சிபிஎம் ரசீது வழங்கும் விழா
தஞ்சாவூர், ஜூன் 5- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை ரசீது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றி, கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.சம்சுதீன், சி.சிவசாமி, பி.முருகேசன், எஸ்.மெய்யழகன், ஏ.சந்திரா, எம்.பாஸ்கரன், பி.கலைச்செல்வி, ஆர்.உதயகுமார், டி.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்கல்
தஞ்சாவூர், ஜூன் 5-வீடு தேடி கர்ப்பிணி தாய்மார்களுக்கு பால், முட்டை, காய்கறி வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ஆவணம் பெரியநாயகிபுரம் வேட்டைக்காரன் தெரு மற்றும் பேராவூரணி நரிக்குறவர் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த நன்கொடையாளர் ஏஷியன் ஹெச்.சம்சுதீன் 5 கர்ப்பிணி தாய்மார்களை தத்து எடுத்து, அவர்களுக்கு பால், முட்டை, வெல்லம், காய்கறிகள், கீரை வழங்கினார்.
இதில், மருத்துவர்கள் ரஞ்சித், ஹம்சவேணி, பிரியதர்சினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் புண்ணியநாதன், பாலசந்திரன், கிராம சுகாதார செவிலியர் மரகதம், பயிற்சி செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நன்கொடையாளர் பங்களிப்புடன் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமலும், தாய் மரணம், சிசு மரணத்தை தவிர்க்கும் விதமாக, பின்தங்கிய ஏழை கர்ப்பிணிப் பெண்களை தேர்ந்தெடுத்து தலா ரூ.3 ஆயிரம் செலவில் 3 மாதங்களுக்கு செவிலியர்கள் மூலம் வீடு தேடிச் சென்று சத்துணவு வழங்கப்படுகிறது.
50 சதவீத மானியத்தில் பசுமைக் குடில் அமைக்க விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜூன் 5 -புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பசுமைக்குடில் அமைக்கவுள்ள விவசாயிகள் 50 சதவீத மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 20,000 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ.93.50 லட்சம் மானியத்தில் பசுமைக்குடில் அமைப்பதற்கு இலக்கீடு பெறப்பட்டு பணி ஆணை வழங்கி பணி நடைபெற்று வருகிறது. மேலும், புதிதாக பசுமைக்குடில் அமைக்கவுள்ள விவசாயிகளும் 50 சதவீத மானியத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சொட்டு நீர்பாசனம் அமைப்பதற்கு 898 ஹெக்டேர் பரப்பளவில் 1,198 விவசாயிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்க அனைத்து விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களை வழங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கஜா வாழ்வாதார தொகுப்பு திட்டத்தில் கூடுதல் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் காய்கறி சாகுபடி 1,500 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 லட்சம் மதிப்பீட்டில் இலக்கீடு பெறப்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் வீரிய ஒட்டு காய்கறி குழிதட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி தங்கள் பெயர், நிலஅளவு, நில உரிமை விவரங்கள், நடவு செய்ய திட்டமிட்டுள்ள பருவம், பரப்பு போன்ற விவரங்களை தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.