சென்னை,டிச.8 புதுச்சேரியில் கடைக்கு கொண்டு வரப்பட்ட வெங்காய மூட்டையை திருடியவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் சிக்கினர். புதுச்சேரி பெரிய மார்கெட்டுக்கு பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்தும் லாரிகள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்படும். புதுச்சேரிக்கு நாளொன்றுக்கு 100 டன் வெங்காயங்கள் தேவைப்படும் நிலையில், 20 டன் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. புதுச்சேரியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்கப்படு கிறது. இங்குள்ள பெரிய அங்காடியான குபேர் அங்காடியை ஒட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியில் காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கு, வழக்கமாக நள்ளிரவில் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் கடைகளின் வெளியே மூட்டை மூட்டையாக இறக்கி வைக்கப்பட்டு, அதி காலையில் சில்லறை வியாபாரி களுக்கு விற்பனை செய்யப்ப டும். பெங்களூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை லாரிகள் மூலம் வேல்முருகன் என்பவரின் கடைக்கு வந்த வெங்காய மூட்டைகளை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடையின் முன் இறக்கிவைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் 50 கிலோ எடை கொண்ட வெங்காய மூட்டையைத் திருடிச் செல்ல முயன்றார். இதைப் பார்த்த சுமை தூக்கும் தொழி லாளர்கள் அவரைப் பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய தில், புதுச்சேரி ஐயங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த காளிதாஸ் (43) என்பதும், வெங்காய விலை அதிகமாக உள்ளதால், மார்க்கெட்டிலிருந்து ஒரு வெங்காய மூட்டையைத் திருடிச் சென்று வீட்டில் வைத்து விட்டு, பின்னர் இரண்டாவது மூட்டையைத் திருடும் போது, மாட்டிக் கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிலிருந்து ஒரு மூட்டை வெங்காயத்தை தொழிலாளர்கள் மீட்டு கடைக்கு எடுத்து வந்தனர்.காளிதாஸின் மனைவி கேட்டுக் கொண்டதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்காமல் அவரைத் தொழி லாளர்கள் விடுவித்தனர்.