tamilnadu

img

காந்தி தரங்கம்பாடி வருகை நினைவாக அஞ்சல் தலை வெளியீடு

தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி புனித தெரசாள் மகளிர் கலை கல்லூரியில், இந்திய அஞ்சல் துறை சார்பில் காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று சிறைக் கொடுமைகளை அனுபவித்து நோய்வாய்ப்பட்டு இறந்து போன தியாகி தில்லையாடி வள்ளியம்மை மற்றும் காந்தியடிகளின் போராட்டங்களில் அதிகளவில் கலந்து கொண்ட தமிழர்களில் பெரும்பாலானோர் தரங்கம்பாடி அதைச் சுற்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த காந்தி 1914-ல் முதல் பயணமாக தரங்கம்பாடி, தில்லையாடி பகுதிகளுக்கு வந்து போராட்டங்களில் தன்னுடன் இணைந்து போராடியவர்களின் குடும்பத்தார்கள், உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது வரலாறாக உள்ளது.

இந்நிலையில் காந்தியடிகளின் தரங்கம்பாடி வருகையை நினைவுகூர்ந்து சிறப்பு அஞ்சல் தலையை திருச்சி மத்திய மண்டல  துறைத்தலைவர் சுமதி ரவிச்சந்திரன் வெளியிட அஞ்சல் உறைக்கான நிதியை அளித்த சந்திரபாடி மீனவ பஞ்சாயத்தார்கள் பெற்றுக் கொண்டனர். அஞ்சல் துறை மத்திய மண்டல இயக்குநர் லூர்து ராஜ், புதுதில்லி காந்தி அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை, மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். வணிக வளர்ச்சி அலுவலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.