கும்பகோணம் டிச.7- கும்பகோணத்தில் மேலக் கொட்டையூரிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்தன. மேலக்கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலராக அசாருதீன் பணியாற்றி வருகிறார். அருகிலுள்ள நாகக்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இடியும் நிலையில் மோசமாக உள்ளதால் அந்த அலுவலகத்தில் இருந்த அனைத்து பைல்களையும் எடுத்துக் கொண்டு கொட்டையூர் கிராம, கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்துள்ளனர். நாகக்குடி கிராம நிர்வாக அலுவலராக பாலமுரளி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வெள்ளி நள்ளிரவு மேலக்கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீரென தீ புகையுடன் வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன், நாகக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி, அலுவலகத்தில் தீ மேலும் பரவாமல் இருக்க பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தகவலறிந்த வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு யாராவது தீ வைத்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.