டு வழங்கியது. அதனைக் கொண்டு மெய்யியல் துறையில் யோகா மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.  மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் யோகா பயிற்சி அளிப்பதற்காக இம்மையத்திற்கு என தனியே பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யோகக் கலையை மேலும் பரப்பும் வகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், இருநூறு பேர் அமர்ந்து யோகா செய்யும் ஒரு கூடம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் திறக்கப்பட உள்ளது. தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு இவ்வசதியை பயன்படுத்தி தொடர் யோகா பயிற்சி வழங்கப்படும்' என்றார்.  முன்னதாக ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.பாலசந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் ச.முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆழியாறு அறிவுத் திருக்கோயில் விஷன் கல்வி மைய இயக்குநர் முனைவர் கே.பெருமாள் சிறப்புரையாற்றினார். சிறப்பு நிகழ்வாக ஸ்ரீ சுவாமி தயானந்தா மழலையர் பள்ளி மற்றும் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சியை செய்து காண்பித்தனர். உதவி பேராசிரியர்கள் முனைவர் தி. பார்த்திபன், முனைவர் ப.நல்லசிவம் ஆகியோர் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பொ.சுரேஷ் நன்றி கூறினார்.