tamilnadu

img

சிறுபான்மை மக்களைப் பாதுகாப்போம்! - எஸ்.நூர்முகமது

மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுப்போம்!

 

இந்திய துணை கண்டத்தில் சுமார் 22 கோடி சிறுபான்மை மக்கள் வாழ்கின்றனர். உலகிலேயே முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் மிஷனரிகளால் துவக்கப்பட்ட ஏராளமான கல்விக் கூடங்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அதிக அளவில் கல்வி கற்பதற்கும், அதன் மூலமாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வழி வகை செய்தது. எனவே கிறிஸ்தவர்கள் ஓரளவு அதிக கல்வி அறிவு பெற்றவர்களாகவும், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளைப் பெற்றவர்களாகவும் நமது தேசத்தில் உள்ளனர். இருந்தும் அவர்களது வழிபாட்டு உரிமைகள் அதிகம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

தலித் கிறிஸ்தவர்களின் நிலை

தீண்டாமைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட கணிசமான தலித்துகள் மதம் மாறி கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர். அவர்களும் இதர தலித்துக்களை விட மேம்பட்ட வாழ்நிலை உடையவர்களாக இல்லை. ஆனால் அவர்கள் மதம் மாறியவர்கள் என்பதால் அவர்களுக்கு பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடும், இதர சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் சட்டப்படி மத அடிப்படையிலான பாரபட்சம் கூடாது என்றிருந்தாலும் தலித் கிறிஸ்தவர்கள் மட்டும் மத ரீதியிலான பாரபட்சத்தை அனுபவித்து வருகின்றனர்.

விசாரணை கமிஷன்களும் பரிந்துரைகளும்

இந்திய முஸ்லீம்களின் நிலையோ மிகவும் பரிதாப நிலையிலே உள்ளது. 2004 ம் ஆண்டு இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது தான் முஸ்லீம்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதியரசர் ரஜேந்திர சச்சார் தலைமையிலான ஒரு விசாரணைக் குழு 2005 ல் அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்த விபரங்களை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வமான தரவுகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் ஒரு அறிக்கையை 2006-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை வெளிவந்த போது தான் இந்திய முஸ்லீம்களின் எதார்த்த நிலை வெளி உலகுக்குத் தெரிந்தது. முஸ்லீம்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை பட்டியலின மக்களை விட தாழ்வான நிலையில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அந்த அறிக்கையில் சச்சார் குழு முஸ்லீம்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதில் பிரதானமானது சம வாய்ப்பு கமிஷன் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை. அந்த பரிந்துரைகளில் பெரும்பான்மை ஆண்டுகள் 13 கடந்தும் அமலாக்கப்படவில்லை. மேலும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை அம்மக்களால் பல்லாண்டுகளாக வற்புறுத்தப்பட்டு வந்தது. எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது. ரங்கநாத் மிஸ்ரா குழுவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, முஸ்லீம்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கவும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தலித்துகளுக்கு இதர பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் தனது பரிந்துரைகளை 2007 ல் வழங்கியது. அந்த பரிந்துரை எதுவும் மத்திய அரசுகளால் ஏற்கப்படவில்லை.

