tamilnadu

img

மகாராஷ்டிராவில் ஜனநாயகப் படுகொலை: மோடியும் ஷாவும் எவ்வாறு நிகழ்த்தினர் சித்தார்த் வரதராஜன்

சனிக்கிழமை அதிகாலையில், மகாராஷ்டிரா மக்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில், சர்ச்சைகளுடன்  சுதந்திரம் பறி போன நிலையில் நாடு விழித்துக் கொண்டது. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நரேந்திர மோடியால்  அவருக்கு மிகவும் விருப்பமான ஊடகமான ட்விட்டர் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை கிழித்து எறிந்து, ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட மரணம் குறித்த செய்தி வெளியானது.
 சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராகப் போகிறார் என்ற தலைப்புடன் காலை செய்தித்தாள்கள் அனைத்திலும் செய்தி வெளியாகி இருந்தது வேடிக்கையாகிப் போனது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் இந்த மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் தங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து பாஜகவிற்கு எதிராக பொதுவான  தளத்தை ஏற்படுத்த முடிந்திருப்பது தெளிவாகியது.
பவாரின் இந்த அறிவிப்பு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைப் பொறுத்தவரை, தங்களுடைய பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு அரசியல் சாக்கடைக்குள்  இறங்குவதற்கான அழைப்பாகவே இருந்தது. மகாராஷ்டிரா அரசாங்கம் தங்கள் கைகளை விட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது என்பதை அறிந்திருந்த அந்த இரு தலைவர்களும், முதல் நாளிலிருந்தே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதற்கான களத்தை தயார் செய்து வந்திருந்தனர். ஏற்கனவே விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை அவர்கள் தவறுதலாக கையாண்டு கொண்டிருந்தனர். இறுதியாக இப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் இந்த வெட்கக்கேடான செயலே ஆகும். அதனை எந்தவித  தயக்கமும் சங்கடமும்  இல்லாமல் அவர்கள் செய்து முடித்தனர்.
தேவேந்திர ஃபட்னாவிஸ்  மீண்டும் மகாராஷ்டிராவின் முதல்வராவதற்கான வழியை மோடியும் ஷாவும் எவ்வாறு  ஏற்படுத்திக் கொடுத்தனர்  என்பதைக் காணலாம். .

1. தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னர், மத்தியில் உள்ள மோடி  அரசு  தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அஜித் பவார், சரத் பவார் மற்றும் பிரபுல் படேல் ஆகியோருக்கு எதிரான ஊழல் குறித்த விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு புலனாய்வு அமைப்புகளைத் தூண்டியது. மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சம்பந்தப்பட்ட ரூ.25,000 கோடி மோசடியில் இந்த இரண்டு பவார்களும் சம்பந்தப்பட்டிருந்தனர். அஜித் பவார் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நீர்ப்பாசன முறைகேடு தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வந்தார்.

2. தேர்தல் முடிவுகள்  தெளிவற்றவையாக இருந்தன. 105 இடங்களைப் பெற்ற பாஜகவிடம் அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, முதல்வர் பதவியை வற்புறுத்தி வந்த சிவசேனாவின் கோரிக்கையை ஒத்துக் கொள்ள மனமில்லாததால், ராஜ்பவனில் உள்ள பாஜகவைச் சார்ந்த பகத்சிங் கோஷியாரி, அரசாங்கத்தை  அமைக்கின்ற வேலையைத் தாமதப்படுத்தினார்.

3. முந்தைய சட்டமன்றத்தின் காலம் முடிவடைந்த நாளான நவம்பர் 9 அன்று தேவேந்திர ஃபட்னவிஸை ஆட்சியமைக்க அழைத்து 48 மணி நேரம் அவகாசத்தை ஆளுநர் கோஷியாரி அளித்தார். ஆட்சியமைக்க அவர் மறுத்த போது, சிவசேனாவுக்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதிக கால அவகாசம் தேவை என்று அவர்கள் கோரிக்கை வைத்த போது, தேசியவாத காங்கிரஸுக்கு 24 மணிநேரம் அவகாசத்தை அவர் அளித்தார். ஆனால் அந்த காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே குடியரசுத் தலைவரின் ஆட்சியை ஆளுநர் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரை பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  மீறுவதாக இருக்கிறது. .

4. மத்திய அமைச்சரவை  மிக விரைவாக குடியரசுத் தலைவரின் ஆட்சியை பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார். மற்ற கட்சிகளை பாஜக உடைப்பதற்கான  கால அவகாசத்திற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது.

5. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை தங்களுடைய கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராகக் கொண்டு கூட்டணி அரசாங்கத்தை  அமைக்க ஒப்புக் கொண்டதாக தெளிவாகத் தெரிய வந்ததும், நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் அந்த புதிய கூட்டணியை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்தையும் செய்தனர். இந்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரத் பவார் மறுக்கிறார்; பாஜக அவர் தான் காரணம் என்று கூறுகிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்வதென்றால், மகாராஷ்டிராவில் அந்த கட்சி கூறுகின்ற எதையும் பொருட்படுத்த தேவையில்லை என்பதுதான்.

6. கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறையால் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அஜித் பவார், இப்போது தேவேந்திர ஃபட்னாவிஸை ஆதரிக்க ஒப்புக் கொண்டார். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதோடு, அவர் மீதான வழக்குகள் ஒன்றுமில்லாமல் செய்யப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டது.

7. அஜித் பவார் தனது கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திடச் சொன்னதாகவும், தவறான வழியில் அது பெறப்பட்டதாகவும் சட்டமன்ற உறுப்பினர்களில்  பலரும் குற்றம் சாட்டினர். தங்களுடைய வருகையைப் பதிவு செய்வதற்காகவே தாங்கள் காகிதத்தில் கையெழுத்திட்டதாக கூறுகின்ற அவர்கள், முதலமைச்சராக ஃபட்னவிஸை ஆதரிப்பதற்காக தாங்கள் கையொப்பமிடவைல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

8. குடியரசுத் தலைவர் கோவிந்த்தை தூக்கத்திலிருந்து எழுப்பி மகாராஷ்டிராவில் மத்திய ஆட்சியை ரத்து செய்யும் அறிவிப்பில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டனர். அதிகாலை 5:47 மணிக்கு அவர் கையெழுத்திட்டார். அமைச்சரவையின்  பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே குடியரசுத் தலைவரால் செயல்பட முடியும். ஆனால் எந்தவொரு அமைச்சரவைக் கூட்டமோ அல்லது பரிந்துரையோ அதற்காக செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அல்லது கூட்டு சந்தர்ப்பங்களிலும் இந்த விதிகளிலிருந்து விலகிச் செல்வதை பிரதமர் தேவையென்று கருதினால்,  அதை அவர் அனுமதிக்கலாம் அல்லது பொறுத்தருளலாம்”. என்ற இந்திய அரசாங்கத்தின் (விவகாரங்களைக் கையாளுவது)  12ஆவது விதியை பயன்படுத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும், இந்த விதியை அமல்படுத்துவதற்கான முதன்மையான  நோக்கம் "தீவிர அவசரம் அல்லது எதிர்பாராத தற்செயல் சூழ்நிலையை" கையாள்வதாக இருக்க வேண்டும் என்று அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வழியில் பார்த்தால், அரசாங்கத்திடம்  மறைப்பதற்கான ஏதாவொன்று  இருப்பதாக கருதுவதைத் தவிர, முதலமைச்சர் ஒருவர் பதவியேற்பதை "தீவிர அவசரம்" என்பதாக கருத  முடியாது.

9. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தன்னுடைய கட்சியின் ஆதரவை தாக்கரேக்கு தருவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஆளுநர் கோஷியாரி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் கொண்ட கேள்விக்குரிய பட்டியலைச் சரிபார்ப்பதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. காலை 7:30 மணிக்கு ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்க இருக்கின்ற முதலமைச்சர் தேவையான எண்ணிக்கையிலான  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காத ஆளுநர்களின் முடிவு லஞ்சம் மற்றும் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதிலேயே முடிவடையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் முன்வைத்த  கருத்துக்களை  அப்பட்டமாக மீறுவதாகவே இது உள்ளது.

10. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கை அஜித் பவார் தன்னுடன் கொண்டு வர முடிந்தால் மட்டுமே ஃபட்னாவிஸ் சட்டமன்றத்தில் முதலமைச்சராக நீடித்திருக்க முடியும். அதாவது 36 சட்டமன்ற உறுப்பினர்கள். அதற்குக் குறைவானவர்கள் ஆதரவளித்தால், அவர்கள் கட்சிமாறியதாகவே கருதப்படுவார்கள். ஆனால் சட்டத்திற்கும், அதன் அமலாக்கத்திற்கும் இடையில் ஏராளமான சறுக்கல்கள் உள்ளன. கட்சி மாறுவது குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய போதெல்லாம் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் கடந்த காலங்களில் பாரபட்சமாகவே நடந்து கொண்டுள்ளனர். நீதிமன்றங்களும் வருத்தமளிக்கின்ற வகையில், சில சமயங்களில் தங்கள் தீர்ப்புகளை வழங்குவதை காலதாமதப்படுத்தியே வந்திருக்கின்றன.

நடைபெறுகின்ற இந்த நாடகத்தில் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சரத் பவார் ஆகியோர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை காலம்தான் சொல்லும். ஆனாலும் ஒரு விஷயம் தெளிவாகிறது. வருங்கால வரலாற்றாசிரியர்கள் - தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகப் பயன்படுத்தினால் – விலை போகின்ற தன்மையை நிறுவனமயமாக்கி, அரசியலில் உள்ள நிறுவனங்களை  சிறுமைப்படுத்திய பிரதமராக நரேந்திர மோடியைப்  பற்றித்தான் அவர்கள் பேசுவார்களே தவிர, இந்திரா காந்தியைப் பற்றி அல்ல.

 நன்றி: https://thewire.in/politics/maharashtra-amit-shah-narendra-modi-democracy

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்