திரைக்கலைஞர் சூர்யாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி!
மதுரை, மே 11- மதுரையில் நடைபெற்று வரும் அன்னவாசல் திட்டத்திற்கு திரைக்கலைஞர் சூர்யா ரூ.5லட்சம் நிதியுதவி அளித்திருப்ப தற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே 1 ஆம் தேதி துவக்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது. இன்றைய நிலையில் நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதியவுணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார்.
நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்ச ரூபாயை நன்கொடை யாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.