பா.ஜ.க. ஆட்சியும் சிறுபான்மையினரின் நிலையும்

நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி மத்தியில் வந்த பின்னர் சிறுபான்மை மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டது. சங் பரிவாரத்தின் முக்கிய அங்கத்தினரான மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல் மூலமே பிரதான இடத்திற்கு வந்தவர்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாதவர்கள். இந்திய அரசியல் சட்டத்தை அங்கீகரிக்காதவர்கள். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை விட கோல்வால்கரும், சாவர்க்கரும் உருவாக்கிய இந்துத்துவா கருத்தாக்கமே அவர்களை இயக்கும் அடிப்படை சித்தாந்தங்கள். எனவே அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே வெறுப்பு அரசியல் உச்சத்துக்கு வந்தது. பசு பாதுகாப்பு என்ற பெயரால் முதல் ஐந்தாண்டு காலத்தில் சங் பரிவார குண்டர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முகம்மது அக்லாக் எனும் முதியவர் பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதில் துவங்கி ஏராளமான படுகொலைகள். காஷ்மீர் மாநிலத்தில் கத்வா எனும் இடத்தில் ஆசிபா எனும் சிறுமி கோயில் கருவறைக்குள் வைத்தே கும்பல் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் பதைக்க வைத்தது. இத்தகைய நிகழ்வுகளெல்லாம் அரசும், ஆளும் கட்சியினரும் குற்றவாளிகளின் கூட்டாளிகளாகவே செயல்பட்டு அவர்க ளைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள் கீழ்த்தரமானவை. 2014ல் மீண்டும் மோடி தலைமையில் அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி வந்த பின்னர் வெறுப்பரசியல் உச்சத்துக்கு சென்றுள்ளது. உ.பி.யில் அமேதி மாவட்டத்தில் காபூர்வா கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அமானுல்லாகான் அடித்துக் கொலை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தப்ரீஸ் அன்சாரி எனும் முஸ்லீம் இளைஞர் ஜெய் ஸ்ரீராம் கோஷமிடக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை, உ.பி.யில் கந்தார் மாவட்டத்தைச் சார்ந்த 15 வயது சிறுவன் ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி 4 பேர் கொண்ட கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், ஜாம்ஷெட்பூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த அன்சாரி என்பவரை விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த பயங்கரம் உட்பட -ஏராளமான சம்பவங்கள் ஆட்சியாளர்களின் அனுசரணையோடு சங் பரிவார கும்பல்களால் நடத்தப்பட்டன. இதை கண்டிக்கவோ அல்லது குற்றவாளிகளைத் தண்டிக்கவோ அரசு தயாரில்லை என்பது சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.

சிறுபான்மையினரை  குறி வைத்து பல சட்டங்கள்

மோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி வந்த பின்னர் மேலும் வேகத்துடன் சங்கிகளின் நிகழ்ச்சி நிரல்கள் அமலாக்கத் துவங்கியுள்ளன. முதலாவதாக முத்தலாக் சட்டம். முஸ்லீம் பெண்களின் கண்ணீரைத் துடைக்கவே இச்சட்டம் என மோடி கூறியதை யாராலும் ஏற்க இயலவில்லை. விவாக ரத்து வழக்குகள் எல்லாம் இந்துக்கள், கிறிஸ்தவர்களைப் பொறுத்தமட்டில் சிவில் சட்ட அடிப்படையில் சிவில் வழக்குகளாகவே கையாளப்பட்டு வரும் நிலையில் முஸ்லீம்கள் முத்தலாக் கூறினால் அவ்வழக்குகள் மட்டும் கிரிமினல் சட்ட அடிப்படையில் எடுக்கப்பட்டு, கணவரை சிறையில் அடைக்க வழி வகை செய்கிறது. இதில் முஸ்லீம்கள் மீதான வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தான் வெளிப்படுகிறதே ஒழிய முஸ்லீம் பெண்கள் மீதான கரிசனம் வெளிப்படவில்லை.

அடுத்து காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சட்ட சிறப்பு பிரிவு 370 ரத்து. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி அம்மாநிலத்தின் தனித்தன்மையையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட பிரிவு 370. அதை ரத்து செய்ததோடு, மாநிலமே இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. அதே நேரம் வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களுக்கு அரசியல் சட்ட பிரிவு 371-ன்படியான சிறப்பு சலுகைகள் தொடர்கிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மூவர் உட்பட பல தலை வர்கள் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அம்மாநில மக்களின் சிவில் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, மாநிலமே ஒரு திறந்த வெளி சிறைச் சாலையாக நீடிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் உரிய விவாதத்திற்கான வாய்ப்பு அளிக்காமலேயே அவசர அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இதன் தொடர்ச்சியாக தேசிய மக்கள் தொகை பதிவேடும், அதன் அடிப்படையில் நாடு தழுவிய தேசிய குடியுரிமைப் பதிவேடும் தயாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார். அவர்களது நோக்கம் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி, குடியுரிமை அற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பதே.  முஸ்லீம்களை மட்டும் குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தனிமைப்படுத்தியுள்ளதால் முஸ்லீம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமும், பீதியும் அவர்களைப்போராட்டக்களத்திற்கு தள்ளி விட்டுள்ளது. முதலில் இந்த போராட்டம் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தான் துவங்கியது. வட கிழக்கு மாநிலங்களிலும் இதற்கு எதிராக வலுவான கிளர்ச்சிகள் துவங்கின. ஜாமியா மிலியா வில் காவல்துறையினரும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முகமூடி அணிந்த சங் பரிவார ரவுடிகளும் நடத்திய தாக்குதல்களும் வன்முறைகளும் நாடு தழுவிய கண்டனங்களை ஏற்படுத்தின.

