தென்னை காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூர் :- தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னை மரங்களை புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிர்வு மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றிலிருந்து பாதுகாத்திட தங்களது தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்வது அவசியம். ஒரு ஹெக்டருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான சுய முன்மொழிவு அளிக்க வேண்டும். காப்பீட்டு பிரிமியத்தில் மானியத்தொகையாக மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவிதம் மற்றும் 25 சதவிதம் மாநில அரசும் ஏற்று கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீத பிரிமிய தொகையை மட்டுமே விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து பிரீமியத்தை Agricultural Insurance company of India Ltd” Payable at chennai என்ற முகவரிக்கு வரைவோலையாக எடுத்து தென்னை சாகுபடி நில ஆவணங்களான சிட்டா மற்றும் அடங்கல் இணைத்து நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
உதவித் தொகையுடன் கயிறு பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர்:- தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே பிள்ளையார்பட்டி யில் கயிறு வாரியத்தின் மண்டல மையம் சார்பில் 6 மாத கால கயிறு ஆர்டிசன் பயிற்சி வகுப்பில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பெற விரும்புவோர் எழுதப், படிக்க தெரிந்திருக்க வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. பயிற்சி ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். விண்ணப்ப படிவங்களை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தியான விண்ணப்பங்கள், அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூர்- 613403 என்ற முகவரிக்கு 21.06.2019-க்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04362- 264655 ல் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.