tamilnadu

img

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்கம் மாயம்

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 4.84 கோடி ரூபாய் மதிப்புள்ள 13.75 கிலோ தங்க நகைகள் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் திருக்கட்டளையைச் சேர்ந்த மாரிமுத்து. இவர் கடந்த 6 தினங்களுக்கு முன்பு வங்கியில் உள்ள நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்டு வந்தது. இதை அடுத்து, கடந்த 30-ஆம் தேதி, வல்லத்திராக்கோட்டை தைலமரக்காட்டு பகுதியில் மாரிமுத்துவின் கார் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 3-ஆம் தேதி, மாரிமுத்துவின் உடல் அழுகிய நிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. 

தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம், 6 நாட்கள் கழித்து தங்கள் வங்கி லாக்கரில் இருந்து 4.84 கோடி மதிப்புள்ள 13.75 கிலோ தங்கம் நகைகள் மாயமாகி இருப்பதாகவும், வங்கியின் கணக்கு வழக்குகள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாகவும், வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் புகார் அளித்துள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




;