tamilnadu

img

மூத்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு சிபிஎம் அஞ்சலி

சென்னை, மே 10-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:தமிழ் இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான மூத்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார் என்ற செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துக் கொள்கிறது.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்த முகமது மீரான், தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த எழுத்தாளர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் வசித்து வரும் அவர், ஐந்து புதினங்களையும், ஆறு சிறுகதை தொகுப்புகளையும், சில மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார். 1997ல் அவரது ‘சாய்வு நாற்காலி’ என்ற புதினத்திற் காக சாகித்ய அகாடமி விருதுபெற்றார். சாய்வு நாற்காலி என்றஇந்த புதினம் கூர்மையான அரசியல் பகடி செய்யும் படைப்பாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகள் பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாட்டை உணர்த்துவதாக, கூர்மையாக விமர்சிப்பதாக அமைந்தன. முற்போக்கு இலக்கிய முகாமுடன் நெருக்க மான தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் எழுத்துக்களை சோசலிச எதார்த்தவாத படைப்புகள் என வகைப்படுத்த முடியும். எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசிய படைப்பாளி யான தோப்பில் முகமது மீரான் அவர்களது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்தஅஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரது மனைவி ஜலீலாமீரான் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இதயப்பூர்வ மான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.