tamilnadu

img

தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

அருந்ததிய மாணவரை பிளேடால் தாக்கிய கொடுமை

மதுரை, அக்.15 -  மதுரை அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை சக மாணவர் ஒருவர் பிளேடால் தாக்கிய கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. மதுரை பாலமேட்டை அடுத்துள்ள மறவபட்டியைச் சேர்ந்தவர் ராமு-ராஜாத்தி தம்பதியினர். இவர்களது ஒரே மகன் சரவணக்குமார் (வயது 14). இவர் பாலமேடு அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் புத்தகப் பையை ஒளித்து வைத்து விளையாடிய சம்பவத்தில் சரவணக்குமாரின் முதுகை பிளேடால் கிழித்து கொடுங்காயப்படுத்தியுள்ளார். கடந்த மூன்று தினங்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். 

ஆறுதல்

பாதிக்கப்பட்ட மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி.செல்லகண்ணு, மதுரை மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துராணி, மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன் , ஆண்டிச்சாமி, அலங்காநல்லூர் கிளைச் செயலாளர் ஓ.ஆர்.முருகேசன் ஆகியோர் செவ்வாயன்று சந்தித்து ஆறுதல் கூறி, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் முகிலரசனும் உடனிருந்தார்.

இதுபோன்று யாருக்கும் நிகழக்கூடாது

சரவணக்குமாரின் தாய் ராஜாத்தி கூறுகையில், எனது மகனின் முதுகை பிளே டால் கிழித்த அந்த மாணவர் முன்புறத்தை பிளேடால் கிழித்திருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்கும். இதை சம்பந்தப்பட்ட மாணவர் அறியவில்லை. ஊரில் உள்ள சில குறிப்பிட்ட சாதியினர் எப்படி யாவது வழக்கை திரும்பப்பெறச் செய்ய வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ள னர். எனது மகனுக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவம் இனிமேல் வேறு எந்தவொரு மாணவருக்கும் நிகழக்கூடாது என்றார்.

பாதுகாப்பு வழங்குக

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு கூறியதாவது:  கொடுங்காயம் அடைந்துள்ள சரவணக்குமாருக்கு தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அருந்ததிய மக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.