முஸ்லீம் பெண்கள்  போராட்ட களத்தில்...

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்துப் பகுதி மக்களின் ஆதரவோடு முஸ்லீம் மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. என்.பி.ஆர்., என்.ஆர்.சி. ஆகியவை முஸ்லீம்களை மட்டும் பாதிப்பவையல்ல என்பது அசாமில் 12 லட்சம் இந்துக்களும், 7 லட்சம் முஸ்லீம்களும் குடியுரிமை யற்றவர்களாக அறிவிக்கப்பட்ட உண்மை வெளி வந்த போது வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் இந்த ஆபத்தை இதர சமூகங்கள் உணரவில்லை. ஆனால் முஸ்லீம்கள் சங் பரிவார் ஆட்சியில் தங்கள் வாழ்வு குறித்தும், தங்கள் சந்ததிகளின் எதிர்காலம் குறித்தும் கொண்ட அச்சமே அவர்களை வீதிகளில் கொண்டு வந்து நிறுத்தி யுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் பெண்களாலேயே இப்போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் பெண்கள் நாடு முழுக்க முழக்கங்களுடன் போராடி வருகின்றனர். இரவு பகல் பாராமல் போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில் தான் தில்லியில் பா.ஜ.க தலைவர்கள் கபில் மிஸ்ரா,அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா, அபய் வர்மா போன்றவர்கள் காவல்துறையினர் முன்னிலையிலேயே வெறியூட்டும் வகையில் பேசினர்; அவர்களால் கொண்டு வரப்பட்ட பா.ஜ.க குண்டர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளில் 50 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதும், பல கோடிக்க ணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதும், சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்க ளாக அமைந்தன.

காவல்துறையினரும் வன்முறைக் கும்பல்களோடு சேர்ந்து கொண்டது மேலும் இழப்புகளை ஏற்படுத்தியது. தலையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி நள்ளி ரவில் தூக்கியடிக்கப்பட்ட விதம் கடும் விமர்சனத்துக்குள் ளாகியது. சங் பரிவாரத்தினர் ஆட்சியதிகாரத்தையும் தங்கள் வெறுப்பரசியலுக்கே பயன்படுத்துகின்றனர் என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. இத்தகைய கொடுமையான சம்பவங்கள் நடந்தாலும், அமைதியான போராட்டக்காரர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் போராட்டங்கள் தொடர்கின்றன. மேலும் உத்வேகத்துடன் முஸ்லீம் பெண்கள் போராட்டக்களத்தில் உள்ளனர். அவர்கள் மத்தியில் மதச்சார்பற்ற அரசியல் கட்சியினரும், சமூக செயற்பாட்டாளர்களும் உத்வேகமளிக்கும் உரைகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்கும் வகையிலான முழக்கங்களைக் கொண்டதாகவே உள்ளன. முஸ்லீம்கள் மத்தியில் தங்கள் பாதுகாப்புக்கும், சம உரிமைக்கும் மதச்சார்பற்ற அரசியல் சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்து போராட்டக்களம் கற்றுத் தந்த பாடமாக அமைந்துள்ளது. இது வரவேற்கத் தகுந்த ஒன்று. இது மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் இப்போ ராட்டத்தில் முஸ்லீம்கள் மட்டுமன்றி மதச்சார்பற்ற அனைத்து மத மக்களையும் இணைக்க வேண்டியுள்ளது. அப்பணியை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு முன் னெடுக்கிறது. 

மதுரையில் மார்ச் 14 (இன்று) நடைபெறும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் 3வது மாநில மாநாடு அதற்கான வழி முறைகளையும், திட்டங்களையும் வகுக்கும். மதச் சார்பற்ற அரசியலை முன்னெடுப்போம்! அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்.அதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்! 

கட்டுரையாளர் :  மாநிலத் தலைவர், 
தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக்குழு